கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 27 நவம்பர், 2009

மாவீரர் நாள்










நிலமிசை நீள்வான் கடலிசை சோலை
மலர்மிசை மூச்சுக் குழலிடை - வலிமையுந்
தாழா வுறுதியுந் தந்தவரே நம்தமிழ்
ஈழமா வீரர் நிறைந்து.
_அரசன்.தமிழரசன்_

சனி, 31 அக்டோபர், 2009

மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி

தமிழ்மொழி எல்லா மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்பது உண்மைதான்.தமிழனுக்குப் பெருமைதான்.ஆனால் தமிழ் தொலைந்ததே
_காசியானந்தன்_

சிந்திய,மங்கோலிய,சீன மொழிகளுக்கும் தமிழுக்கும் உறவு இருக்கிறது என்கிறார் கால்டுவெல்.
இந்தோ - அய்ரோப்பிய மொழிகளும் தமிழும் நெருங்கியவை என்கிறார் போப்.
அங்கேரி துருக்கி பின்னிசு போன்ற பதினொரு பின்னே - உக்ரியன் மொழிகள் தமிழிலிருந்து பிறந்தன.என்கிறார் கபோர் சென்(த்) கொதல்நய்.
சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவைச் சுட்டிக்காட்டுகிறார் லோகநாத முத்தரையர்.
எலாமைட் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்புண்டு என்கிறார் மக் ஆல்பின்.
கொரியன் மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ஆல்பர்ட்.
சப்பானிய மொழிக்குத் தமிழே மூலம் என்கிறார் ஓனோ.
ஆபிரிக்க மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள உறவை ஆய்ந்து நிறுவுகிறார் செங்கோர்.
பாசுக்கு மொழி உலகளாவப் பரவிய பண்டைத் தமிழ் மொழியின் ஒரு கூறே என்கிறார் இலாகோவாரி.
ஆத்திரேலியப் பழங்குடிகளின் மொழிகளும் தமிழும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்கிறார் பிரிச்சார்டு.
அமெரிக்கப் பழங்குடிகள் பேசிய மொழிகள் தமிழோடு கொண்டுள்ள உறவினை அறியத்தருகிறார் சமன்லால்.

தொல் தமிழர் காலத்திலேயே தமிழன் போன போன இடங்களில் எல்லாம் தமிழைத் தொலைத்தான் என்றுதான் இதற்குப் பொருள்._ காசியானந்தன்_

சனி, 26 செப்டம்பர், 2009

அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்!

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2009 19:21 |
கருணாநிதிக்கு “அண்ணா விருது“ வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்.

அன்புள்ள தம்பி,
செப்டம்பர் 26ம் நாள், என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்ற எண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை.
தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது கொள்கைகளையும், லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான், தமிழ்கூறும் நல்லுலகின் புகழ் பரப்புவான் என்றெண்ணியதுண்டு. ஆனால், தமிழ்கூறும் நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று நான் சொன்னதை, உன் குடும்பம் மந்திரி பதவிகளைப் பெற்றதும் “வடக்கு வழங்குகிறது, தெற்கு செழிக்கிறது“ என்று நீ மாற்றிவிட்டாய். எந்த காங்கிரஸ் கட்சியை நாம் ஒழித்து, அழித்து, பூண்டோடு அற்றுப் போகச் செய்யவேண்டும் என்று நாம் பாடுபட்டு 67ல் ஆட்சிக்கு வந்தோமோ, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவியை “தியாகத் திருவிளக்கு“ என்று பட்டமளித்து, பிணமாயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டி, அழகு பார்க்கிறாய்.
வரலாறை திரும்பிப் பார் தம்பி ! என் மறைவுக்குப் பின், என் உயிரினும் மேலான அன்பு இளவல் “நாவலர்“ நெடுஞ்செழியன் முதல்வராக பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையாள மன்னவனும் மக்களை வென்றவனுமான எம்ஜிஆரின் உதவியுடன், நாவலரைத் தோற்கடித்து, நீ முதல்வர் பதவியை நயவஞ்சகமாக பிடித்ததை நான் அறிவேன்.
ஆட்சியைப் பிடித்தவுடன், எந்த எம்ஜிஆரால் நீ பதவிக்கு வந்தாயோ, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீ நீக்கியதையும், அதற்காக தமிழக மக்கள் உன்னை 13 ஆண்டுகள் தண்டித்ததையும் வரலாறு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
67ல் ஆட்சிக்கு வரும் வரையில், பல போராட்டங்களை நடத்தியும், சினிமாவுக்கு வசனம் எழுதியும், தமிழக மக்களை நாம் ஏமாற்றி வந்தோம். ஆனால், நான் தொடங்கி வைத்ததை இத்தனை ஆண்டுகள் நீ திறம்பட நடத்துவாய் என நான் எதிர்ப்பார்க்க வில்லை.
எனது ஆட்சியில் “பொதுப் பணித்துறை“ அமைச்சராக நீ இருந்தபொழுது, “பொதுப்பணியை“ கவனிக்காமல், “கலைப்பணி“ யில் ஈடுபட்டு, “காகிதப்பூ“ கதாநாயகியை கர்ப்பிணியாக்கி நான் சொன்னதால், இரண்டாவதாக மணம் புரிந்ததையும் நான் அறிவேன்.
பெரியார் பாசறையிலே என்னோடு சேர்ந்து நீயும் பயின்றவன் என்பதால், ஓரளவாவது பகுத்தறிவோடு இருப்பாய் என எதிர்ப்பார்தேன். ஆனால், மதவாத பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து, பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு மகுடம் சூட்டுவதில், பக்கத் துணையாய் இருப்பாய் என்பதை யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார் ? சோதிடத்தில் நம்பிக்கை கொண்டு, அதனால் மஞ்சள் துண்டு அணிந்து, “மஞ்சள் துண்டு மடாதிபதி“யாய் மாறிய உன்னை பெரியார் மன்னிக்க மாட்டார்.
“ஒன்றே குலம், ஒருவனே தேவன்“ என்று நான் சமரசம் செய்தால், உன் அமைச்சர்களை தீ மிதிக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளாய்.
இக்கட்சியை உருவாக்கியதில், மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் எல்லாரும், இப்போது மறைந்து போய், அவர்களின் குடும்பங்கள் வறிய நிலையில் வாடிக்கொண்டிருக்கையில், உன் குடும்பம், உலக செல்வந்தர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது, காலத்தின் கோலமே !
மற்ற எல்லாவற்றையும் கூட மன்னித்து விடலாம் தம்பி.... இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில், நீ ஆடிய நாடகமும், லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கையில், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, காங்கிரஸ் காலில் விழுந்து கிடந்ததை நான் மன்னித்தாலும் காலம் மன்னிக்காது. “தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே“ என்று அழுது நடித்த நாடகம் தமிழர்களிடத்தில் எடுபடவில்லை. இத்தனை தமிழர்களின் உயிர் போனதற்கு நீதான் காரணம் என்று வரலாறு உன் பெயரை பதிவு செய்யும்.

ஆகையால், என் பெயரால், உனக்கு வழங்கப் படும் விருதுக்கு நீ எள் முனையளவும் தகுதி படைத்தவன் கிடையாது.
அண்ணா..

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

தமிழ் இலக்கிய வளம்

மிகத் தொன்மையன மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. இம் மொழி தமிழர் என்ற மக்களால் வளர்த்துக் காகப்படுகின்றது.இம் மொழிக்கு பல சிறப்புப் பெயர்கள் உண்டு.
இப் பெயர்கள் தமிழ் மொழியின் சிறப்பைக் குறிக்கின்றது. இதன் இனிமையை "தேன் தமிழ்", "தீந்தமிழ்" என்றும், இதன் இளமயை "பைந்தமிழ்" என்றும், இதன் செம்மயை சுட்டிக்காடுவதற்கு "செந்தமிழ்" என்பர்.

தமிழுக்கு உள்ள இன்னொரு சிறப்பு " முத்தமிழ்" ஆகும். முத்தமிழை மூன்றாகப் பிரிப்பார். இம் மூன்று பிரிவிகளை, இயல், இசை, நாடகம் என்பர். உரைநடை இலக்கியங்களை குறிப்பது இயற்றமிழ். இவை எண்ணத்தை வெளிப்படுத்த உதவும். இசைப்பாடல்களைக் குறிப்பது இசைத்தமிழ் ஆகும். இசைத்தமிழ் உளத்தை உருக்கி நெகுளச் செய்வன. முத்தமிழின் கடைசியான பிரிவு நாடகமாகும். இப் பகுதி பேச்சாலும் நடிப்பாலும் வெளுப்படுத்தி, மக்களை நல்வழிபடுத்தும்.

வேறொரு மொழியில் இல்லாத ஒரு சிறப்பு தமிழில் உண்டு. ஒரு பொருளின் பருவ கால பெயர்களை சுட்டிக்காட்டும். ஒரு இலையை கொழுந்து, தளிர், இலை, பழுப்பு, சருகு என்ரு அழைப்பர்.

கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் " யாவரும் ஊரே, யாவரும் கேளிர் என்றார்.
இதின் கருத்து என்னவென்றால், தமிழர் எல்லோருடையும் உரவினர்.


சங்கங்களாலும், புலவர்களாலும் தமிழ் வழக்கப்பட்டது. சங்கங்களை மூன்றாகப் பிரிப்பர், அவை முதற்சங்கங்கம், இடைச்சங்கங்கம், கடைச்சங்கங்கம் என்ரு பிரிப்பர். இவறுள் கடைசிச் சங்கத்தில் தோன்றிய நூல்கள் மட்டும் தான் எம்முடம் உள்ளது. கடற்கோள்கலாள் முதல் இரு சங்கங்களில் இருந்து, தோன்றிய நூல்கள் அழிக்கப்பட்டன.
3ம் சங்கங்கத்தில் பதினெட்டு நூல்கள் வந்தன. இவையை பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்பர்.
முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பட்டு என்ரு பல பாட்டுகள் உள்ளன. இந் நூல்களை பல புலவர்கள் இயற்றினர். இந் நூல்கள் தமிழ் மன்னரின், வீரம், கொடை, ஆட்சிச்சிறப்பு என்பவற்றை குறிக்கின்றன. இவைத் தவிர பதினெண்கீழ்க்கணக்கு என்ர 18 நூல்கள் உள்ளன.
இப் 18 நூல்களில் திருக்குறளும், நாலடியாரும் மிக சிறதவை ஆகும்.



சர்மிலன் குணபாலா

ஞாயிறு, 26 ஜூலை, 2009

வீக்கிங்கர் ( Vikinger )














வீக் - ( Vik )
வீக்கிங் என்ற சொல், வீக் என்கின்ற நோர்வேசியச் சொல்லில் இருந்து பிறந்தது. நோர்வேசிய மொழியில் ( வீக் - Vik ) என்றால் கடல் அல்லது ஆற்றின் கரையிலிருந்து தரைப்பகுதிக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் சிறிய கடல் அல்லது ஆற்றுப்படுக்கையைக் குறிக்கும்.

வீக்கிங் காலம் ( Viking Time )

வீக்கிங்காலம் எனப்படுவது, வரலாற்றிலே கி.பி 800 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 1050 ஆம் ஆண்டுவரையான சுமார் 250 ஆண்டு காலப்பகுதியைக் குறிக்கிறது. வீக்கிங் என்ற சொல் அக்காலப்பகுதியில், கண்டிநேவியாவில் ( Scavdinevian ) (நோர்வே, சுவீடன், டென்மார்க்) வாழ்ந்த மக்கள் கூட்டத்தைக் குறிக்கிறது. அக்காலத்தில் எழுந்த நூல்களில், வீக்கிங் ( Viking ) மக்கள் மிகக் கொடூரமானவர்களாகவே சித்தரிக்கப் படுகின்றனர். அக்காலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களே கல்வியறிவு உள்ளவர்களாக, மற்றும் நூலாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். அத்தோடு அவர்கள் அக்காலத்தில் இருந்த கிறித்துவ தேவன் கோயில்களில் மதகுருக்களாக இருந்திருக்கிறார்கள். இந்த மதக்குருக்களால் வீக்கிங்கைப் பற்றி எழுதிய நூல்களில், வீக்கிங் ( Viking )மக்கள் மிகக் கொடூரமானவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் வீக்கிங்கினர் அக்காலத்தில் பல கிறித்துவ தேவன் கோயில்களையும் கிறித்துவக் குருமடங்களையும் தாக்கி அழித்து அவற்றிலிருந்த பெறுமதி மிக்க அரிய பொருட்களைக் கொள்ளையிட்டுக் கொண்டு சென்றனர். இதனால் அக்காலத்தில் எழுந்த நூல்கள் வீக்கிங் மக்களை காட்டுமிராண்டிகளாகவே வர்ணிக்கிறது. எனினும் பிற்காலத்திலும், தற்காலத்திலும் எழுந்த வரலாற்று ஆய்வு நூல்கள் வீக்கிங் காலத்தை கண்டிநேவியாவின் பொற்காலம் என்றும், வீக்கிங் ( Viking )மக்களை பல்வேறு தனித் திறமை கொண்ட மக்களாகவும், ஸ்கண்டிநேவியாவில் பல்வேறு மாற்றங்களும் வளர்சியும் அவர்கள் காலத்திலேயே ஏற்பட்டதாக எடுத்துக் கூறுகின்றன. கொள்ளையிட்டதால் வீக்கிங் ( Viking )மக்கள் கொடூரமானவர்களாக சித்தரிக்கப்பட்டாலும், அவர்களிடம் பல்வேறு திறமைகள் காணப்பட்டன.

அவர்கள் கப்பல் கட்டுவதிலே மிகவும் திறமைசாலிகளாகக் காணப்பட்டுள்ளார்கள். அவர்களது கப்பல்கள் ஆழம் குறைந்த நீர்நிலைகளிலும் பயணம் செய்யலாம். அத்தோடு அவை மிகவும் உறுதியாவை அவற்றால் கொந்தளிக்கும் பெருங்கடலிலும் பயணம் செய்ய முடியும். மேலும் வீக்கிங் மக்கள் மிகச்சிறந்த கடலோடிகள், கப்பலோட்டிகள் மிகப்பரந்து விரிந்து கிடக்கின்ற. 'அற்லான்ரிக்" வாரினூடாகக் கப்பலைச் செலுத்தி பல்வேறு நாடுகளுக்கும் அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். தொலில்நுட்பம் விருத்தியடையாத அக்காலப்பகுதியில், கொந்தளிக்கும் மிகப்பெருங் கடலினூடாக பல்வேறு நாடுகளுக்கும் கப்பல்பயணம் மேற்கொள்ளக்கூடிய அறிவுடையவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். வீக்கிங் ( Viking ) மக்கள் மிகப் பெரும் வணிகர்களாகவும் விளங்கியிருக்கிறார்கள். பல்வேறு நாடுகளுக்கிடையே பொருட்களை கப்பலிலே ஏற்றிச் சென்று விற்பதிலும் வாங்குவதிலும் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அக்காலப்பகுதிலேயே கண்டிநேவியா ( Scavdinevian ) , ஏனைய ஐரோப்பிய நாடுகளோடு மேலதிக நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி, ஐரோப்பியாவின் ஒரு பகுதியாக மாறியது.

வீக்கிங்கினரில்( Viking ) கடல்பயணமும் கடல்கடந்த வணிகமும் கிழக்கிலே ருசியா ( Rasia ) வரையும், மேற்கிலே அமெரிக்கரையும் ( Amerika ) தெற்கிலே நடுவன் (மத்திய) கிழக்குவரையும் என்று மிகப்பரந்து கிடந்தது.
இந்த வீக்கிங்கினர் கப்பலிலே வெளிநாடுகள் சென்று மீண்டும் தாய்நாடு திரும்பும்போது பொருட்களையும் செல்வங்களையும் மட்டுமன்றி புதிய சிந்தனைகளையும் கலாச்சார கலை வடிவங்களையும் கொண்டுவந்து சேர்த்தனர்.
இவ்வாறு இவர்கள் வெளிநாட்டில் இருந்து உள்நாட்டிற்கு கொண்டுவந்து சேர்த்ததில் முக்கியமானதாக கிறித்தவ மதத்தைக் குறிப்பிடலாம். வீக்கிங் காலத்திலேயே கிறித்தவ மதம் கண்டிநேவியாவில்( Scavdinevian ) அறிமுகப்படுத்தப்பட்டது. கிறித்தவ தேவாலயங்களையும் கிறித்தவ குருமடங்களையும் கொள்ளையிட்டதால், ஏற்பட்ட கிறித்தவ மதத்துடனான தொடர்பு, பின்னர் கிறித்தவ மதக்குருமார்கள் இங்கு வந்து இங்குள்ள மக்களை அம்மதத்தைத் தழுவச் செய்தனர். அதனூடாக இங்கே (நோர்வேயிலே) கிறித்தவ மதம் பரவியது.

வீக்கிங் ( Viking ) காலத்திலே கலைகள் நன்கு பேணி வளர்க்கப்பட்டன. வீக்கிங் ( Viking )மக்கள் கலைகளிலே மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர். மரங்களிலே கலைவடிவங்களை செதுக்குவதில் வீக்கிங்கினர் திறமைசாலிகள். அவர்கள் வடிவமைத்த கப்பல்களின் முகப்புப் பகுதியில் விலங்குகள் மற்றும் மனிதர்களின் முகங்களை ஒத்த மரத்திலே செதுக்கப்பட்ட உருவங்கள் அழகு தருவதும் அத்தோடு கப்பல் முழுவதும் மரத்தினால் செதுக்கப்பட்ட கலைவடிவங்கள் காணப்படுவது அவர்களின் கலை வெளிபாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
வீக்கிங் ( Viking ) காலத்திலே பெண்களுக்கு கூடுதலான உரிமைகள் வளங்கப்பட்டிருந்தன. ஆண்கள் பொதுவாக கப்பலிலே வெளியிடங்களுக்கு பயணம் மேற்கொள்வதால், உள்நாட்டிலே பெண்களுக்கு கூடுதலான உரிமைகள் வளங்கப்பட்டிருந்தன. ஒரு வீட்டிலே அந்தவீடு அதுவுள்ள காணி மற்றும் சொத்துகள் பெண்களின் பெயரிலேயே பதியப்பட்டிருந்தன. சொத்துகள் சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்படும் போது பெண்களே முடிவுகளை எடுத்தனர். வீட்டில் இருந்த சொத்துகள் யாவிலும் பெண்களே உரித்துடையவர்களாக இருந்தனர். வீட்டு மற்றும் உள்ஊர் அலுவலகங்கள்( நிர்வாகங்கள் ) பெண்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.

வீக்கிங் ( Viking ) காலத்தில் வீரத்திற்கு மிகவும் முன்னுரிமை கொடுக்ப்பட்டது. ஆண்கள் யாவரும் மிகவும் வீரம் மிக்கவர்களாக வளர்க்கப்பட்டார்கள். ஆண்பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே போர்ப்பயிற்சி கொடுக்கப்பட்டு, எந்நேரமும் சண்டையிடுவதற்கும் போருக்குச் செல்வதற்கும் அணியமான ( தயார் ) நிலையில் வைக்கப்பட்டார்கள். எதிரியுடன் சண்டையிட்டு காயப்படுவதும் சண்டையிலே களப்பலியாவதும் பெரும் புனித செயலாகப் போற்றப்பட்டது. வீட்டிலே நோய்வாய்ப்பட்டு, அல்லது அகவை முதிர்ந்து இயற்கை மரணம் எய்வதிலும் பார்க்க, எதிரியுடன் சண்டையிட்டு களத்தில் இறப்பதை பெருமையாக மதித்தார்கள். அவ்வாறு இறப்பதன் மூலம் வீரர்கள் துறக்கம்( சொர்க்கம் ) அடைவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. பெரும் வீரர்களைப் போற்றுவதும் பின்னர் அவர்களின் கதைகளை பிறங்கடைகளுக்குச் ( தலைமுறையினர் ) சொல்வதும் அவர்களின் வழக்கமாக இருந்தது. ஒருவன் இயற்கை மரணம் அடைந்துவிட்டால், அவன் மார்பிலே வாளினால் கீறி அதிலே காயம் ஏற்படுத்தி பின்னர் அவனைப் புதைப்பார்கள். அதன் மூலம் அந்தவீரன் போரிலே விழுப்புண் அடைந்து இறந்தான் என பொருள்கொள்வார்கள் புதைத்த இடத்திலே வீரனுக்கு நடுகல்லும் நாட்டுவார்கள். அதன்பின் அந்த நடுகல்லைப் போற்றுவார்கள். இவ்வாறு அவர்களின் வீரவரலாறு தொடர்கிறது.

இவ்வாறான வீரவரலாறுகள் பழந்தமிழர் வாழ்விலும் காணப்படுவதை தொல்காப்பியத்திலும் புறப்பாடலிலும் காணலாம். அத்தோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் அம்மரபை கண்டுள்ளோம்.
வீக்கிங் மக்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்திருக்கிறது. அதாவது கணவன் இறந்துவிட்டால் அவனின் மனைவியும் தனது உயிரை மாய்த்துக்கொள்ளுவது. நம் தமிழரும் உடன் கட்டை ஏறுவது பற்றி கதைகள் மூலம் அறிந்திருக்கின்றோம்.

வீக்கிங் ( Viking ) காலப்பகுதியில் கண்டிநேவியாவில் ( Scavdinevian )
தோட்டநிலங்களுக்கு பெரும் தட்டுப்பாடு இருந்தது. வீக்கிங்கினர் மிகச்சிறந்த உழவர்கள் எனினும் பயிற்செய்கை நிலங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அவர்கள் வேறு நாடுகளை நோக்கி தொழில் நோக்கமாக கடல்கடந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. இவ்வாறு தொழில் தேடி, வாழ்வாதாரம் தேடி வெளிநாடு சென்றவர்கள், பின்னர் கடற்கொள்ளை, கொள்ளை வணிகம் பேரம்பேசுதல் என்று பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு, ஈற்றில் கண்டிநேவியாவின் ( Scavdinevian ) வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்ப்படவேண்டிய வீக்கிங் ( Viking ) காலம் என்ற பொற்காலத்தை ஏற்படுத்தினர். வீக்கிங் ( Viking ) காலத்தில் கட்டப்பட்ட கிறித்தவ தேவன் கோயில்கள் மிகப்பெரும் கலைப்பெட்டகங்களாக இன்றும் பேணப்படுகின்றன. வீக்கிங் காலத்தில் கட்டப்பட்ட கலைவடிவம் பொருந்திய கப்பல்கள் இன்றும் அருங்காட்சியகத்தில் வைத்துப் பேணப்படுகின்றன. அத்தோடு அக்காலத்து வீக்கிங் ( Viking ) மக்களின் வாழ்கை முறைகள் தொடர்பான அனைத்து காட்சிமங்களும்; அருங்காட்சியகத்தில் வைத்து பேணப்படுகின்றது. அத்தோடு இன்றும் கட்டப்படுகின்ற புதிய கட்டடங்களிலும் வீக்கிங் ( Viking ) மக்களின் கட்டடக்கலை வடிவங்களை புகுத்துவதிலிருந்து வீக்கிங் ( Viking ) மக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இன்று இயங்கும் பல நிறுவனங்கள் மற்றும் முக்கியமான இடங்களின் பெயர்கள் வீக்கிங் ( Viking ) பெயர்களையே தாங்கி நிற்கின்றன. பல்வேறு குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு, சிறுசிறு நிலப்பரப்புகளாக பிரிந்து கிடந்த நோர்வே ( Norge ) , ஒரே மன்னரின் கீழ் ஒரு மிகப்பெரிய தனி அரசாக உருவெடுத்ததும் வீக்கிங் காலப்பகுதியிலேயே ஆகும்.

இதுவரை கூறியவற்றால் வீக்கிங் காலம் கண்டிநேவியாவின் ( Scavdinevian )பொற்காலம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


தொகுப்பும் கட்டுரையும் : தயா. சொக்கநாதன்
பதிவேட்டுப் பதிவு : அரசன். தமிழரசன்.

ஞாயிறு, 19 ஜூலை, 2009

புதிய கல்விச் சிந்தனைகள்

மனித சமுதாயத்தின் ஆரம்பத்திலிருந்தே கல்வியும் வளர்ந்து வந்துள்ளது, என்பது சமூகவரலாற்றில் நாம் காணும் உண்மை. மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அதன் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் தமக்குப் பொருத்தமானதை, தேவையானதைக் கற்றுக்கொள்கின்றது. தேவைகள் மட்டுமல்லாமல் காலம், சூழல் என்பவையும் கல்வியில் அதன் போக்கு, பொருள், இலக்கு, முறை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அத்தகைய மாற்றங்களுக்கு அடிப்படைகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் சிந்தனையாளர்கள் வழங்குகின்றார்கள். அவர்களுடைய சிந்தனைகள் அவரவர் வாழ்நாட் கால, தேச, சமூக வர்த்தகமானங்களின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. இந்த அடிப்படையில் கல்வி பற்றிய சிந்தனைகள் பாரம்பரிய நோக்கில் பழையனவாகவும் மாற்ற வழக்கில் புதியனவாகவும் இனங்காணப்படக் கூடியன.

பிளற்றோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் காலத்திலிருந்து ரூசோ, கொமெனியஸ், புறொபல், பெஸ்டலோசி போன்றோரும் கூட்டாக,. டூயி, காந்தி, தாகூர் போனறோர் வரை பல்வேறு கோணங்களில் கல்வியின் தத்துவார்த்த அடிப்படைகளை விளக்கிய மேதைகளை நாம் காண்கின்றோம். அவர்களுடைய சிந்தனைகள் அவர்கள் வாழ்ந்த தேசம்ஃசமூகம் எதிர்நோக்கிய பிரச்சனைகள் என்பவற்றால் உருவாக்ப்பட்னஃநெறிப்படுத்தப்பட்டன என்பது கண்கூடு. ஆரம்பத்தில் ஆன்மீக நோக்கத்தை வலியுறித்திய சிந்தனைகள் காலப்போக்கில் அரசியல், பொருளாதார, சமூகவியல் அழுத்தங்களையொட்டி வளர்த்தமை கல்வி வரலாற்றில் பரவலாகக் காணப்படுவது@ அண்மைக் காலங்களில் அத்தகைய கல்விச் சிந்தனைகளில் புதிய புரட்சிகரமான போக்கு உருவெடுத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாயிருக்கின்றது.

இவ்விதம் உருவெடுத்துள்ள புதிய சிந்தனைப் போக்கில் கல்வியானது அகல்விரிப் பண்புடையதாய், ஒடுக்கப்பட்டவர்களின் உயர்வுக்காய், சமூக பேதங்களை மாற்றியமைப்பதற்காய், தற்சார்புத் தன்மை கொண்டதாய், மானிட மேம்பாட்டை உறுதிப்படுத்துவதாய் பல்வேறு ஒளிகளில் மிளிர்கின்றது.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கல்விலியற் துறைத் தலைவர் பேராசிரியர் வ.ஆறுமுகம் அவர்கள் புதிய கல்விச் சிந்தனைகள் நூலுக்கு வழங்கிய முன்னுரையிலிருந்து…..

சனி, 11 ஜூலை, 2009

அடங்காப்பற்றின் எல்லைகளும் ஊர்களும்

எல்லை வடக்கில் எழில்யாழ் பரவுகடல்
பல்லோர் புகழருவி தெற்கெல் லை – நல்லதிரு
கோணமலை கீழ்ப்பால் கேதீச்சரம் மேற்கில்
மாணத் திகழ்வன்னி நாடு

வடக்கு – ஆனையிறவுப் பரவைக்கடல்
கிழக்கு – முல்லைத்தீவுப் பெருங்கடல்
மேற்கு – மன்னார்ப் பெருங்கடல்
தெற்கு – அனுராதபுர மாவட்டம் (கன்டி)(நுவரமலாவௌ)


Mullaitivu District : முல்லைத்தீவு மாவட்டம்

Karikkaddumulai North : கரிக்கட்டு மூலை வடக்கு



1. Chilavattai : சிலாவத்தை
2. Kanukkeni : கணுக்கேணி
3. Karaiya – mullivaikkal : கரையா – முள்ளிவாய்க்கால்
4. Vellala – mullivaikkal : வெள்ளாள – முள்ளிவாய்க்கால்
5. Kumarapuram : குமரபுரம்
6. Mamulai : மாமூலை
7. Mullaithvu : முல்லைத்தீவு
8. Tanniyuttu : தண்ணியூற்று
9. Vadduvakallu : வட்டுவாகல்லு
10. Valayanmadam : வலையன்மடம்

Karikkaddumulai South :கரிக்கட்டு மூலை தெற்கு

11. Alampil :அளம்பில்
12. Andankulam :ஆண்டான்குளம்
13. Chemmalai :செம்மலை
14. Chivantamurippu :சிவந்தமுறிப்பு
15. Iramiyankulam :இரமியங்குளம்
16. Kakkuttaddamalai :காட்டுத்தட்டாமலை
17. Kanakanayankudiyiruppu :கனகநாயங்குடியிருப்பு
18. Karadippuval :கரடிப்பூவல்
19. Karuvaddukkeni :கருவாட்டுக்கேணி
20. Kokkilay :கொக்கிளாய்
21. Koddaippanikkankadu :கோட்டைப்பணிக்கன்காடு
22. Kokkuttoduvay :கொக்குத்தொடுவாய்
23. Kumilamunai :குமிளமுனை
24. Kunchukkulam :குஞ்சிக்குளம்
25. Taddamalai :தட்டாமலை
26. Tuwarankarai :துவரங்கரை
27. Tuvarankulam :துவரங்குளம்
28. Veppankulam :வேப்பங்குளம்

Mulliyawalai :முள்ளியவளை

29. Mulliyavalai :முள்ளியவளை
30. Tentukki :தேன்தூக்கி
31. Vattapalai :வற்றாப்பளை

Pரவாரமமரனலைசைரிpர : புதுக் குடியிருப்பு

32. Ampalavanpokkanai : அம்பலவன்பொக்கணை
33. Chankattavayal : சங்கத்தவயல்
34. Chundikkulam : சுண்டிக்குளம்
35. Kayankapirayanvayal : கயங்கப்பிரயன்வயல்
36. Keppapulavu : கேப்பாபுலவு
37. Koraimoddai : கோரைமோட்டை
38. Kuravil : குரவில்
39. Marutampuval : மருதம்பூவல்
40. Murukkuvedduvan : முறுக்குவெட்டுவன்
41. Palaiyadipiddi : பாளையடிப்பிட்டி
42. Palaiya Mattalan : பழைய மாத்தளன்
43. Putu Mattalan : பது மாத்தளன்
44. Pirappuvedduvan : பிரம்புவெட்டுவான்
45. Pulakkudiyiruppu : புலக்குடியிருப்பு
46. Puthukkudiyiruppu : புதுக்குடியிருப்பு
47. Vannavayal : வண்ணாவயல்
48. Velivayal : வெளிவயல்
49. Velankandal : வேலங்கண்டல்
50. Yappamoddai : யாப்பாமோட்டை

Karnavalpattu South : கருநாவல்பற்று தெற்கு

51. Aiyamperumal : ஐயம்பெருமாள்
52. Alankulam: ஆலங்குளம்
53. Alavedduvan : அலைவெட்டுவான்
54. Amayan : அமையன்
55. Ampamam : அம்பாமம்
56. Chittandimurippu: சித்தாண்டிமுறிப்பு
57. Karippaddamurippu: கறிபட்டமுறிப்பு
58. Katkidanku: கற்கிடங்கு
59. Koyakkulam: கோயக்குளம
60. Kokkavil: கொக்காவில்
61. Kunchukkulam: குஞ்சுக்குளம்
62. Kunchmuriyakkulam: குஞ்சுமுறியக்குளம்
63. Kuruntankulam: குருந்தன்குளம்
64. Manatkulam: மணற்குளம்
65. Manavalampaddamurippu: மணவாளம்பட்டமுறிப்பு
66. Maraikkutti: மரைக்குட்டி
67. Marantallininrakulam: மரந்தள்ளிநின்றகுளம்
68. Muruyakkulam: முறியக்குளம்
69. Murikandi: முறிகண்டி
70. Mutaliyakkulam : முதலியாகுளம்
71. Naduvitkulam: நடுவிற்குளம்
72. Olumadu: ஒலுமடு
73. Palanveli: பளன்வெளி
74. Panaininran: பனைநின்றான்
75. Panikkankulam: பனிக்கங்குளம்
76. Periyapuliyankulam: பெரியபுளியங்குளம்
77. Puluvaichchinatikulam : புலுவைச்சிநாறிக்குளம்
78. Putuirippuu : புத்துயிர்ப்பு
79. Tachchanadampan : தச்சனடம்பன்
80. Tachchanirampaikulam : தச்சனாறம்பைக்குளம்
81. Tampanaikkulam : தம்பனைக்குளம்
82. Vammil : வம்மில்
83. Maruthankulam : மருதங்குளம்
84. Valanklam: வேலங்குளம்
85. Vilattikkulam: விளாத்திக்குளம்

Tunukkay: துணுக்காய்
86. Alankulam : ஆலங்குளம்
87. Aninchiyankulam : அனின்சியன்குளம்
88. Chalampan : சாளம்பன்
89. Cholayankulam : சோலையங்குளம்
90. Kalvilan : கல்விளான்
91. Mallavi: மல்லாவி
92. Manatkulam: மணற்குளம்
93. Murikandi: முறிகண்டி
94. Murunkan: முருங்கன்
95. Navanankulam:நவனங்குளம்
96. Paddankaddiyaru:பட்டன்கட்டியாறு
97. Putukkulam: புதுக்குளம்
98. Putu-murikandi: புது-முறிகண்டி
99. Puvarasankulam: பூவரசங்குளம்
100. Tenniyankulam: தெண்ணியான்குளம்
101. Terankandal: தேரங்கண்டல்
102. Tunukkay: துணுக்காய்
103. Uyilankulam: உயிலங்குளம்
104. Veddai-Adaippu: வெட்டை-அடைப்பு

Melpattu North : மேல்பற்று வடக்கு
105. Alaikkalluppoddakulam: அலைக்கல்லுப்போட்டகுளம்
106. Amutankulam: அமுதங்குளம்
107. Chedikkenivei: செட்டிக்கேணிவெளி
108. Chinna-ittimadu: சின்ன-இத்திக்காடு
109. Etikadu: இத்திக்காடு
110. Kachchilaimadu: கச்சிலைமடு
111. Karuvelankadal:கருவேலங்கண்டல்
112. Kataliyarchamalankulam:கட்டயர்சமளங்குளம்
113. Katkulam: கற்குளம்
114. Kodalikkallu: கோடாலிக்கல்லு
115. Kulamurippu: கூழாமுறிப்பு
116. Kunchukkulam: குஞ்சுக்குளம்
117. Mudavankudiyiruppu: முடவன்குடியிருப்பு
118. Mandakattalvu: மண்டகட்டள்வு
119. Mannakadal:மன்னாகடல்
120. Marukkaramoddai: மருக்காரமேட்டை
121. Marutankulam: மருதங்குளம்(2)
122. Naduvitkulam: நடுவிற்குளம்
123. Odduchuddan: ஒட்டுசுட்டான்
124. Palampasi: பழம்பாசி
125. Periya – ittimadu: பெரிய - இந்திமடு
126. Periyakulam :பெரியகுளம்
127. Pulakkudiyiruppu: புலக்குடியிருப்பு
128. Putukkulam: புதுக்குளம்
129. Taddamalai:தட்டாமலை
130. Tanduvan: தண்டுவான்
131. Udaiyarchammalankulam: உடையார்சம்மளங்குளம்

Vavuniya Ditric : வவுனியா மாவட்டம்

Kilakkumulai South : கிழக்குமூலை தெற்கு

1. Agalla (Alaikalluppoddakulam)அலைகல்லுப்போட்டகுளம்
2. Alankulam ஆலங்குளம்
3. Alvanputukkulam ஆழ்வான்புதுக்குளம்
4. Ammivaittan அம்மிவைத்தான்
5. Arasankulam அரசங்குளம்
6. Achikulam ஆசிகுளம்
7. Chalampaikkulam சாளம்பைக்குளம்
8. Chinnakkumaresankulam சின்னக்குமரேசங்குளம்
9. Chinnakkulam சின்னக்குளம்
10. Chinnakkulam(2) சின்னக்குளம்(2)
11. Chinne-mayilankulam சின்ன-மயிலங்குளம்
12. Chinnappuliyankulam சின்னப்புளியங்குளம்
13. Vinnapputhukkulam சின்னப்புதுக்குளம்
14. Ekarpuliyankulam ஈகர்புளியங்குளம்
15. Gallkandamadu கல்கண்டமடு
16. Ichchankulam ஈச்சங்குளம்
17. Ilamarutankulam இளமருதங்குளம் (1)
18. Ilamarutankulam இளமருதங்குளம் (2)
19. Irampaikkulam இறம்பைக்குளம்
20. Iratperiyakulam ஈறற்பெரியகுளம்
21. Kallikkulam கள்ளிக்குளம்
22. Kalnaddinakulam கல்நாட்டினகுளம்
23. Karunkalikkulam கருங்களிக்குளம்
24. Karuvalpuliyankulam கறுவல்புளியங்குளம்
25. Kathirankulam கதிரன்குளம்
26. Kayilayarpuliyankulam கைலாயர்புளியங்குளம்
27. Kokkumadu கொக்குமடு
28. Kudakachchatkodiகுடாகச்சற்கொடி
29. Kudumpicheddiyurகுடும்பிச்செட்டியூர்
30. Kulankulam கூளான்குளம்
31. Kuruntankulam குருந்தன்குளம்
32. Madukanda (Mandukkoddai) மடுக்கந்தை(மண்டுக்கோட்டை)
33. Mahakachchatkodi மகாகச்சற்கொடி
34. Mahamayilankulam மகாமயிலங்குளம்
35. Maharambakulam மகாரம்பக்குளம்
36. Mamadu மாமடு
37. Maniyarkulam மணியர்குளம்
38. Maruthankulam மருதங்குளம்
39. Nalavarikalvirankulam நளவரிகல்விரன்குளம்
40. Navatkulam நாவற்குளம்
41. Nedunkulam நெடுங்குளம்
42. Nochchikulam நொச்சிக்குளம்
43. Nochchimiddai நொச்சிமோட்டை
44. Odavichinnakkulam ஓடவிச்சின்னக்குளம்
45. Paddanichchipuliyankulamபட்டாணிச்சிபுளியங்குளம்
46. Palaippani பளைப்பாணி
47. Panichchaikulam பனிச்சைக்குளம்
48. Panikkarpuliyankulam பணிக்கர்புளியங்குளம்
49. Paraniddakallu பறனிட்டகல்லு

குறிப்பு:பெரும்பான்மையாக அடங்காபற்றில் வாழ்ந்த தமிழினம் விரட்டியடிக்கப்பட்டு அந்நிலங்களில் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டு வருவதால்; சிங்கள அரசால் தமிழ் குடியிருப்புகளின் பெயர்களும் நீக்கப்பட்டுக் கொண்டே வரும்.......

செவ்வாய், 26 மே, 2009

மரணத்தை வென்ற மாவீரன்………



இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது?????? இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம், உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விழைவிக்கவில்லை.
அதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை, அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது, உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது.
பிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல, அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத் தான் வேண்டும்.
அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு போதும் கொள்ளை கொள்ள இயலாது நண்பர்களே.
மரணம் வெறும் உடலின் அடக்கம், மரணம் வெறும் உடல் இயங்கியலின் முடிவே அன்றி அது ஒரு போதும் இயக்கத்தின் நிறுத்தம் அல்ல, அது ஒரு போதும் இன, மொழி அடையாளங்களை வென்றெடுத்த ஒரு முத்திரையின் அழிவு அல்ல.
கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே சிதைக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் அழிவை, தொன்மையை, கலை, கலாச்சார வெளிப்பாடுகளை, மொழியின் நுண்ணிய வடிவங்களை ஒரு தனி மனிதனின் விடுதலைப் போராட்டம் மீட்டெடுத்து எங்கள் இளைஞர்களின் கைகளில் கொடுத்திருக்கிறது, அந்தத் தனி மனிதன் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும், புவியெங்கும் பரந்து விரிந்த எம் தமிழ்ச் சகோதரர்களின் உளமெங்கும் நிறைந்து இருக்கிறான்.
திரைப்பட மாயைகளில், ஆன்மீக அழிவுகளில், திராவிடக் கட்சிகளின் நீர்த்துப் புரையோடிப் போன கொள்கைகளில் கரைந்து போய் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்த எமது இனத்தின் இளைஞர்களை தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் அடையாளத்தை அழிப்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் முயன்றால் கூட முடியாது வீணர்களே……
உலகின் மூத்த குடிகளில் ஒன்றான எங்கள் இனம் தனது அடையாளங்களை உலகெங்கும் பொருளாதார ஓட்டங்களில் தொலைத்துக் கரைந்து கொண்டிருந்த போது இயற்கை எமக்கு வகுத்தக் கொடுத்த ஒரு கலங்கரை விளக்கம் தான் பிரபாகரன் என்கிற மனிதனின் விடுதலை வேட்கை, அந்த விடுதலை வேட்கையின் பின்னால் எண்ணற்ற தமிழ் இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் அணிவகுத்து நின்றன, தமிழ் இளைஞன் தமிழில் உரையாடுவதை பெருமையாக எண்ணத் துவங்கியதே இந்த மாவீரனின் வரவுக்குப் பின்னால் தானாய் நிகழ்ந்தது.
எங்கோ கிடக்கும் இன, மொழி அடையாள உறவுகளை எல்லாம் தனது உறவாய், தனது குருதியாய் தமிழன் சிந்தனை செய்யத் துவங்கியதே பிரபாகரன் என்கிற விடிவெள்ளி செய்த விடுதலை வேள்வி.
காலம் எங்கள் இனத்திற்கு ஒரு பன்னாட்டு அடையாளம் தருவதற்கு விளைவித்த அருந்தவம் தான் பிரபாகரன் என்கிற ஒரு அடையாளம், களப் போராட்டமாய் இருந்தாலும் அது அறவழிப் போராட்டமாய், பண்பாட்டு வெளியாய் நிகழ்ந்த ஒரு அற்புதம் தான் மாவீரன் பிரபாகரன் என்கிற அடையாளம்.
சாதிகள், மதங்கள், வர்க்க பேதங்கள், பாலின ஆளுமைகள் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அரசை, அறம் சார்ந்த தமிழ் கலாசார வலிமையை உலகின் எந்த ஒரு வல்லாதிக்க சக்திகளின் உதவியும் இன்றி தனி ஒருவனாய் நடத்தி வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்த தமிழர்களின் நெறி தான் பிரபாகரன்.
உலகின் பல்வேறு சக்திகள் கண்டு நடுங்கின அந்த மாவீரனைக் கண்டு, உலகின் அடுத்த வல்லரசு என்று தன்னைத் தானே பறைசாற்றிக் கொள்ளும் இந்திய ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்கள் அருகாமையில் ஒரு அறநெறி ஆட்சி அமைந்து தங்கள் கொள்ளைகளுக்கு கொல்லி வைக்கப் போகிறதோ என்கிற அச்சம் நிறைந்து அதனை அழிக்கும் செயல்களில் ஆவலாய் இருந்தது.
இவற்றை எல்லாம் கடந்து 33 ஆண்டுகள் தொடர்ந்து தான் கொண்ட இலட்சியத்தில் தமிழின விடுதலை என்கிற நெருப்பை ஒரு அணையாத விளக்காய்க் கொண்டு வந்து நமது கைகளில் தவழ விட்டிருக்கிற அந்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற செய்தி வேண்டுமானால் அந்த மாவீரனைக் கொன்று வண்ணக் கலவைகள் பூசிக் கனவுகளில் திளைக்கும் தமிழின விரோதிகளுக்கு தித்திக்கும் செய்தியாய் சில காலங்கள் இருக்கலாம், ஒரு போதும் உண்மையாய் தமிழ் உணர்வுகளின் இதய சிம்மாசனங்களில் இருக்கப் போவதில்லை.
உலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசிய போதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது, மரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல, மாறாக அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு, அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான்.
மரணம் தாண்டி வாழும் விடுதலையின் முகவரியை அழிக்க நினைக்கும் மூடர்களுக்குத் தெரியாது!!! விடுதலையின், வெற்றி முத்திரையை உலகெங்கும் தமிழரின் இதயத்தில் இருத்திக் காட்டிய மாவீரனுக்கு அழிவென்பது உடலால் இல்லையென்று!!! எம் இனம் முழுக்க நிறைந்து கிடக்கும் உணர்வுகளின் எதிரொலியை, எதிரிகளே, அழிக்க முடியாதென்ற உண்மை ஒரு போதும் புரியாது உங்களுக்கு, மரணம் எம்மைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கலாம், ஒரு போதும் எங்கள் விடுதலை வேட்கையை அல்ல.
எங்கள் விடுதலையின் பெயரைச் சொல்லி எச்சில் பொறுக்கும் ஏளன அரசியல் வீணர்களே. எங்கள் தலைவனின் துப்பாக்கித் தோட்டாக்களில் இல்லாத எந்த விடுதலையின் சுவடுகளும் உங்கள் மக்கள் மன்றங்களில் இல்லை.
எங்கள் போராளிகளின் உடைந்த கால்களின் வலிமையும் இல்லாத உங்கள் இறையாண்மையின் பெயரில் எங்கள் விடுதலையை இனி சிறுமைப்படுத்த வேண்டாம், சிதறடிக்கப்படும் எங்கள் குருதியின் வெம்மையில் ஒரு நாள் சுதந்திர ஈழம் மலர்ந்தே தீரும்.
மரணம் தாண்டி ஒரு தமிழ் மறையாகிப் போன பிரபாகரன் என்கிற அடையாளத்தை இன்னும் எத்தனை வல்லாதிக்கப் பேரினவாதிகள் வந்தாலும் துடைத்தழிக்க முடியாது நண்பர்களே, உண்மையில் மரணம் என்கிற இயற்கையின் மடியில் அவர் விழுந்திருந்தாலும் அந்த மாவீரனுக்குச் செய்யும் மரியாதையும், வீரவணக்கமும், அழுகையும் புலம்பலும் அல்ல, அந்த மாமனிதன் உலகெங்கும் தமிழ் மக்களின் உயிரில் பற்ற வைத்த விடுதலைப் பெருந்தீயின் வெம்மையை சிதறாமல் அவன் காலடிகளில் கொண்டு சேர்ப்பதே சிறந்த வீர வணக்கம்.
மரணத்தை வென்று எம் இன விடுதலை வரலாற்றில் நிரந்தரத் தலைவனாய் வாழும் பிரபாகரன் என்னும் பெயரில் உறுதி ஏற்போம், ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் உணர்வால் ஒன்று பட்டு எதிர்காலத் தமிழினத்தை சமூகப் பொருளாதார நிலைகளில் வெற்றி பெற்ற இனமாக, சாதி மத வேறுபாடுகளைக் கடந்த பேரினமாக மாற்றிக் காட்டுவோம், தமிழ் ஈழம் என்னும் தணியாத தாகத்தை வென்று காட்டுவோம்.
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம
- கை.அறிவழகன்

சனி, 2 மே, 2009

தமிழெழுத்து மாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா?

ஆரியச் சூழ்சியால் அடிமைப்பட்டு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் அல்மந்துழலும், அருமொழித்தமிழரை விடுவித்து முன்னேற்ற முயன்ற முனைவர் மூவருள் இறுதியரான, பெரியாரின் நூற்றாண்டு விழாவென்று விளம்பிய மட்டில் , ஏற்கனவே இருந்த இடம் தெரியாமல் இருந்தவரும் , பெரியாரோடு ஒருமுறையேனும் பேசியறியாதவரும், தன்மான வுணர்வும் தமிழ்ப் புலமையும் தக்கவாறில்லாதவரும், தன்மானப்போர்ப் படைத்தலைவர் போன்றும், தன்னேரில்லாத் தமிழதிகாரி போன்றும், நடித்துக்கொண்டு, தமிழ் உலகப் பொதுமொழியாகவும் தமிழின் ஒன்றிய நாட்டினங்களின் தலைவனாகவும் ஒரே வழி `விடுதலை` யெழுத்தை மேற்கொள்வதே என்று மேடைகளிற் பிதற்றியும், ஓரளவு அதிகாரம் பெற்றுக் குழுக்கள் அமைத்துக் கூட்டங்கள் கூட்டியும், தமிழ்ப் பகைவரும் தமிழறியாத பெருமாளரும் கர்ருக்குட்டிகளுமான தகுதியல்லா மக்களின் கருத்தைத் துணைகொண்டும், தம்வயப்பட்ட ஏடுகளிலெல்லாம் தமிழெழுத்தை மாற்றி, உலகில் இதுவரை எவரும் நிலைநாட்டாத தொன்றை நிலைநாட்டி விட்டதாகக் கொட்டமடித்து திரிவாராயினர்.

அரசகோபாலாச்சாரியார் 1937 - ல் தமிழ்நாட்டில் கட்டாய இந்திக் கல்வியைப் புகுத்தியலிருந்து, நான் இந்தியெதிர்ப்புப்பற்றிப் பெரியாருடன் தொடர்புகொண்டு இறுதிவரை நெருங்கிப்பழகினேன். அக் காலமெல்லாம், தமிழர் `விடுதலை` யெழுத்தை மேற்கொள்ள வேண்டுமென்று பெரியார் ஒரு கூட்டத்திலேனுஞ் சொன்னதுமில்லை; ஓர் இதலேனும் எழுதினதுமில்லை. எனக்கு முன்பே பெரியாரை யடுத்து அவர் தன்மானக் கொள்கையைக் கடைப்பிடித்து அவருக்கு வலக்கைபோல் துணையாயிருந்தவர் பர். (Dr) கி.ஆ.பெ. விசுவநாதம் என்னும் உலக நம்பியாரும், இதற்குச் சான்று பகர்வர்.

நான் திருச்சிராப்பள்ளியிற் பணியாற்றிய காலத்தில், 1938ஆம் ஆண்டில் பெரியார் ஈரோட்டிலிருந்து எனக் கெழுதியிருந்த 5பக்கக் கடிதம் மரபெழுத்திலேயே எழுதப்பட்டிருந்தது. நான் சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவனாயிருந்த காலத்தில், 1974ஆம் ஆண்டில்,பேரா.தி.வை சொக்கப்பனாரும், பேரா. பெரியசாகியும் எனக்குச் சிறப்புச் செய்ய ஏற்படுத்தியிருந்த கூட்டத்திற்குத் தலைமை தங்கிய பெரியார், தம் கையினால் எனக்கு வழங்கிய வெள்ளிப் பட்டயத்திற் பொறிக்கப்பட்டுள்ள பாராட்டு வாசகம் மரபெழுத்திலேயே உள்ளது.

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலை நீங்கிக் காட்டுப்பாடி விரிவிலிருந்த போது, நான் வருமானமின்றி யிருந்த நிலைமைலறிந்து பெரியார் தாமே என் உறையுள் தேடிவந்து இருநூறு உருபா வழங்கினார். அன்றும், தமிழெழுத்து மாற்றம்பற்றி என்னிடம் ஒன்றும் சொன்னதில்லை. பெரியாருக்கு என்றும் தன்மான இயக்கத்திலன்றித் தமிழ் வளர்ச்சியில் ஈடுபாடு இருந்ததே யில்லை. நூன், ஒருகால், அரைக்கால், உருபாம் காசில் இந்தியெழுத்தும் தெலுங்கெழுத்தும் இருந்தபோது தமிழெழுத் தில்லாமை பற்றிக் கிளர்ச்சி செய்யவேண்டுமென்று பெரியாருக் கெழுதினபோது, அவர், ” நான் உங்களைப் போற் பண்டிதனல்லேன். பொதுமக்களிடம் தொண்டு செய்து அவர் மூடப் பழக்கவழக்கங்களைப் போக்குபவன், நீங்களும் உங்களைப்போன்ற பண்டிதருமே சேர்ந்து அக்கிளரச்சி செய்யுங்கள்”
என்று மறுமொழி விடுத்துவிட்டார். இதிலிருந்து, தமிழ்மொழியோ எழுத்தோ பற்றி அவருக்குக் கடுகளவும் கவலையிருந்ததில்லை யென்பது வெட்டவெளிச்சமாகிறது. அவர் இந்தியை யெதிர்ததெல்லாம், பேராயக் கட்சியை யெதிர்ப்பதும் ஆரியச் சூழ்ச்சியைக் கண்டிப்பதும் தமிழ திராவிடர் நல்வாழ்விற்கு வழிவகுப்பதும் குறிக்கோளாகக் கொண்டதே யன்றி வேறன்று. இதை அவர் பல பொதுக்கூட்டங்களிலும் வெளியிட்டுச் சொல்லியிருக்கின்றார். விடுதலை|, குடியரசு| ஆகிய இதழ்களில் சில எழுத்து வடிவங்களை அவர் மாற்றியது, முற்றும் சிக்கனம் பற்றியதே, பெரியார் சிக்கன வாழ்வு நாடறிந்ததுÉ உலகறிந்தது.

தமிழெழுத்து மாற்றம் என்பது தேவையில்லாத ஒரு சிறு செயல். பெரியார் செயற்கரிய பெருஞ்செயல்களைச் செய்தவர். அவர்மீது ஒரு சிறு புன்செயலையேற்றுவது. ஆவர் பெயருக்கு இழுக்கே யாகும்.



நூல் : பாவாணர் நோக்கில் பெருமக்கள் ( 1980)

சனி, 4 ஏப்ரல், 2009

எழுத்து அசை சீர்படுத்துவோம்


**அறத்துப்பால் - பாயிரவியல் - முதற்பகவன் வழுத்து**

அகர முதல எழுத்தெல்லா - மாதி
பகவன் முதற்றே யுலகு.
*
இவற்றை பிரித்துப் பார்ப்போம்.
*
அக/ர முத/ல எழுத்/தெல்/லா - மா/தி
பக/வன் முதற்/றே யுலகு
**
இனி அசைப்படுத்துவோம்.
நிரைநேர் நிரைநேர் நிரைநேர்நேர் - நேர்நேர்
நிரைநேர் நிரைநேர் பிறப்பு
**
இனிச் சீர்படுத்துவோம்
புளிமா புளிமா புளிமாங்காய் - தேமா
புளிமா புளிமா பிறப்பு(குற்றியலுகரம்).
*
:)உரை
எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகவுடையன;உலகு ஆதிபகவன் முதற்று- அது போல உலகம் முதற்பகவனை முதலாக வுடையது. உரை _தேவநேயப் பாவாணர்.(திருக்குறள் தமிழ் மரபுரை 1)



கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்
*
கற்/றத/னா லா/ய பய/னென்/கொல் வா/லறி/வ
னற்/றா டொழா/அ ரெனின்
**
நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நிரைநேர்
நேர்நேர் நிரைநேர் மலர்
**
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
தேமா புளிமா மலர்
:)உரை
வால் அறிவன் நல்தாள் தொழார் எனின் - தூய அறிவுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழாதவராயின்;கற்றதனால் ஆயபயன் என் - நூல்களைக் கற்றவர்க்கு அக் கல்வியால் உண்டான பயன் யாதாம்?




மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
*
மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ் நாள்
*
நிரைநிரை நேர்நிரை நேர்நிரை நேர்நேர்
நிரைநிரை நேர்நிரை நேர்
*
கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் கூவிளம் நாள்
*
:)உரை
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் - அடியாரின் உள்ளத் தாமரை மலரின்கண்ணே அவர் நினைந்தமட்டில் விரைந்து சென்றமரும் இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை அடைந்தவர்;நிலமிசை நீடு வாழ்வார் - எல்லா வுலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வார்.
**



வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில
*
வேண்/டுதல்/வேண் டா/மை யிலா/னடி சேர்ந்/தார்க்
கியாண்/டு மிடும்/பை யில
*
நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்
நிரைநேர் நிரைநேர் மலர்
*
கூவிளங்காய் தேமா கருவிளம் தேமா
புளிமா புளிமா மலர்
*
:)உரை
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு; யாண்டும் இடும்பை இல - எங்கும் எக்காலத்தும் துன்பமில்லை.

**



இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
*
இருள்/சே ரிரு/வினை/யுஞ் சே/ரா விறை/வன்
பொருள்/சேர் புகழ்/புரிந்/தார் மாட்டு.
*
அசை வாய்பாடு
நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர்
நிரைநேர் நிரைநிரைநேர் (மாட்டு)
*
சீர் வாய்பாடு
புளிமா கருவிளங்காய் தேமா புளிமா
புளிமா கருவிளங்காய் காஃசு
**
:)உரை
இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து; இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இருவினையும் இல்லாதனவாகும்.


பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
*
பொறி/வா/யி லைந்/தவித்/தான் பொய்/தீ ரொழுக்/க
நெறி/நின்/றார் நீ/டுவாழ் வார்.
*
அசை வாய்பாடு
நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநேர்
நிரைநேர்நேர் நேர்நிரை (வார்).
*
சீர் வாய்பாடு
புளிமாகாய் கூவிளங்காய் தேமா புளிமா
புளிமாகாய் கூவிளம் நாள்
*
:)உரை
பொறிவாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளையும் வழியாகக் கொண்ட ஐவகை யாசைகளையும் விட்ட இறைவனது; பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் - மெய்யான ஒழுக்க நெறியில் ஒழுகினவர்; நீடுவாழ்வார் - வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார்.
**


தன‌க்குவமை இல்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது.
*
தன‌க்/குவ/மை இல்/லா/தான் றாள்/சேர்ந்/தார்க் கல்/லால்
மனக்/கவ/லை மாற்/ற லரிது.
*
அசை வாய்பாடு
நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்
நிரைநிரைநேர் நேர்நேர் பிறப்பு.
*
சீர் வாய்பாடு
கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா
கருவிளங்காய் தேமா பிறப்பு.
*
(இ.ரை)தனக்கு உவமை இல்லாதான் - ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய; தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - திருவடிகளை யடைந்தார்க்கல்லாமல்; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின் கண் நிகழுந் துன்பங்கலையும் அவற்றால் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.
**


அறவாழி யந்தனன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது.
*
அற/வா/ழி யந்/தனன் றாள்/சேர்ந்/தார்க் கல்/லாற்
பிற/வாழி நீந்/த லரிது.
*
அசை வாய்பாடு
நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர்நேர் நேர்நேர்
நிரைநேர் நேர்நேர் (லரிது)
*
சீர் வாய்பாடு
புளிமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமா
புளிமா தேமா பிறப்பு
*
உரை:
அற ஆழி யந்தணன் - அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்தாருளாளனுமாகிய இறைவனது; தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - திருவடியாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.
**

__தேவநேயப்பாவாணர் (திருக்குறள் தமிழ் மரபுரை 1).

சனி, 28 மார்ச், 2009

வேர்ச்சொற் சுவடி

1. அர்
அர் = ஒலிக்குறிப்பு

அரவம் = ஒலி
அரா, அரவு, அரவம் = இரைவது, ஒலியறிவது, பாம்பு
(௨)
அரி = அர் என்னும் ஒலி தோன்றச் சிறிது சிறிதாய்க் கடி அல்லது தின்.
அராவு = தேய். அரம் = அராவுவது. அரம்பம் = அராவுவது, அறுப்பது.
அரி = அறு. கோடு ( கிளை ) + அரி = கோடரி - கோடாரி - கோடாலி.
அரிவாள் = அரிக்கின்ற வாள். அரிவாள்மணை.
அரி = அழி. அரி = அழிப்பது, பகைவன், சிங்கம்(வ.)
கோள் + அரி = கோளரி.
அரங்கு = அறுத்த அரை, இசை நாடக மேடை.
அரங்கம் = ஆற்றிடை அறுக்கப்பட்ட நிலம்.
திருவரங்கம் - ஸ்ரீரங்கம்.
அரக்கு = தேய், அழி.
அரக்கன் = (இராட்சதன்.)
அரன் = அழிப்பவன், தேவன் , சிவன்
அரசு = பகைவரை அழிப்பவன் , வேந்தன். அரசு + அன் = அரசன்.
அரசு = தலைமையான அல்லது தெய்வம் தங்கும் மரம்.
அரசன் - அரைசன் - அரையன் - ராயன் - Roy

(2).
அறு

அர் - அறு
அறு = வெட்டு, பிள, பிரி, நீங்கு, நீக்கு.
அறுவாள் = அற்க்கின்ற வாள்.
அறவு = நீக்கம், வரையறு - வரையறவு
அறுதி = முடிவு.
அறை = அடி, அறுக்கப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட இடம்.
உறுப்பறை = உறுப்பறுக்கப்பட்டது. வரையறு - வரையறை.
அறுகு = அறுத்தறுத் தோடிப் படரும் புல்.
அறுவை = அறுக்கும் துணி.
அறுப்பு = பயிரை அல்லது தாலியை அறுத்தல்
அறுவடை = அறுப்பு.
அற்றம் = பிறர் இல்லாத சமையம்.

3.அர்
அர் - அரு = அழி, குறை, நெருங்கு
அருகு = குறைவாகு, நெருங்கு, பக்கம்.
அருகண்மை - அருகாமை
அருகன் = நெருங்கினவன், உரிமையுடையவன்.
அருகதை = உரிமை
அருமை = குறைவு,கூடாமை, சிறப்பு, விருப்பம்.
அருமைவந்த - அருமந்த.
அருந்தல் = குறைவு, விலையுயர்வு.
அரிது = கூடாதது, வருத்தமானது.

4.அள்
அர் - அள் - அண் - அடு.
( a ) அள் = நெருங்கு, நெருங்கச் சேர்த்தெடு.
அண், அண்ணு = நெருங்கு.
அண்மு = நெருங்கு.
அண்டை =பக்கம். 7ஆம் வேற்றுமை உருபு
அடு = நெருங்கு, அடர் = நெருங்கு, அடவி = நெருங்கின காடு.
அடுக்கு = நெருங்கவை.
அடுத்த = நெருங்கின, பக்கமான. இன்னொரு.

( b ) அடை = அடுத்தது, அப்பம். அடை – ஆடை
பாலாடை = பாலாடை, சங்கு.
அடுக்கும் = நெருங்கும், தகும். ஊனக்கிது அடுக்குமா?
அடங்கு = நெருங்கு, உள்ளமை.
அடக்கு (பிற வினை)
அடக்கம் = ஒடுக்கம், உள்ளீடு, புதைப்பு.
அடை = நெருங்கு, சேர், பெறு.
(ட = ய) அயல் - அசல் = பக்கம், அன்னியம்

5.அர்
அர் = சிவப்பு அ - இ. ர் - ல்
அரத்தம் = செந்நீர், அலத்தகம் ® செம்பஞ்சுக் குழம்பு
அரக்கு = சிவந்த மெழுகு.
அருணன் = சிவப்பு
அருணம் = காலைச்சூரியன்
அரிணம் = சிவப்பு, மான்.
இரத்தம் = செந்நீர்.
இரத்தி, இலந்தை = சிவந்த பழத்தையுடைய முட்செடி.
இராகி = கேழ்வரகு.

6.
இ - கீழுறற் குறிப்பு
இறங்கு ® கீழே வா.
இரு = கீழ் உட்கார், தங்கு, வாசஞ்செய்.
இருப்பு = தங்கள், ரொக்கம்
இருக்கை = ஆசனம்
இழி = இறங்கு, கீழாகு.
இளி = இழிவு.

7.கில்
இ - கில்
( a ) கில் - கல் = தோண்டு, தோண்டுங் கருவி.
கில் - கிள் - கீள் - கீழ்
( b ) கிள், கிள்ளு = நகத்தைக் கீழே பாதி. கிள்ளுக்கீரை.
கிள்ளை, கிள்ளி – கிளி = கனிகளைக்கிள்ளுவது.
( c ) கிழி = கீறு, துணியைக் கிழி.
கிழி = முடிச்சு, துணி, படம்.
கீள் கிழி. கீளார் கோவணம்.
( d ) கீழ், கீழ்க்கு – கிழக்கு = கீழிடம், ஒரு திசை.
( e ) கீறு = கோடு கிழி. கீற்று = கீறி அறுத்த துண்டு, துண்டு.
கிறுக்கு = கோடு கீறு, பைத்தியம்.
கீறல் = கோடிழைத்தல், எழுத்தறியாமை உணத்துஞ் சொல்.
கீச்சு = கீறு.
8.
இ = பின்னிடற் குறிப்பு.
( a )இடறு = பின்விழத் தடுக்கு.
இடை = பின்னிடுயு, தோற்றோடு. இடக்கை = தோற்றக்கை.
இடம் = தோல்வி, இடர் = துன்பம்.
ஒ.நோ : வலக்கை வெற்றி பெற்ற அல்லது வலிய கை.
இடைஞ்சல் = பிற் செலுத்தும் தடை.
( b )இட = இழுத்துப்பறி.
இணுகு இணுங்கு = இழுத்துப்பறி.
இழு = பின்னுக்குக்கொண்டு வா.
இறை = தண்ணீரை இழு, பின்னுக்குத் தெறி, தெறி.

9.இழு
இ - இள் - இழு = பின்னுக்குக் கொண்டுவா.
இழு - இழுகு = பின்னோக்கித் தடவு.
( a )இழுப்பு = இழுத்தல். இழுவை = இழுத்துக் கடத்தல்.
இழுது = இழுக்கும் மை.
இழுது - எழுது = இழுத்து வரை.
இலக்கு, இலக்கி = எழுது. இலக்கு = எழுத்து
இலக்கு - இயம் = இலக்கியம் = நூற்றொகுதி.
இலக்கு - அணம் = இலக்கணம் = மொழியொழுங்கு.
இலக்கம் = எழுத்து, எண்குறி, எண்.
( b )இழு - ஈர் - இழு, இழுத்தறு.
இழு - இசு - இசி. இழுப்பு = இசிவு = ஜன்னி.
இழுக்கு = இழுகுவது, வழுக்கல், வழு.
இளை = மூச்சிழு.

10.இ - இள்
( a ) இளை = மூச்சிழு, மெலி
இளைப்பு = மூச்சிழுப்பு, மெலிவு, தளர்ச்சி.
இளைப்பு ñ ஆறு இளைப்பாறு.
ஈளை = கோழை, இளைப்பு.
இழை = இழுத்துச் செதுக்கு, நூலிழு.
இழைப்பு - உளி = இழைப்புளி.
இழை = இழைத்துச் செய்த நகை. இழுத்த நூல்.
இழைப்பு = காச நோய்.
இளைத்தவன் = மெலிந்தவன், சிறியவன்.
``ஊருக்கிளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி``
( b )இளம், இளமை = சிறு பருவம்.
இளவல் = தம்பி. இளைஞன் = வாலிபன், வீரன்.
இளையவன் = ஆண்டிற் சிறியவன்.
( c )இளைப்பம் = தாழ்வு, இளக்காரம் = மென்மைபற்றி மேற்செல்லல்.
இளகு = மெல்லிதாகு, இளக்கம் மென்மை.
இணங்கு = மென்மையாகு, உடன்படு.
இலகு = எளிது, கனமின்மை, இலேசு = எளிது, கனமின்மை.
இகழ் = எளிமையா யெண்ணு.

11.எள்இள் - எள்
எண்மை, எளிமை = வறிய நிலை
எளிது = இலேசானது.
எள் சிறிய கூலம் ( தானியம் ). எள்ளு = இகழ்
எள்கு எஃகு இளகிய இரும்பு.
ஒ.நோ : உருகியது உருக்கு.
எய் = இளை, சோம்பு
எ = ஏ
ஏளனம் = இகழ்ச்சி. ஏழை = எளியவன், அறிவிலி.
ஏசு = இகழ்.

12.பின்
இ - பின்
( a )பின், பின்னே, பின்னை, பின்னர், பின்பு, பின் + கு = பிற்கு.
பின்காலே = பின்னுக்கு.
பின்று = பின்.
பிந்து = பிற்படு.
( b )பின் - பிற, பிறம், பிறம்பு, பிறகு, பிறக்கு, பிறக்கிடு.
பிறகு பிறக்கு = பின்பு, முதுகு.
பிறக்கிடு = பின்னுக்கிடு.
பிறம்பத்தங்கால் = பின்னங்கால்
பிற = மற்ற. பிறன் = மற்றவன், அயலான், பிறத்தியான் = அயலான்.

13.புற
பிற – புற – புறம் - புறன்.
புறம் = பின், முதுகு, வெளி, வெளிப்புறம், மேற்பக்கம், பக்கம்.
புறம் = வெளிநிலம், முல்லை நிலம், நிலம். அறப்புறம் = அறநிறம்.
புறம்போக்கு = எல்லாரும் செல்லும் வெளிநிலம்.
புறம் = புறா = புறவு = புறவம்.
புறா = முல்லை நிலத்திலள்ள பறவை.
புறப்படு = வீட்டைவிட்டு வெளிப்படு, பயணந் தொடங்கு.
புறப்பாடு = வெளிக்கிளம்பிய கொப்புளம், புறப்படுதல்.
புறம்பு = வெளி, அயல்.
புறணி = மேற்பட்டை, புறங்கூற்று.
புறங்கூறு = பின்னாற்சொல், பின்னாற் பழி
புறக்காடு = ஊருக்கு வெளியுள்ள சுடுகாடு
புறங்காட்டு, புறங்கொடு = முதுகு காட்டு, தோற்றோடு.
புறம் = புறப்பொருள், புறம்.
புறன் = புறங்கூற்று.

14.இடு
இள் - இடு.
இடுகு = சிறுத்துப்போ.
இடுக்கு = நெருக்கு, நெருக்கமான இடம்
இடுக்கி = நெருக்கிப் பிடிக்கும் குறடு.
இடுக்கம் = நெருக்கம்.
இடுப்பு, இடை = சிறுத்த அரை.
இட்டிது = சிறியது.
இட்டிகை = இடுக்கமான வழி.
இண்டு = சிறுய துவாரம்.
இடுகு = இறுகு
இறுக்கம் = நெருக்கம், திணிவு, உறுதி.

15.ஆள்
( a )ஆள் = ஆட்சி செய், பயன்படுத்து, வழங்கு.
ஆள் + சி = ஆட்சி
ஆள் = பிறவற்றை யாளும் மனிதப் பிறவி.
( b )ஆள் - ஆண் = ஆட்சியிற் சிறந்தவன்
ஆண்மை = ஆண்டன்மை, வீரம்.
ஆண் - ஆடு - ஆடுஉ, ஆடவன்.
ஆள் - ஆணை, ஆண் - ஆணவம் = ஆண்டன்மை, வீரம், அகங்காரம்.

16.
இற
இற = வளை
இறவு, இறப்பு, இறவாணம், இறை = வளைந்த தாழ்வாரம்.
இறா, இறால், இறாட்டு = பெருங்கூனி.
ஒ.நோ கூன் - கூனி
இறால் = வட்டமான தேன் கூடு.
இறாட்டி = வட்டமான எரு.
இறை = வளைந்த முன்கை.
இறைஞ்சு = வளை, வணங்கு.

17.இறு
இற - இறு
பயிர், மனித வுடம்பு, சூரியன் என்பவைவ வளைந்தபின் இறத்தலை அல்லது மறைத்தலை நோக்குக.
இற = சா
இறு = முடி. இறுதி முடிவு. ஈறு = விகுதி.
இறு = பயணத்தை முடி, தங்கு.
இறை, இறைவன் ® எங்கும் தங்கியிருப்பவன், கடவுள், அரசன்.
இறு = கடனைத் தீர், செலுத்து.
இறை = வரி.
இறு = ஒருவன் சொன்னபின் பதில் கூறு.
இறை = விடை

18.
இர்.
இர் - கருமைக் குறிப்பு.
இரா, இராத்திரி, இரவு = கரிய இருட்டு வேளை.
இறடி = கருந்தினை.
இருமை = கருமை.
இரும்பு = கரிய உலோகம்.
இருந்தை = கரி
இருள் = ஒளியின்மை
இ - அ. அறல் = கருமணல்.
இ - எ. எருமை = கரிய மாட்டு வகை.
எருது = கருங்காளை, காளை.
எ - ஏ. ஏனம் = பன்றி
(ஏனை) – யானை = கரிய விலங்கு.
ஏனல் = கருந்தினை, ஏனம் = கரும்பாத்திரம்.

19.
ஊ.
ஊ = முற்செலற் குறிப்பு.
ஊங்கு = முன்பு
ஊக்கு = முற்செலுத்து, உற்சாகப்படுத்து.

20.
முள்.
ஊ – உ – முள்
முள் = முன்சென்று பதி, நகத்தைப் பதி, பதியும் கூரான உறுப்பு.
முளவு = முள்ளம் பன்றி.
முட்டு = முற்சென்று தாக்கு.
முட்டை = முட்டி வருவது.
முட்டு, முட்டுப்பாடு = முட்டித் திண்டாடல்
முடை = முட்டுப்பாடு.
முண்டு முட்டிக் கிளம்பு.
முட்டி = கை கால் எலும்புப்பொருத்து.
முழம் = கை கால் எரும்புப் பொருத்து. முன்கை யளவு.
ஊ – ஊ. மூட்டு =பொருத்து, கரும்புக் கணு.
ஊ – ஒ. மொழி = கை கால் பொருத்து, கரும்புக் கணு.
மொட்டு = முட்டிவரும் அரும்பு.

21.
முன்.
முள் - முன்.
( a ) முன் = முன் பக்கம், முன்பு, முன்னர், முன்னம், முன்னே, முன்னை.
முன்னு = எதிர்காலம்க் காரியத்தை நினை, நினை.
முன்னம் - முனம் - மனம்.
முன்னம் = முன்நினைவு, நினைவு, குறிப்பு, மனம் = நினைவுப்பொறி.
முன்னு – உன்னு நினை.
முன்னிடு = ஒரு கருமத்தை முன்வை. – ஒரு காரியத்தை முன்னிட்டு|
என்பது வழக்கு.
முனி = முன்பக்கம், முனி – நுனி.
முனை = போரில் முன்னணி, நுனி.
முனை – நுனை = கொனை.
முன்று = முன்பு.
( b ) முந்து = முற்படு. முந்தல் முதல் முன்னிடம், முன்தொகை.
முதல் - இ முதலி. முதலி - ஆர் முதலியார்.
முதல் - ஆளி = முதலாளி.
( c ) முந்து – முது. முதுமை = பழமை, மூப்பு.
முதுக்கு = உறை முதுக்குறை.
முதுமை = பழமை, பிற்காலம்,
முதுகு = பின்புறம், மூத்தோர் ஆண்டில் மிகுந்தோர், பெரியோர்.
முது – முதிர் மூ, விளை, முற்று.
முதியோர் = கிழவர், மூத்தோர். முதுமகன் = கிழவன்
முதுகண் = அறிவு முதிர்ந்தோர் அறிவுரை.
மூதில் = பழங்குடி. மூதூர் = பழவூர்.
மூரி = கிழ எருது. முது - மூ. மூ ñ பு = மூப்பு
மூப்பன் ® மூத்தவன், ஒரு பதவி, ஒரு குலம்.

22.
முகு
முகம் = தலையின் முன்பக்கம், முன்பக்கம்.
முகர் = முகம், முக வுருவமுள்ள முத்திரை.
முகரா = ஒரு நாணயம்
முகரை = முகம்.
திருமுகம் = முத்திரையுள்ள கடிதம்.
முகத்திரை = முத்திரை. முகத்திரம் மோதிரம்
முகம் - முகன் - முகனை – மோனை சீரின் முன்னெழுத்து.
முகப்பு = முன்பக்கம். துறைமுகம் நிலத்தின் முன்பக்கமான நெய்தல் நகர்.
முகம் - நுகம்.
முகம் = முன்புறம், பக்கம்.
முகிழ் = முன்தோன்றும் அரும்பு, குவி, தோன்று.
முகை = அரும்பு.
ஊ – ஒ. மொக்குள் ® அரும்பு.

23.
முகு
முகம் = முன்னால் நீண்டிருக்கும் மூக்கு.
முகடு = மூக்குப் போன்ற கூரை.
முகட்டுப் பூச்சி - மூட்டைப் பூச்சி - மூட்டை.
முகடி = முகட்டுத்தரத்தில் இருப்பதாகக் கருதப்படும் பேய், மூதேவி.
முகடி = முகரி.
முகடு = மலை முதுகு.
முக்கு = தெரு மூலை, மூக்குப் போன்ற சந்து.
முக்கை = ஆறு திரும்பும் மூலை.
மூக்கு = முன்னால் நீண்டிருக்கும் உறுப்பு, மூக்குப்போல் நீண்டு கூரியது.

24.
முகு.
முகர் = மூக்கால் மணத்தை அறி.
முகர் - நுகர் மணத்தையறி, இன்புறு.
முக = மணத்தையறி, விரும்பு.
முக – மோ விரும்பு, காதல்கொள். மோ ñ கம் மோகம்.
மோகம் - மோகி. மோகினி = காதலூட்டிக் கொல்லும் பெண்பேய்.

25.
முகு.
முகம் = முதல்
முகமை முகாமை = தலைமை
முக்கியம் = தலைமையானது, சிறந்தது.
முகம் - மகம், மகமை = தலைமை, ஊர்த்தலைவனுக்குக் கொடுக்கும் வரி.
மகன் = படையில் பெரியவன், மனிதன்.
முக – மா பெரிய, மக – மகி. முகமை மகிமை = பெருமை.

26.நுள்.
முள் - நுள்
நுழைவு = நுணுக்கம்.
நுழை = இடுக்கமான வாயிலிற் புகு.
நுண்மை = மிகச் சிறுமை. நுண் + பு = நுட்பு. நுட்பு + அம் = நுட்பம்
நுணங்கு = நுட்பமாகு.
நுணி = கூரிதாகு.
'நுழைவும் நொசிவும் நுணங்கும் நுண்மை" ( தொல். ஊரி.78 )
நுணுகு = சிறிதாகு. நுணுக்கம் = நுட்பம்.
நொய் = நுட்பமானது, நொய்ந்து கெடு.
குறுநொய் = உடைந்த அரிசி, நொய்ம்மை நுட்பம்.
நோசி = நுட்பமாகு.
நோசநொச = நொய்ந்துபோதற் குறிப்பு.

27.உள்.
உள் = உட்பக்கம்.
( a ) உள், உள்ளம், உளம் = மனம்.
உள், உள்ளு = நினை.
உளப்பாடு = உட்படுத்தல்.
உள்ளீடு = பொருளடக்கம். உட்படு = அடங்கு, இணங்கு.
உள்கோள் = கருத்து.
உள்ளான் = நீருக்குள் மூழ்கும் பறவை.
உள்ளல் = நீருக்குள் மூழ்கும் பறவை.
உள்ளி = நிலத்திற்குள்ளிருக்கும் வெங்காயம்.
ஈர + உள்ளி = ஈருள்ளி.
உளவு = உள்ளிருந்தாராய்தல், துப்பு.
( b ) உண் = உட் செலுத்து, சாப்பிடு. உடகொள் = சாப்பிடு.
உறிஞ்சு = உள்ளிழு.
( c ) உள்கு – உட்கு = அச்சத்தால் உள்ளொடுங்கு, அச்சம்.
உட்கு + ஆர் = உட்கார். அச்சத்தாற் குந்து, குந்து, இரு.
ஊட்கி – உக்கி = அச்சத்தாற் குந்திச் செய்யும் கரணம்.
( d ) உண்மை = உள்ளிருத்தல், இருத்தல், மெய்.
ஊள் + து = உண்டு. உள் + அது = உள்ளது. உண்டு + ஆகு = உண்டாகு.
( e ) உ ஒ - ஒல்கு = ஒடுங்கு, தளர். ஒற்கு + அம் = ஒற்கம் = தளர்ச்சி.
ஒல்லி = ஒடுங்கிய, மெல்லிய
ஒடுங்கு = நெருக்கமாகு, ஒல்லியாகு.

28.உர்
உர் = பொருந்து.
உரசு = தேய், பொருந்து,
உராய் = தேய், பொருந்து,
உரிஞ், உரிஞ்சு = உரசு.
ஊரை = தேய், உரசு.
உரம் = புல்லும் மார்பு, வலிமை, உறுதி, எரு.
உரகம் = மார்பால் ஊரும் பாம்பு. உரவு = வலிமை.

29.உறு.
உர் - உறு = பொருந்து.
உறுத்து = அழுத்து, வலி, உறு = வலிய
உறுப்பு = பொருந்தும் பாகம்
உறவு = பொருந்தல், கலந்து வாழ்தல்.
உறவு + ஆடு உறவாடு.
உற்றார் = பொருந்தினவர், இனத்தார்
உறழ் = பொருந்து, மாறுபடு.
உறழ்ச்சி = ஒப்பு, மாறுபாடு, விகற்பம்.
உறை = பொருந்து, மேற்படு, தங்கு, தாக்கு, தங்கும் கூடு.
உறையுள் = இருப்பிடம்.

30.ஏ.
ஏ = உயர்வுக் குறிப்பு.
ஏண் = உயரம், பெருமை, ~ஏ பெற்றாகும்| ( தொல். உரி. 8 ).
ஏண் = உயரம், ஏணி = உயரப் போக்குவது.
ஏணை = ஏந்துவது, தொட்டில்
ஏண் - சேண்ஸ்ரீ உயரம். சேணுலகம் = இந்திரனுலகு.
சேணோன் = இந்திரன்.
ஏத்து = உயர்த்திப் பேசு, புகழ்.
ஏந்து = கையுயர்த்தித் தாங்கு.
ஏங்கு = அடிவயிற்றினின்று காற்றையெழுப்பி மூச்சிவிடு,
பெருங்கவலை கொள்.
ஏக்கம் = பெருங்கவலை, பேராத்திரம்.
ஏய் = ஏறு, பொருந்து, ஒத்திரு, ஏமாற்று.
ஏர் = எழுச்சி, அழகு, பயிரை எழச்செய்தல், உழவு, உழுகருவி.
ஏல் = மேலாகக் கொள், ஏற்றுக்கொள்.
ஏழ் = எழு, ஒலி, ஓரெண்.
ஏறு = ஏறுவது, சிலவிலங்கின் ஆண். ஏறு – ஏற்றை
ஏற்றம் ஸ்ரீ நீரை ஏற்றுவது, ஏற்றிக் குத்துவது.

31.ஏ
ஏ = மேற்செலற் குறிப்பு.
(a)ஏ = ஏவு, அம்பு.
ஏவு = எய், முற்செல், முற்செலுத்து, செய்வி, கட்டளையிடு.
ஏகு = மேற்செல், செல்.
(b) ஏ – எ. எய் = மேற்செலுத்து, அம்புவிடு.
எண், எண்ணு = மேற்காரியத்தை நினை, மேன்மேல், நினை, நினை.
எண்ணம் = நினைவு, ஆராய்ச்சி.
எண் மேன்மே லளத்தல், இலக்கம், மதிப்பு.

32.இய்
ஏய் - இய்.
இயை = பொருந்து, இயை - இசை - இணை.
இணை – பிணை = இசை, இசைந்து பொறுப்பேற்றல்.

33.இய
ஏ - இய = நட
இயல் = நட. கூடு. நடப்பு, தன்மை, இலக்கணம், நூற்பகுதி.
இயவு = நடப்பு, வழி.
இயல் - ஏல், ஏல் + படு = ஏற்படு.
ஏற்பாடு = நடப்பு, ஒழுங்கு.
இயவுள் = உயர்ந்தவன், தலைவன்.
இயங்கு = அசை, செல்.
இயக்கம் = அசைவு, நடப்பு, கிளர்ச்சி.
இயங்கி = மோட்டார் வண்டி.

34.ஏ
ஏ - எ மேலெழற் குறிப்பு.
ஏழ் - எழு – எழும்பு.
எக்கு = வயிற்றுப் பக்கத்தை மேலுயர்த்து.
எக்கர் = நீரலை கரைமேல் தள்ளும் மணல்.
எடு = வளர், மேல் தூக்கு, நீக்கு. எடுப்பு ஸ்ரீ உயர்வு.
எடுத்தல் = எடுத்து நிறுத்தல், எடை = நிறை, கனம், ஓர் அளவு.
எம்பு = எழும்பு.
எவ்வு = எழும்பிக்குதி, குதி.

35.எழு
ஏழ் - எழு.
எழு = எழுந்த தூண், தூண் போன்ற குறுக்குச் சட்டம்.
எழுவு = ஓசையெழுப்பு.
எழில் = எழுச்சி, ஒரு பறவை.
ஏழிலி = மேலெழும் மேகம்.
ஏழினி = மேலெழும் திரை.

36.எல்
ஏழ் - எல்.
( a ) எல் = எழும் சூரியன், ஒளி, எல்லோன் = சூரியன்
எல் + து = என்று = சூரியன்.
என்று + ஊழ் = என்றூழ் = சூரியன்.
( b ) எ - இ.
இலகு = விளங்கு. இலக்கம் = ஒளி.
இலகு - இலங்கு = ஒளியிடு, விளங்கு.

37.ஏ.
ஏ = வினாவெழுத்து.
ஒரு பொருளை எது வென்று வினவும்போது. பல பொருள்களில் ஒன்றை மேலெடுப்பது போன்ற உணர்ச்சியிருத்தலால் உயர்ச்சியைக் குறிக்கும் ஏகாரம் வினாப் பொருளைத் தந்தது. ஏது? ஏவன்?

38.யா.
ஏ – யா. = வினாவெழுத்து.
யா = யாவை, யாவன்? யாங்கு? யாண்டு.
யார் - ஆர்?
ஒ.நோ ஏனை – யானை. ஏழ் - யாழ்.

39.எ.
ஏ – எ = வினாவெழுத்து.
எது? எங்கு? என்று?.

40.மே.
ஏ – மே = மேல்.
( a ) மேல் = மேற்பக்கம், உயர்வு, உடம்பு, ஒருதிசை, 7ஆம் வேற்றுமை உருவு.
மேல் + கு மேற்கு – மேக்கு = மேடான திசை.
மேலும் = மேற்கொண்டும், ஓர் இடைச்சொல்.
மேலுக்கு = மேற்பார்வைக்கு, வெளிக்கு.
மேனி = மேற்புறம், உடம்பு.
மேடு = உயரமான இடம்.
மேடு – மேடு. மேடை = மேடான இடம்.
( b ) மிகு = மேலாகு, மிஞ்சு.
மிசை = மேல்.
மிஞ்சு = மிகுதியாகு, அளவு கட. மிஞ்சு – விஞ்சு = மிகு.
மிச்சம் = மீதி.
( c )மீ = மேல், மீதியாகு.
மீமிசை = மிக மேல், ஓர் இலக்கணம்.
மீதி = மிகுதி. மீத்தம் = மீத்து வைத்த பொருள். மீதம் = மீதி.
மீது = மேல், 7ஆம் வேற்றுமை உருபு.
( d ) மீறு = வரம்பு கட.
மீறு – வீறு = பெருமை, பெருமை கொள்.
வீற்று + இரு வீற்றிரு = பெருமையுடனிரு.
( ந ) மெத்து மேற்கொள், தோற்கடி. மெத்தை மேல்வீடு.
மெச்சு = உயர்த்திப் பேசு.

41.ஐ.
ஐ = வியப்பு, பெருமை.
~ஐ வியப்பாகும்| ( தொல். உரி. 89 )
ஐயன் = பெரியோன், தலைவன், தந்தை, அரசன், கடவுள், ஆசிரியன், முனிவன், சிவன்.
ஐயனார் = சாத்தனார்.
தம் + ஐயன் = தமையன் = அண்ணன்.
ஐயை = அம்மை, பார்வதி.
ஐயா = ஐயன் என்பதன் விளி.
ஐயோ = ( ஐயன் என்பதன் விளி ) இரக்கக்குறிப்பு.

42.ஓ.
ஓ = ஒலிக்குறிப்பு.
(a) ஓசை – ஓதை.
ஓது = ஒலி செய், படி.
ஓல் = ஒலி, தாலாட்டு.
ஓலம் = ஒலி, முறையீடு.
(b) ஒல் = ஒலிக்குறிப்பு. ஒல் - கொல் ஒலிக்குறிப்பு.
ஒல் - ஒலி. ஓல்லென = விரைவாக.

43. ஓ.
ஓ = உயரக் குறிப்பு.
(a) ஓங்கு = உயர்
ஓங்கல் = யானை. ( உயரமான விலங்கு )
ஓக்கம் = உயர்வு
ஓச்சு = உயர்த்து.
(b) ஓ – ஓம் - ஓம்பு = உயரமாக்கு, வளர், பாதுகா.
ஓம்படை = பாதுகாப்பு.
ஓ – ஒ
ஒய்யாரம் = உயரம், உயர்வு.
ஒயில் = உயர்வு, உயரக் குதித்தடிக்கும் கும்மி.

44.உ.
ஓ – உ உயரக்குறிப்பு.
உக = உயர்
உச்சம் = உயர்நிலை.
உச்சி = உயர்ந்த வுறுப்பு, மயிர் வகிர்வு.
உச்சிப் பொழுது = சூரியன் உயர்ந்த வேளை.
உத்தரம் = உயர்நிலை, உயர்ந்த வடதிசை, மேல்மரம்.
உதி = மேலெழு.
உம்பர் = மேல், மேலிடம், தேவர்.
உம்பல் = யானை.
உயர், உயரம், உயர்வு,
உவா = யானை.
உன்னதம் = உயரம், வானகம்.
உன்னு = குதித்தெழு, மூச்சுப்பிடித்தெழு.

45. ஓ.
ஓ = பொருந்து.
( a ) ஓ + இயம் = ஓவியம் = ஒப்பனை, சித்திரம்.
ஓ – ஒ. ஒ = பொருந்து.
ஒட்டு = பொருந்து, ஒரு துணைவினை.
செய்ய + ஒட்டார் செய்ய வொட்டார் = செய்யவிடார்.
ஒட்டுமா = பொருத்து மாமரம்.
ஒட்டு = பிசின், சூள்.
ஒட்டு = ஒரு பொருளோடு பொருந்தி நில்.
ஒண்ணு = பொருந்து, ஒரு துணைவினை.
செய்ய + ஒண்ணாத = செய்ய வொண்ணாத – செய்யொத.
ஒத்து = மேல் வைத்தெடு, தட்டு.
ஒத்தடம் = ஒரு மருத்துவ முறை.
ஒத்தி = ஒத்து, ஊதும் சூழல், அடைமானம், ஒத்துப்பார்க்கும் பயிற்சி.
ஒப்பு = ஒத்துக்கொள், சமம்.
ஒப்பனை = ஒப்பு, அலங்காரம்.
ஒப்புவி – ஒப்பி
ஒம்பு = மனம் ஒத்துக்கொள்.
ஓல் = பொருந்து, ஒன்று = பொருந்து, முதலெண்.
ஒன்றி = தனி.
ஒவ்வு = பொருந்து, ஒப்பாக்கு.
ஒற்று = பொருந்து, பொருந்தி ஆராய்,
ஒற்றர் = ஒற்றுபவர்.

46.உ.
ஒ – உ = பொருந்து.
உத்தி = பொருத்தம், பொருத்ததமாகச்செய்யும் திறமை.
உத்தி கட்டல் = இவ்விருவராய்ப் பொருந்திவரல்.
உகம் - நுகம்
நுகக்கோல் = மாடுகளைப் பூட்டுங் கோல்.

47.உ.
உ = பின்பக்கம்.
உப்பக்கம் = பின்பக்கம்.
உத்தரம், உத்தாரம், உத்தரவு = மறுமொழி.
உத்தரகாண்டம் = பிற்காண்டம்.
உம்மை பிற்காலம், எதிர்காலம்.

48.கள்
கள் = கருப்பு
( a ) கள்ளம் = கருப்பு, மறைவு.
கள்ளன், கள்வன் = மறைவாய்க் கொள்பவன்.
களவு = மறைவு, திருடு.
களா, களவு = ஒரு கருப்புப்பழம், பழுக்கும் மரம்.
களி = கருப்பு மண், களி போன்ற உணவு.
கள் = புலனை மறைக்கும் மது. குளி = கட்குடியன், மகிழ்
கள்ளன் - கண்ணன் = கருப்பன்.
( b ) காளம் = கருப்பு.
காளி = கருப்பான பேய்த் தலைவி.
அம் + காளம் (காளி) + அம்மை = அங்காளம்மை.
காளான = கருங்காளான்.
காளை = கரிய எருது, எருது.
( உ ) கள் - கர = மறை
கரவு = கபடம், களவு.

49.கண்.
கள் - கண். = கருப்பான விழி.
( a ) கண் = விழி. குண் போன்றது, 7ஆம் வேற்றுமை உருபு.
கண்ணு = மனத்தால் பார், கருது.
கண்ணியம் = மதிப்பு.
கண்வாய் = சிறுவாய்க்கால்.
கண்ணாளன், கண்ணவன், கணவன் = மனைவிக்குக் கண் போன்றவன்.
கண்ணி = கண் கண்ணாய்க் கட்டிய மாலை.
கணு = கண் போன்ற வரையிடம்.
( b ) கணி = அளவிடு. கணியன் = கணிப்பவன், சோதிடன்.
கணிதம் = கணக்கு. கணக்கு + அன் = கணக்கன், கணக்கப்பிள்ளை.
கணக்கு = வரவு செலவுக் குறிப்பு.
கணி – குணி = அளவிடு.
( c ) கண் - காண் = பார். காட்சி = அறிவு.
காணி = மேற்பார், மேற்பார்க்கும் நிலம், பிரிவு.
காணம் = மேற்பார்வை, மேற்பார்வை நிலம், பிரிவு.
கண்காணம் = மேற்பார்வை. கண்காணி = மேற்பாற்பவன்
கண்காணியார் = அத்தியட்சர்.
மா + காணி = மாகாணி, மா + காணம் = மாகாணம்.

50. கரு.
கள் - கரு = கருப்பாகு.
( a ) கருப்பு = கருமை, பஞ்சம், பேய்.
கருகு = கருப்பாகு, தீந்துபோ.
கருக்கு = காயம், பனைமட்டையின் கரிய ஓரம், கூர்.
கருகல் = பொருள் விளங்காமை.
கரும்பு = கரிய தண்டுள்ள தட்டை.
கருநாடகம் - கருநடம் - கன்னடம் = ஒரு நாடு, ஒரு மொழி.
( b ) கரம்பு = கருமண். கரம்பை = காய்ந்த களிமண், ஒரு பயறு.
( c ) கரி = அடுப்புக் கரி, யானை.
கரிசல் = கரிய நிலம்,
கரிச்சான் = கரிக்குருவி. காரி = கரியது.
கரியன் = திருமால், கண்ணன்.
( d ) கரு – கறு.
கறு = கருப்பாகு, முகங்கரு, கோபி.
கறுவு = கோபம், வர்மம், கறம் = வர்மம்.

51.கல.
கல = கூடு
( a ) கலப்பு = சேர்ப்பு, கலப்படம் = இழிகலவை.
கலவை = கலப்பு, கலம்பகம் = பலவுறுப்புகள் கலந்த பனுவல்.
கலம்பகம் - கலம்பகம் = கலவை.
கலவி = புணர்ச்சி
( b ) கலகம் = சண்டை. கலாபம் = கலகம், சண்டை.
கலாம் = சண்டை.
( c ) கலங்கு = பல பொருள் கூடு, மயங்கு.
கலக்கம் = மயக்கம்.

52.குள்.
குள்ளம், குள்ளல், குள்ளை = குறுமை.
குஞ்சு, குஞ்சி = பறவைப் பிள்ளை.
குச்சு, குச்சி = சிறு கம்பு.
குட்டி = சிறியது, பிள்ளை. குருளை = குட்டி.
குட்டை, குண்டு = சிறு குளம்- குழி = சிறு வளை.
குட்டை – கட்டை = குறிகியது.
குக்கல் = குள்ளநாய்.
குன்று = குறை, சிறுமலை. குன்றி = சிறு முத்து.
குன்று + அம் = குன்றம்.
குறு – குறள் = குறு மானுடம், குறு வெண்பா.
குறளி = குறும் பேய்.
குறுகு = சிறு, குட்டையாகு.
குறுக்கு = குறுகிய வழி, ஊடு, நடுமுதுகு.
குறை = தன்மை குறைந்தது. குற்றம் = குணக் குறைவு.
குற்றி – குச்சி = துரும்பு. குறு + இல் = குற்றில் - குச்சில்
குறும்பு = குறுமலை, குறுமலையரசன், அவன்செய்யும் சேட்டை, சேட்டை.
குறுமகன் - குறுமான் = சிறுவன்.
கூழல் = குறுகியது.
கூழி = குறும்பக.
கூழை = குறுகிய முடி.

53.கும்
கும் = குவி, திரள்
கும் + அல் = கும்மல். கும்மி = கை குவித்தாடும் ஆட்டம்
கும் + அர் = குமர். குமர் + இ = குமரி.
குமர் + அன் = குமரன். குமரன் - குமாரன்.
குமிழ் - சிமிழ் - திமில்.
குமி + அல் = குமியல், குமி – குவி.
குவி – குவியல், குவால், குவவு.
குவை = குவியல், திரட்சி. குவை – குகை.
குப்பு – குப்பல் = குவியல்.
குப்புறு = குவி, தலைகீழாகு.
குப்பி = குவிந்த மூடி. குப்பை = குவியல், தூசிக்குவியல்.
குப்பம் = குப்பைக்காட்டு ஊர்.
குப்பன் = பட்டிக் காட்டான்.
கும்பு = குவி, கூடு, குவிய வேகு. கும்பல் = கூட்டம்.
கும்பி = குவிந்த வயிறு.
கும்பிடு = கைகுவி.
கும்பம் = குவிந்த குடம். கும்பா = குவிந்த பாத்திரம்.
கூம்பு = குவி, பாய்மரம். கூப்பு = கை குவி.
கொம்மை = திரட்சி.

54.கொள்.
கொள் = வாங்கு, பெறு, பிடி, மிகுதியாயெடு.
கொள்வனை = பெண் கொள்ளல்.
கொள்ளை = சூறை, விலை.
கொண்டி = கொள்ளை, மாட்டும் கொடுக்கு.
கொள்ளி = நெருப்புப் பிடித்த கட்டை, நெருப்பு.
கொளு = பொருட் குறிப்பு.
கொளுவு = பொருத்து, மாட்டு.
கொளுத்து = பற்றவை, பொருத்து, புகட்டு
கொளை = பண்ணமைத்தல்
கொள் - கோள் = கொள்ளுதல், கொல்லுதல், பிடித்தல், பொறுதல், கருத்து, கொள்கை, தீது சொல்லல்.
கோளாறு = கொள்ளும் வழி, செப்பஞ் செய்யும்நிலை, பழுது.
கோளி = கொல்லும் பேயுள்ள மரம், கொள்வோன்.

55.சிவ
சிவல் = செந்நிலம். சுpவலை = செங்காளை.
( a ) சிவம் = சிவப்பு, தீக்கடவுள், சிவன்.
சிவப்பு = சிவப்புக்கல், கோபம்.
சிவம் - சிவன், சிவை = உமை
சிவ – துவ – துவர் = சிவப்பு, காசுக்கட்டி, அதன் சுவை
துவரை = சிவந்த பயறு.
( b ) சிவ – செம்.
செம்மை = செந்நிறம், ஒழுங்கு, நேர்மை.
செக்கர் = செவ்வானம். செம்மான் = சங்கிலியன்.
செம்பு = சிவந்த உலோகம், அதனாற் செய்யப்பட்ட நீர்ப்பாத்திரம்.
செம்மல் = நேர்மையுள்ளவன், தலைவன்.
செப்பம் = சீரான நிலை.
செவ்வை = செப்பம், சீர், செவ்வி = தகுந்த சமையம்.
செவ்வன் = செவ்வை.
( c ) சிவ – சே.
சேந்தன் = சிவந்தவன், முருகன்.
சேய் = சிவந்வன், குழந்தை, முருகன்.
சேய் = சிவந்தவன், குழந்தை, முருகன்
சேயோன் = முருகன்.

56.சுள்
சுர் - சுள் = சுடற் குறிப்பு.
சுள்ளை = செங்கல் சுடுமிடம்.
சுள்ளை - சூளை.
சுள்ளி = காய்ந்த குச்சு.
சுண்டு = வெந்து சுருங்கு, சுருங்கியது, சிறிய மாகாணிப் படி
சுண்டுவிரல் = சிறிய விரல், சுண்டெலி = சிறிய எலி.
சுண்டை = சிறிய காய்.

57.சுர்
சுர் = நெருப்புக் குறிப்பு.
சுரீர், சுறீர் = நெருப்புக் குறிப்புகள்.
சுருசுருப்பு, சுறுசுறுப்பு = நெருப்புப்போல் வேகமாயிருத்தல்.
சுருக்கு, சுறுக்கு = திடுமெனச் சுடற் குறிப்பு.
சுருத்து, கறுத்து = உணர்ச்சி.
சுரம் = காய்ச்சல், காய்ந்த பாலை நிலம்.
சுரன் = சூரியன், தேவன்.
சூரன் = சூரியன்
சுரை = சுட்டு இடும் துளை, சிறுகுழல்.
சுரம் = துளையிற் பிறக்கும் ஒலி.
சூர் = அச்சம். சூரன் = வீரன்.

58.சுரி
சுர் - சுரி = எரி, நீறாக்கு, சூட்டால் சுருங்கு அல்லது வளை
சுரி + அணம் = சுரணம் - சுண்ணம் = நீறு.
சுண்ணம் - சுண்ணாம்பு.
சுரணம் - சூரணம்.
சுரி = சுருங்கு, வளை.
சூறை = வளைந்து வீசும் காற்று, (சூறாவளி) கொள்ளை.

59.சுல்
சுர் - சுல் = சூட்டால் வளை
சுலவு – சுலாவு = வளை
சுலவு – குலவு. சுலாவு – குலாவு.
சுன்னம் = வட்டம்.
குலாலம் = வளைவு- குலாலன் = வளைத்து வனையும் குயவன்,
கொள்பு – கொட்பு = சுற்று.

60.சுரு
சுர் = சுரு.
சுருங்கு = சூட்டால் ஒடுங்கு.
சுருங்கை = இடுக்கமான கீழ் நில வழி.
சுரங்கம் = சுருங்கை போன்ற குழி.
சுருக்கை = குறுக்கும் முடிச்சு.

61.சுளி.
சுள் - சுளி = சூட்டால் முகம் வளை.
சுழி = வட்டமான மயிரொழுங்கு அல்லது நீரோட்டம்
சுழி = மயிர்ச் சுழியுள்ளவன் செய்யும் குறும்பு.
சுட்டி = சுழியன், குறும்பு.
சுழல் = சுற்று, சுழல் - உழல் = வருந்து.

62.சுருள்
சுரி – சுரள் = வளை
சுருள் = ஓலைச் சுருள். சுருட்டை = வளைந்த முடி.
சுருணை = சுருள்.
சுருள் - உருள். உருளி = சக்கரம்.
உருளை = ரோதை, உருண்ட கிழங்கு
உருடை = ரோதை. உருண்டை – உண்டை.

63.சுடு
சுள் - சுடு.
சுடலை = சுடுகாடு. சூடு = கடல். சூட்டிக்கை = சுறுசுறுப்பு
சுடலையாடி ஸ்ரீ சிவன்

64.தென்
தெள் - தெள்ளு = மாவைத் தெளிவாக்கு, தூய்மையாக்கு.
தெளி = தெளிவாகு, ஐயந்தீர், உருத்தேறு. தெளிவு = பதநீர்.
தெரி = தெளிவாக அறி, தெரிந்துகொள்.
தேர் = தெளிவுபெறு, திறம்பெறு, ஆராய்.
தேறு = தெளி, உருப்படு, தேர்வில் வெற்றிபெறு.
தேறல் = தெளிவு, தேன்.
தேற்றம் = தெளிவு, உறுதி.
தேற்றாங் கொட்டை = நீரைத் தெளிவாக்கும் ஒரு கொட்டை.
தேன் = தெளிந்தது.
தேன் - தீ – தீவு, தித்தி, தெவிட்டு

65.தேய்.
( a ) தேய் - தேயு = தேய்ந்துண்டாகும் நெருப்பு.
தேய்வு – தேவு, தேவன், தேவதை = நெருப்புத் தன்மையுள்ள தெய்வம், கடவுள்.
தேய் - தெய்வு – தெய்வம்.
தேவு – தே.
( b ) தேய் - தீ = நெருப்பு. தீ – தீமை, தீங்கு.
தீம்பு = தீயின் தன்மை, பொல்லாங்கு.
தீவம் - தீபம் = விளக்கு.
தீ – தீய் = சுண்டு, காய், வாடு.

66.பகு
பகு = வகு
( a ) பகு + அல் = பகல் = நடு, நடுப்பகல், பகல்வேளை, பிரிவு.
பகலோன் = சூரியன். பகல் - பால் = பிரிவு.
பகு + ஐ = பகை = பிளவு, பிரிவினை.
பகு + அம் = பக்கம் - பக்கல். பக்கம் = பகுதி, திதி.
பகு + தி = பகுதி – பாதி. பகு + பு = பகுப்பு.
பாகு – பாகம். பாக்கம் = பக்கம், ஊர்ப்பகுதி.
பாகு – பாங்கு – பாங்கர். பாங்கு = பக்கம், தன்மை.
பாங்கு + அன் = பாங்கன்.
( b ) பகு – பா. பாத்தி = பகுக்கப்பட்ட செய்ப் பாகம். பாதீடு = பகுத்தல்.
( c ) பகு – வகு. வகு + ஐ = வகை. வகு + பு = வகுப்பு.
( d ) பகிர் - வகிர்.

67.பௌ;
பெள் = விரும்பு, காதலி
பெட்பு = விருப்பம்.
பெள்- பெண் = விரும்பப்படும் பால்.
பேள் + தை = பெட்டை – பெடை – பேடை – பேடு
பேடு + அன் = பேடன் = ஆண்டன்மையுள்ள பெண்.
பேடு + இ = பேடி = பெண்டன்மையுள்ள ஆண்.
பெண் - பிணா – பிணவு – பிணவல். பிணா – பிணை.
பெண் - பேண் = விரும்பு, விரும்பிப் பாதுகா.

68.பொள்
பொள் = துளையிடு.
போண்டான் = எலி பொத்துக் கிளப்பும் வளை.
(a ) பொளி = வெட்டு, வரம்பு.
பொள் - பொல்.
பொல் + அம் = பொல்லம் = ஒட்டை.
பொள்ளப் பிள்ளையார் = பொல்லாப் பிள்ளையார்.
பொக்கு = துளையுள்ளது, உள்ளீடற்ற தானியம், பொய்
பொக்குவாய் = பல்லற்ற வாய்
பொக்கு + அணம் = பொக்கணம் = பை.
போய் = உள்ளீடற்றது, மெய்யல்லாதது.
பொ = துளையிடு. பொத்தல் = துளை.
பொள் - போழ் = பிள, வெட்டு.
பொழில் = வெட்டப்படுவது, சோலை.
( b) போழ் = வெட்டு, துண்டு. போழ்து = இருளைப் பிளக்கும் சூரியன்.
போழ்து – பொழுது – போது = வேளை.

69.போ
( a ) போ = செல். போது = போ. போகு = போ.
போக்கு = செல்லல், ஆதரவு.
போக்கு – போங்கு = போகும் முறை, மாதிரி.
( b ) போதும் = செல்லும், வேண்டிய அளவாலகும்.
போதிய, போந்த = அளவான, போதுமான.
போகு = நீள்.
போது = விரிந்த அரும்பு.
போந்தை = விரிந்த பனை ஓலை.
போந்தை – பொத்தகம் - புத்தகம்.

70.வள்
வள் = வளை.
வள்ளம் = வட்டக்கலம்.
வளாகம் = சூழ்ந்த இடம், வளார் = வளைந்த பிரம்பு.
வளை = வளையல், வளைந்த சங்கு, வளைந்த உத்தரம், வட்டத் துவாரம்.
வளை + அல் = வளையல், வளை + வி = வளைவி.
வளை + அம் = வளையம்
வட்டம் = வளையம், வட்டக்காசு, வட்டி, பகுதி.
வட்டி = வட்டக்காசு, கடனுக்குச் செலுத்தும் காசு, வளைந்த பெட்டி.
வட்டில் = வட்டக் கலம்.
வட்டு = வட்டமான சில்.
வட்டகை, வட்டாரம் = இடப்பகுதி.
வணங்கு = உடம்புவளை.
வழங்கு = வளைந்து கொடு.
வணர் = வளைந்த யாழுறுப்பு.
வணங்கு – வாங்கு – வங்கு. வங்கி = வளைந்தது.
வண்டி = வட்டச்சக்கரம், சக்கரத்தையுடைய சகடம்.
வண்டு = வளையல், வட்டமான வண்டு.
வண்டி – பண்டி – பாண்டில்.
பாண்டி = வட்டாடல். பாண்டில் = வட்டக் கிண்ணம், உருட்சியான எருது.
பாண்டில் = வீரன்.
பாண்டியன் = வீரன்.
வளி = வளைந்து வீசும் காற்று.
வாளி = வளையம், வளைந்த பிடி, வளைந்துவிழும் அம்பு.
வாணம் = வளையும் வெடிவகை. வாணம் - பாணம் = அம்பு.

71.வெள்
வெள் = வெள்ளையாகு.
வெளி = வெள்ளையான இடம். வெட்ட = வெள்ளையான.
வெள்ளாளன் = வெண்களமன்.
வெள்ளாட்டி = வெள்ளாளப்பெண், வேலைக்காரி.
வெள்ளரி = வெண்கோடுள்ள காய்.
வெள்ளை = வெள்ளைத்துணி, சுண்ணாம்பு, கள்ளமற்றவன்.
வெள்ளந்தி = கள்ளமின்மை.
வெள்ளம் = வெள்ளையான புது நீர்.
வெள்ளி = வெள்ளையான உலோகம், நட்சத்திரம்.
வெள்ளிலை – வெற்றிலை.
வெள்ளில் - விள – விளா – விளவு = வெள்ளோடுள்ள பழமரம்.
வெளில் - வெளிறு = வெள்ளைமரம்.
வெளு = வெள்ளையாக்கு, துவை, அடி.
வெள்கு – வெட்கு = நாணத்தால் முகம் வெளு.
விளக்கு = ஒளிவிடு, புலனாகு.
விளக்கு = விளங்கச் செய்வது.


72.வேகு.
வே = வேகு, எரி.
வேகம் = விரைவு, கடுமை.
வெந்தை = வெந்த கீரை.
வேம்பு = சூடான பழம் பழுப்பது. அல்லது வேனிலில் தழைப்பது.
வேனல் = வெப்பம், வேனில் = கோடை.
வேக்கை = வேனல், வெப்பு = சூடு, வெப்பு – வெப்பம்.
வெம்பு = வெயிலிற் காய். வெம்பல் = காய்ந்தபழம்.
வேது = சூடு, ஒத்தடம், வெதுவெதுப்பு = சூடு.
வெதும்பு = சுடு, வேதனை = நோவு.
வெம்மை = சூடு, கடுமை, விருப்பம்.
வெய்யில் - வெயில் = வெப்பமான ஒளி


73.வேள்
வேள் = விரும்பு.
வேள் - வேண்டு = விரும்பு, கெஞ்சிக் கேள்.
வேள் - வேண் + அவா = வேணவா.
வேட்கை = விருப்பம், தாகம், விடாய் = விருப்பம், தாகம்.
வேள்வி = ஒன்றை விரும்பிச் செய்யும் யாகம்.
வேளாண்மை = விரும்பிச் செய்யும் உபசாரம்.
வேளாளன் = உழவன், வேளிர் = ஒரு குலத் தலைவன், குறுநில மன்னன்.
வேளாண் = உழவன் குடி, வேளான் = ஒரு பட்டம்
வேளாட்டி = வேளாளப் பெண். வேளம் = வேளாளப் பெண்டிர் சிறைக்களம்.
வேண்மகன் - வேண்மான் = குறுநில மன்னன்.
வேட்டம், வேட்டை = விரும்பி விலங்கைப் பிடித்தல்.
வேட்டுவன், வேடுவன், வேடன் = வேட்டையாடுபவன்.

சனி, 7 மார்ச், 2009

கேள்விச்செல்வம்

கேள்வி: செ.பாண்டியன், கோவை - ௨ (2).

தமிழ் ஒலிக் குறியீடுகளில் தேவைப்படுங்கால் வடமொழியெழுத்துகளான ஜ்,ஹ்,ஸ்,ஷ் முதலியவற்றையும்; ஆங்கில எழுத்துகளான J,F,H,G முதலியவற்றையும்,எழுதிக்காட்ட என்ன முறையைக் கையாள வேண்டும்? நம் எழுத் தமைப்பில் ஏதாவது
மாற்றம் செய்து கொள்ளலாமா? அவ்வாறாயின்,அம் முறையைத் தென்மொழியில் எழுதுவீர்களா?

பதில்: ஞா . தேவநேயப் பாவாணர்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் ஒலித்தொகுதியுண்டு.எல்லா மொழிகட்கும் பொதுவான ஒலிகள் ஏறத்தாழ இருபத்தைந்தே. பெருமொழிகளுள் மிகக்குறைந்த ஒலிகளுள்ளவை தமிழும், மிக நிறைந்த ஒலிகளுள்ளது வடமொழியுமாகும்.தமிழின் அடிப்படை யொலிகள் முப்பது. வடமொழி யொலிகள் நாற்பதெட்டு முதல் ஐம்பத்து மூன்றுவரை பலவாறு சொல்லப்பெறும்.
ஒவ்வொரு பெருமொழிக்கும் சில சிறப்பொலிகளுள. மொழிகளெல்லாம் வல்லியல்,மெல்லியல் என இருதிறப்படும். அவற்றுள், வல்லியன் மொழிகள் ஏனைமொழிச் சிறப்பொலிகளுட் பெரும்பாலானவற்றை ஏற்கும் திறத்தன. மெல்லியன் மொழியோ அத் திறத்ததன்று. தமிழ், மெல்லியன்மொழிகளுள் தலை சிறந்தது. ஆதலால், பிறமொழி வல்லொலிகளை ஏற்காது. மெல்லொலியுடன் வல்லொலியை இணைப்பது. மெல்லிய மல்லாடையுடன் வல்லிய கம்பளியை இணைப்பது போன்றதே. ஆடவர் பெண்டிர் மேனிகள்போல், வல்லியன் மொழிகளும் மெல்லியன் மொழிகளும் என்றும் வேறுபட்டேயிருக்கும். தமிழில் வல்லொலிகள் கலப்பின் அதன் தன்மை முற்றும் மாறிவிடும்.அதன்பின் அது தமிழாகாது.
தமிழின் மென்மையை யுணர்ந்தே, கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியர் தமிழ்ச் செய்யுட்கு வடசொல்லை வேண்டாது வகுத்த விடத்தும்,

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

என்று வடவெழுத்தை விலக்குவாராயினர். இனி, 12 ஆம் நூற்றாண்டில்,

"இடையில் நான்கும் ஈற்றி லிரண்டும்
அல்லா அச்சை வருக்க முதலீறு
யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐயைம்
பொதுவெழுத் தொழிந்த நாலேழும் திரியும்"

என்று வட சொற்கள் பெருவாரியாய்த் தமிழில் வந்து வழங்குவதற்கு வழி வகுத்த பவணந்தியாரும்.

"ஏழாமுயி ரிய்யும் இருவும்ஐ வருக்கத்து
இடையில் மூன்றும் அவ்வம் முதலும்
எட்டே யவ்வும் முப்பது சயவும்
மேலொன்று சடவும் இரண்டு சதவும்
மூன்றே யகவும் ஐந்திரு கவ்வும்
ஆவீ றையும் ஈயீ றிகரமும்"

"ரவ்விற் கம்முத லாமுக் குறிலும்
லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்கு
இய்யும் மொழிமுத லாகிமுன் வருமே"

"இணைந்தியல் காலை யரலக் கிரகமும்
மவ்வக் குகரமும் நகரக் ககரமும்
மிசைவரும் ரவ்வழி உவ்வும் ஆம்பிற."

எனத் தமிழியற் கொத்தவாறே வடவொலிகளைத் திரிக்க உடன்பட்டனர்.

19ஆம் நூற்றாண்டில் தக்க புலவரும், இன்மையால்,தமிழ் உரைநடையிலும் செய்யுளிலும் வடசொற்களுடன் வடனெழுத்துகளும் தாராளமாய் வந்து கலந்துவிட்டன. அவர்ரையெல்லாம் நிறை தமிழ் வாணரான மறைமலையடிகள் களைந்தெறிந்தார்.

ஒரு தமிழ்ப் பேரறிஞர் ஆய்த வெழுத்தினியல்பைப் பிறழவுணர்ந்து,அதனைக்கொண்டு ஆரிய வொலிகலையெல்லாம் தமிழிற் குறிக்க வொண்ணுமென்றும், அதற்காகவே அது தமிழ் நெடுங்கணக்கில் வகுக்கப்பட்டதென்றும் கருதினார். அஃதாயின் தமிழ் ஒரு வல்லியன் மொழியாயும் அதன் நெடுங்கணக்கு ஆரிய மொழிகளெல்லாம் தோன்றியபின் ஏற்பட்டதாயுமிருத்தல் வேண்டும். தமிழின் தொன்மையும் முன்மையும் மென்மையும் அக் கொள்கைக்கு முற்றும் மாறாயுள்ளமை காண்க.

ஆய்தம் என்பது ஒரு வகை நுண்ணியககரவொலியே யன்றி வேறன்று.
ஆய்தல் - நுண்ணியதாதல்.
" ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் "

என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க.

ஆய்த வொலியைப் பிறழ வுணர்ந்தும்,ஒலி வடிவிற்கும் வரிவடிவிற்கும் இயைபின்மையை அறியாதும்,ஆய்த வரிவடிவைத் துணகொண்டு F,Z,போன்ற ஆங்கில வொலிகளைச் சிலர் தமிழிற் குறித்து வருகின்றனர். எழுத்தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரியன்று. தமிழ் வரிவடிவால் ஓர் அயலொலியை இடர்பட்டுக் குறிக்க முயல்வதினும், அவ் வொலிக்குரிய அயன்மொழி வரிவடிவையே தழுவுவது நன்றாயிருக்குமே! ஓர் ஒலியைத் தழுவும்போது ஏன் அதன் வரியைத் தழுவுதல் கூடாது? ஆங்கிலம் உலக மொழிகளெல்லாவற்றினின்றும் சொற்களைக் கடன் கொண்டிருந்தும் அவற்றையெல்லாம் தன்னொலியாலும் தன் வரியாலுமன்றோ இன்றும் குறித்துவருகின்றது.

மொழியென்பது ஒலித்தொகுதியேயன்றி வரித்தொகுதியன்று. வரி மாறலாம், ஒலி மாறாது. ஒலி மாறின் மொழி மாறிவிடும். செவிப்புலனாய வொலியைக் கட்புலனாக்குங் குறியே வரியாம்.

முதலில் வடசொற்களையும் பின்பு வட வெழுத்துகளையும் ஒவ்வொன்றாகப் புகுத்துவதையே, கொடுந்தமிழ் மொழிகளை ஆரிய வண்ணமான திரவிடமாக்கும் வழியாக, தொன்றுதொட்டு வட மொழியாளர் கையாண்டு வந்திருகின்றனர். சேர நாட்டுச் செந்தமிழ் சோழ பாண்டி நாட்டொடு தொடர்பற்றுக் கொடுந் தமிழாகிப் பின்பு, ஆரியச் சேர்க்கையால் மலையாளம் அல்லது கேரளம் என்னும் திரவிட மொழியாகத் திரிந்துள்ளமை காண்க. கொடுந்தமிழ்களை முன்னர் ஆரிய வண்ணமாக்கியது போன்றே, இன்று செந்தமிழையும் ஆக்க முயன்று வருகின்றனர். அதனொடு ஆங்கில எழுத்துகளும் சொற்களும் சேரின், தமிழ் விரைந்து அழிந்து போவது திண்ணம். அரசன், நகைச்சுவை, பொத்தகம் அல்லது சுவடி, பூ, பறவை என்னும் தென் சொற்களிருக்க, அவற்றிற்கு மாறாக ஏன் ராஜன், ஹாஸ்ய ரசம், புஸ்தகம், புஷ்பம், பக்ஷி என்னும் வட சொற்களையும் வட சொல் வடிவங்களையும் தழுவ வேண்டும்?

இயற்கை யொலிகளும் செயற்கை யொலிகளும் மிகுந்து நெடுங்கணக்கு நீண்ட வடமொழியுள்ளும், எ, ஒ என்ற உயிர்க் குறில்களும், ள, ழ, ற அன் என்னும் மெய்யெழுத்துகளும் ஆகிய தமிழொலிகளும், F, Z என்னும் ஆங்கிலவொலிகளும், சில அரபியொலிகளுமில்லை. ஆகவே, ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்பொலிகளுள. அவற்றையெல்லாம் தழுவுவது ஆங்கிலமாகிய உலக மொழி ஒன்றற்கே தகும். எல்லா மொழிகளும் தழுவ வேண்டியதில்லை; தழுவின், எல்லாம் தத்தம் தனித் தன்மையிழந்து ஒன்றாகிவிடும்.

ஒரு மொழியின் வளம் அல்லது வலிமை அதன் சொற்களாலாயது. பொருள்தரும் சொல்லிற்கு உறுப்பாகும் ஒலியே எழுத்தாம். அது தன்னளவிற் பொருள் தராது. அதனாலாகும் சொல்லே பொருள் தருவது. குமரிக் கண்டத் தமிழர், முப்பதொலிகளைக் கொண்டே, அக் காலத்து மாந்தருள்ளத்திலெழுந்த கருத்துகளைக் குறிக்குஞ் சொற்களையும், பிற்காலத்திலெழுங் கருத்துகளை குறித்தற்கேற்ற சொற்கருவிகளையும்,அமைத்துச் சென்றனர். ஆதலால், ஒலிக் குறைவினால் தமிழிற்கு ஏதும் மொழிக்குறைவில்லை. ஆயிரங் காய்ச்சியான தென்னைக்கு ஓலைக் குறைவுமில்லை அழகிய சொல்வளமிக்க தமிழுக்கு ஒலிக் குறைவினால் ஒரு குறைவுமில்லை.ஒவ்வொன்றும் அதனதன் இயல்பில் நின்றே வளர்தல் வேண்டும். ஆதலால், தமிழுக்கு எவ்வகையிலும் எழுத்து மாற்றம் தேவையின்றென அறைக. அது தமிழுக்கு இறுதி விளைக்குமென்றே மறைமலையடிகளும் விடுத்தனர். அதுவே உறுதியென்று கடைப்பிடிக்க.



நூல் : தமிழ்வளம் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர்

சனி, 14 பிப்ரவரி, 2009

ஈழத்தமிழர் வரலாறு

ஆங்கிலத்தில் ஈழத்தமிழர் வரலாறு.

தமிழீழம் அரசியல் வடிவம். ஈழத்தமிழ் பண்பாட்டுவடிவம்.

41 -48 வரையான பக்கங்கள்.











31 - 40 வரையான பக்கங்கள்.












21 -30 வரையான பக்கங்கள்















11 - 20 வரையான பக்கங்கள்













1 -10 வரையான பக்கங்கள்.