கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 21 மே, 2011

தராகி - சிவராம்

தமிழிலக்கியத்தில் சிவராமின் ஆளுமையும் தேடலும்

11.08.1959 – 28.04.2005

தென் தமிழீழத்தின் மட்டக்களப்பில் 1959 ஓகஸ்ட் 11ஆம் நாள் அன்று மகேஸ்வரி அம்மாளுக்கும் புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.

சிவராம் குடும்பத்தினர் அக்கரைப்பற்றில் நிலபுலன் மிகக் கொண்டிருந்தவர்கள். தர்மரட்ணம் வன்னியனார் அங்கு மிகச் செல்வாக்காக வாழ்ந்தவர்.

சிவராமுடனான இக்கட்டுரையாளரின் முதல் சந்திப்பு, கொழும்பு Fred E de Silva நாடக அரங்கில், நடைபெற்ற நாடக விழா ஒன்றின் போது, 1989ஆம் டிசம்பர் மாதம் பத்தி எழுத்தாளர் கே.எஸ் சிவகுமாரன் முகதாவில் நிகழ்ந்தது.

சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரெட்ணம் (வன்னியனார்) 1938ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். சிவராம் அவர்கள் தராகி என்ற புனை பெயரில் ஆங்கிலத்தில் ”The Island” ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989இல் எழுதினார்.

அவரின் கட்டுரைகள் வெளிவந்த காலத்தில் நீலன் திருச்செல்வம் அவர்கள், இவரால் எப்படி தேர்ந்த ஆங்கிலத்தில் எழுத முடியும். யாரோ எழுதிக் கொடுக்கிறார்கள் போலும் எனக் கூறினாராம். ஆனால் சிவராம் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு கற்றுக் கொண்டிருந்த போதுதான் விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டு பல்கலைக் கழகத்திலிருந்து விலகியவர் என்பதும், தந்தையார் அந்தக் காலத்திலேயே கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதும், அவரின் வீட்டு நூலகத்தில் இருந்த அளப்பரிய நூல்களை இளமைக் காலத்திலேயே வாசித்து முடித்தவர் என்பதும் இவருக்குத் (நீலன் திருச்செல்வம்) தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிவராமின் அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான அறிவார்ந்த பார்வை, கட்டுரைகள் பற்றி யாவரும் அறிவர். உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தமை பலரும் அறிந்தவை. ஆனால் அவரது தமிழ் இலக்கிய அறிவு, முயற்சிகள், தேடல்கள் பற்றி சிலரே அறிவர். இக்கட்டுரையின் நோக்கமும் அது பற்றிப் பேசுவதே.

மட்டக்களப்பு வாசகர் வட்டமும், ஆனந்தனும் அந்த நாட்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தன. அவற்றிலும் பிரபலம் வாய்ந்தவை மகாவித்துவான் F.X.C நடராஜாவும் சிவசுப்ரமணியமும். அவர்களை மட்டக்களப்பில் ”படிச்சாக்கள்” என்பர்.

நடராஜா அவர்கள் ”மட்டக்களப்பு மாண்மியம்” வரலாற்று நூலின் மீள் தொகுப்புக் காரணகர்த்தா (அதன் முக்கிய பாகங்கள் 17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரரின் நெருக்குவாரத்தில் முன்னர் தொகுக்கப்பட்டது)

இக்கால கட்டத்தில் பட்டதாரியும் மட்டக்களப்பு புள்ளி விபரத் திணைக்களத்தில் பதவியிலிருந்தவருமான மகாதேவாவுடன் மேற்கூறிய இருவரும் நடாத்திய தமிழ் மொழி வகுப்புகளுக்கு சிவராம் செல்லத் தொடங்கினார்.

சம்மாந்துறையில் பிறந்த ஆனந்தன், பொதுக் கல்விப் பத்திர உயர்தரத்தில் (Advanced Level) கிருத்தவமும் இஸ்லாமும் படித்த இந்து ஆவார். தமிழ் இலக்கிய இலக்கணத்தில் பாடம் கேட்ட சிவராம், தனது வலராற்று ஆசிரியருக்குக் கொடுத்த பேட்டியில், ”தொன்மத் தமிழில் எனது ஈடுபாடு அதிகமாக அதிகமாக என்னையறியாமல் அது என்னை ஒரு தமிழ்த் தேசியவாதி ஆக்கியது. இங்கே ஒரு அருமையான மொழி எம் வசம் இருக்கிறது என எண்ணினேன். அரசு அதனை பலாத்;காரமாக அழிக்க ஏன் இடம் கொடுப்பான்? ஆழமாக ஆழமாகத் தமிழைக் கற்க விழைந்த போது, மேலும் மேலும் தமிழ்த் தேசியவாதியானேன்.

எப்படியெனில், தமிழ் மொழியின் செழிப்பைக் கண்டு, தமிழ்க் கவிதைகளின் அழகைக் காதலிக்கத் தொடங்கினேன். இலக்கியத் தமிழின் மாணாக்கனான நான், தொன்மைத் தமிழ்ப் பண்பாட்டின் சுவைஞனானேன்.

1980ஆம் ஆண்டளவில் சிவராமும் இலக்கிய நண்பர்களும் பரிசுத்த மைக்கல் பாடசாலையில் தங்கள் பழைய ஆசிரியர்களான வித்துவான் கமலநாதன், எஸ்.பொன்னுத்துரை(எஸ்.பொ), மகாவித்துவான் F.X.C நடராஜா, சிவசுப்ரமணியம் ஆகியோரிடம், அவர்களின் தமிழறிவைத் தங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டி நின்றனர்.


வித்துவான் நடராஜா சென்னையில் அப்பொழுது இருந்த வாசகர் வட்டம் பற்றிப் பிரஸ்தாபித்தரர். அப்பொழுது மட்டக்களப்பு வாசகர் வட்டம் பிறந்தது. அதில் சிவராம், பி.மகாதேவா யாழ் பல்கலைக் கழக பட்டதாரியான தேவகுகன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர்.

பின்னர் அது 40 உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ந்தது. அதில் பாலு மகேந்திரா கூட இருந்திருக்கலாம். ஆனந்தன் இணைந்த பின்பே யாப்பு, நிர்வாகக் குழு போன்றவை தோன்றின. சுப்வராமை மட்டக்களப்பு வாசகர் வட்ட தோற்றத்தின் கர்த்தாவாகக் கருதலாம். ஆனந்தன் இக்காலகட்டத்தில் மலையாள மொழியைக் கற்று, அதன் மூலம் பல சிறந்த கதைகள் கட்டுரைகளைப் படித்து, அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பினை வாசக வட்டத்திற்கு வாசிக்கத் தொடங்கினார். கமுன் (Gamon), சார்த்தே (Sarthe), மோப்பசான் (Maupassant) மற்றும் கோர்க்கி (Gorky) ஆகியோரின் ஆக்கங்களின் பரீட்சயம் வாசக வட்டத்தினருக்குக் கிடைத்தது.


இந்தக் காலகட்டங்களில் வாசக வட்டத்தினர் பல நற்காரியங்களை முன்னெடுத்தனர். உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய வகுப்புகளை நடாத்தினர். புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பேச்சாளர்களை அழைத்து பேசச் செய்தனர். நாட்டாரியல், நவீன தெற்காசிய திரைப்படங்கள், மலையாள இலக்கியங்கள் பற்றிய கருத்தரங்குகளை நடாத்தினர். இந்தக் கால கட்டத்தில், பரீட்சைக்குத் தோன்றிய சிவராமும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினால் விலகினார்.


உயர் தரப் பரீட்சைக்குப் பின்னர் பல்கலைக் கழகத்திற்கு புகக் காத்திருந்த வேளையில் சிவராம் தமிழ் பற்றிய ஒரு நுட்பமான கட்டுரையை எழுதி, தனது அறிவுலக ஆதர்ச நாயகனாகத் திகழ்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.


அக்கட்டுரை பின்வருமாறு அமைந்திருந்தது:


பழந்தழிலில் உள்ள பெயரெச்சங்களில் காணப்படுகின்ற சொற்புணர்ச்சி முறைத் தொழிற்பாடுகளும், சொற்பொருளியல் கூறுகள் சிலவும் என்று தலைப்பிட்டு, பெயரெச்சங்களின் சொற்பொருள் தனித்தன்மைகள், சங்கத் தமிழ்க் கவிதைகளில் சொல்லிணக்கக் கூறுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளதோடு, தொன்மைத் தமிழைக் கற்கும் போது, எழக்கூடிய மொழியியற் புதிர்கள் பற்றி ஆராய்வதற்கு எத்தகைய ஆராய்ச்சி முறைமைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த பிரச்சினைகள் குறித்தும் சிவராம் குறிப்பிட்டுள்ளார்.


இதனை வாசித்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், தமிழ் மொழிப் பேராசிரியர்களே அப்போதுதான் இது குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ள ஒரு விடயத்தைப் பற்றித் தான் முன்பின் தெரியாத இளைஞர் ஒருவர் கட்டுரை எழுதியுள்ளமையை வியந்துள்ளார். தன்னுடன் படியினில் நின்றபடி அக்கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்த பேராசிரியர் கைலாசபதியிடம் அவர் யாரெனக் கேட்டபோது, தம் முன்னைநாள் தமிழ்ப் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் மருகர் என்றிருக்கிறார் அவர். பேராசிரியர் சிவத்தம்பி கூறுவது போல தமிழ் இனத்தின் வரலாற்றில் அதீத அக்கறை கொண்டவராக சிவராம் திகழ்ந்தார். அவரின் வாசிப்பும் தேடல் வீச்சும் ஆழமும் அகலமும் மிக்கது.


புறநானூற்றில் தொடங்கி சங்க கால இலக்கியங்கள், தென்னிந்திய சமூக குழுமங்களின் வரலாற்றில் இதுவரை பார்க்கப்படாத வீர, போரியல் மரபினையிட்டு அவர் கவனம் செலுத்தினார். அது பற்றிய ஆய்வில் அவரின் வாழ்க்கை கொடூரமான முறையில் 28.04.2005இல் முடிவுக்கு வரும் வரை ஈடுபட்டிருந்தார்.

சிவத்தம்பி குறிப்பிடுவது போல புதுமைப்பித்தன் வேறொரு தருணத்தில் கூறியவாறு, அவர் ஒரு அழிவற்ற வானத்துத் தாரகை போல இப்பூமியில் வந்துதித்து அதே போலவே மறைந்தார்.

-காசிநாதர் சிவபாலன்

சனி, 14 மே, 2011

சங்கே முழங்கு

நன்றி.மக்கள்

முத்தமிழ் மூத்த இலக்கியம்'சிலம்பு அதிகாரம்'
புலியூர் கேசிகன் அவர்களின் உரையில் இளங்கோவடிகளின் மூல காப்பியத்தை ஓடியோடி ஐந்து மாதங்கள் பாடியும் படித்தும் மகிழ்ந்தேன். ஓடியோடி எப்படி படிப்பது? பேரூர்தியை ஓட்டுனர் செலுத்திக் கொண்டிருக்க யான் இருக்கையில் இருந்து கொண்டு சிலப்பதிகாரத்துக்குள் மனதை ஓடவிட்டேன். மனம் சிலம்பைச் சுற்றியது பேரூர்தி நகரைச்சுற்றியது. சிலம்பில் பல செய்திகள் உள்ளன அதை யானும் பகிர்ந்து கொள்கிறேன்.

"எனது பெயர் கண்ணகி. யான் பூம்புகார் நகரில் ஒரு வணிகனுக்கு மகளாகப் பிறந்தேன். எனக்கு அப்பொழுது பன்னிரண்டு இருக்கும். எனக்குத் தந்தையானவர், யான் பூப்படைந்ததும் என்னை அவரின் நண்பர் மகனான கோவனுக்குகட்டிக் கொடுத்தார். இரு வீட்டார் விருப்போடும் திருமணம் இனிதே நடந்தேறியது.அப்போழ்து அவருக்கு (கோவனுக்கு) அகவை பதினாறு. அவர் துடிப்புள்ள இளைஞன். அது மட்டுமல்ல யானையோடும் சண்டை செய்து வெல்லக்கூடிய வீரன். அவரை சிறு அகவையிலிருந்து காதலித்து வந்ததால் அவர் செய்யும் சிறு குற்றங்களைக் பொறுத்திருக்கிறேன். வணிகத்துறையில் கைதேர்ந்தவர். அவருக்கு ஈடாய் பூம்புகாரில் யாருமில்லை. இது புகழ்ச்சியன்று உண்மை.பல நாடுகளுக்கும் சென்று வணிகத்தில் ஈடுபட்டு மீண்டும் நாடு திரும்புவார். சோழனின் நம்பிக்கைக்கு ஏற்றவராய் சோழநாட்டை மேம்படுத்தியவர் என் கண்ணாளர் கோவலன்."

ஞாயிறு, 1 மே, 2011

செந்தமிழ் நானென்னும் போதினிலே


புறம்பு நூறு


புறநானூறு, பொங்கிவரும் வீரத்தின் புனலாறு; செங்கழல் அணிந்த வேந்தர்களின் செந்தழல் சீற்றம் குருதியாக அப்புனலாற்றில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெகுளியின் வெப்ப ஊற்றுப் பெருக்கில் விளைந்த பாடல்கள் அவை. இரும்பின் சுவை கண்ட வஞ்சினமிக்க வீரர்கள் புகுந்து விளையாடிய போர்களப் பாடல்கள் புறநானூற்றில் பதிவாகியுள்ளன; ஆழ்ந்தகன்ற அறிவுடன் கூடிய செறிவுமிக்க அறப்பாடல்களும் வாழ்க்கைக்கு விதியாகியுள்ளன. மொத்தத்தில் பண்டைத் தமிழர் வரலாற்று ஆவணம் இந்நூல்._(முனைவர் இராம குருநாதன்)

ஆம், முனைவர் இராம. குருநாதன் அவர்களின் புறநானூறு ஒரு புதிய பார்வை அருமையான கையேடு. புறப்பாடல்களை பாட விரும்புவோர் ஐயாவின் இந்தக் கையேட்டை வைத்திருப்பது சிறந்தது. அக்குவேறு ஆணிவேறாய் ஒவ்வொரு பாடலையும் ஆய்ந்து எழுதியிருக்கும் குறிப்பு ஒவ்வொன்றையும் தமிழர் அறிந்திருக்க வேண்டும். இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகால மக்களின் வரலாற்றில் நிகழ்ந்துள்ள நன்மை தீமைகளை அறிய இந்நூல் உதவுகிறது. ஒவ்வொரு தமிழரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய அரிய நூல். நன்றியன் ச.உதயன்.

இயல் - புறநானூறு

பாடியவர்: கணியன் பூங்குன்றன்

திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி


யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.(192)

**
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

சாதலும் புதுவது அன்றே ;

வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.(192)


உற்றுணந்தது:

உலகத்து ஊர்களிலே உலகத்தார் அனைவரும் உறவுகளே அவ்வுறவுகளோடு கூடி வாழ்கையில்,
தீமையும் நன்மையும் பிறர்தருவதில்லை; நோவதும் அந்நோயிலிருந்து நீங்குவதும் முன்பு கூறியது போன்றதே;சாதலும் புதியதன்று; வாழ்தல் இனிது என்று மகிழ்தலும் இல்லையே;சினந்து இவ்வுலகம் நிலையில்லாதது என்பதும் இல்லைவேயில்லை;

மின்னல் வானம் இடைவிடாது நீரை வார்க்கத் தலைப்பட்டது; அந்நீர் கற்களிலே அடிபட்டு அடிபட்டு ஒலித்துக்கொண்டு வலிமையான பெரிய ஆறாய் ஓட; அந்நீரில் பயணிக்கும் ஒற்றை துடுப்புடைய புணை(தெப்பம்,பரிசில்)அவ்வழியே செல்லும்; அதுபோல் அருமையான இந்த உயிரைக் கொண்ட வாழ்வும் தலைப்பட்டது என்று திறனுடையோர் கண்டு தெளிந்தனர். ஆதலின், பெருமையாய் பெரியோரென்று புகழ்தலும் இல்லை அதனினும் சிறியோரென்று இகழ்தலும் இல்லையே.

"பட்டது தான் வாழ்க்கை;படுவது தான் யாக்கை"_கிருஸ்ணன் பாலா
"கையில் நூலைப் பிடித்துக்கொண்டு நூல்கட்டையை ஓடவிடும் போழ்து நூலிருக்கும் வரைதான் கட்டை ஓடும் என்பது சித்தாந்தம்"
பதிவர்: _ச.உதயன்.