கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 7 நவம்பர், 2012

அதியமான்– ஔவை



வஞ்சப்புகழ்ச்சி அணி:-
ஔவையின் உரையாடலில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு.

அதியமான்(அரசன்) – ஔவை (புலவர்) நட்பைத் தமிழுலகம் நன்கறியும். 
ஒருமுறை, தொண்டைமான் என்னும் மன்னன் அதியனை எதிர்த்து போரிட எண்ணினான். 

அதியனோ மாவீரன்,
தொண்டைமான் தன் வீரத்தை அறியாது அழியப்போகிறானே என்று அதியனுக்கு வருத்தம். அதனால், ஔவையாரைத் தொண்டைமானிடம் தூதாக விட்டான்.

தூது சென்ற ஔவையார், அங்கு தொண்டைமானைப் புகழ்ந்தும், அதியனை இகழ்ந்தும் பாடியதே இப்பாடல்..
பாடலின் உட்பொருளை அறிந்த தொண்டைமான் அதியனுக்கு அஞ்சி போரைத் தவிர்த்தான்...

வஞ்சப்புகழ்ச்சி அணிக்குத் தக்க சான்றாக இப்பாடலைக் கொள்ளலாம்.

புறநானூற்றில் 95 வது அமைந்துள்ள இப்பாடல் வாள் மங்கலம் என்னும் துறையில் அமைந்துள்ளது..
இனி பாடலை உரையாடல் வழிக் காண்போம்,

தொண்டைமான் : வாருங்கள் புலவரே...
தமிழுக்குத் தொண்டு செய்யும் புலவரே தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது...

ஔவையார் : எனக்கும் மகிழ்ச்சி மன்னா...

தொண்டைமான் : அதியனின் நாட்டிலிருந்த தாங்கள் வந்திருக்கிறீர்கள்..
எனது வீரம், படை பலம் ஆகியவற்றைத் தாங்கள் அறிந்து கொள்ளுவது அவசியமாகும்...
வாருங்கள்...
பாருங்கள்.......
எனது படைக்கருவிகள் எவ்வளவு புதிதாகவும் கூர்மையாகவும் உள்ளன.............?


ஔவையார் : ஆம் நீ சொல்வது உண்மை மன்னா..... !

தொண்டைமான் : எப்படி இருக்கிறது எனது படைக்கருவிகள்...

ஔவையார் : இக்கருவிகள் மயிலின் தோகையால் அழகு செய்யப்பட்டு மாலை சூட்டப்பட்டு, நெய் பூசப்பட்டு, காவலையுடைய அகன்ற மாடத்தில் உள்ளன..
பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது.


தொண்டைமான் : சரியாகச் சொன்னீர்கள்...
அதியனின் படைக்கருவிகளை விட எனது படைக்கருவிகள் எவ்வளவு புதியன, கூர்மையானவை என்பதைத் தாங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள்....!

ஔவையார் : ஆம் மன்னா...

உனது படைக்கருவிகளைப் போல அதியனின் படைக்கருவிகள் இல்லை. அவனுடைய கூரிய நுனியுடைய வேல் முதலான அவைதாம் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து கொல்லனது பணிக்களரியில் எந்நாளும் கிடக்கின்றன.

தொண்டைமான் : அதியனின் வீரம் உணர்ந்தவனாக அவனோடு போரிட எண்ணிய எண்ணத்தை மாற்றிக்கொண்டான்...

ஔவையார் பாடலின் உட்பொருள்...

ஔவையார் பாடலின் பொருள் மேலோட்டமாகப் பார்த்தால் தொண்டைமானைப் புகழ்வது போலவும் அதியனை இகழ்வது போலவும் அமையும்.

தொண்டைமானின் படைக்கலங்கள் அழகுற விளங்குகின்றன என்னும் புகழ்ச்சிக்கு.......

நீ அதிகம் போர்க்களம் காணாதவன்....
ஆனால் அதியன் போர்க்களத்தில் தான் எந்நாளும் இருப்பவன்...

உனது கருவிகள் மாலை சூட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவன் எந்நாளும் போர் புரிவதால் அவனது படைக்கருவிகள் யாவும் கூர்மையின்றி கொல்லன் களரியில் தான் கிடக்கும் என்பதே உட்பொருளாக அமைகிறது.

இந்த ஆழமான உட்பொருளை தொண்டைமான் உணர்ந்தமையால் அதியனோடு போரிட எண்ணிய எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

கிஷன்

கருத்துகள் இல்லை: