கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

தாயற்ற குழந்தை


நன்றி
படத்துக்கும் பதிவுக்கும்


புறநானூறு, 4 (தாயற்ற குழந்தை).
பாடியவர் : பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.
திணை : வஞ்சி.
துறை: கொற்ற வள்ளை.


வாள்வலந்தர மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள் களங்கொளக் கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;

தோல் துவைத்து அம்பின் துளைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே எறிபதத்தான் இடம் காட்டக்
கறுழ் பொருத செவ்வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;

களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி

மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே
தாய்இல் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.

அருஞ்சொற்பொருள்:-

1. வலம் = வெற்றி; மறு = கரை.
2. வனப்பு = நிறம் அழகு.
3. களங்கொள்ளல் = இருப்பிடமாக்கிக் கொள்ளுதல், வெல்லுதல்; பறைந்தன = தேய்ந்தன.
4. மருப்பு = கொம்பு.
5. தோல் = தோலால் செய்யப்பட்ட கேடகம்; துவைத்தல் = குத்துதல், ஒலித்தல்.
6. நிலைக்கு = நிலையில்; ஒராஅ = தப்பாத; இலக்கம் = குறி.
7. மா = குதிரை; எறிதல் = வெல்லுதல்; பதம் = பொழுது.
9. கறுழ் = கடிவாளம்; பொருதல் = தாக்குதல்.
10. எறியா = எறிந்து = வீசியடித்து; சிவந்து = கோபித்து; உராவல் = உலாவல்.
11. நுதி = நுனி; கோடு = கொம்பு.
13. அலங்குதல் = அசைதல்; உளை = பிடரி மயிர்; பரீஇ = விரைந்து; இவுளி = குதிரை.
14. பொலம் = பொன்; பொலிவு = அழகு.
15. மா = பெரிய; நிவத்தல் = உயர்தல் தோன்றுதல்.
16. கவின் = அழகு; மாது - ஒருஅசைச் சொல்.
17. ஆகன் மாறு = ஆகையால்.
18. தூவா = உண்ணாத; குழவி = குழந்தை.
19. ஓவாது = ஒழியாது; உடற்றல் = பகைத்தல்; கூ = கூப்பிடு.

இதன் பொருள்:-

வாள்வலந்தர=====> மருப்புப் போன்றன

போரில் வெற்றியைத் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டதால் வீரர்களின் வாள்கள் குருதிக்கறை படிந்து சிவந்த வானத்தைப் போல் அழகாக உள்ளன. வீரர்களின் கால்கள் போர்க்களத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டதால் அவர்கள் கால்களில் அணிந்த கழல்கள் தேய்ந்து, கொல்லும் காளைகளின் கொம்புகள் போல் உள்ளன

தோல் துவைத்து=====> புலி போன்றன

கேடயங்கள் அம்புகளால் குத்தப்பட்டதால் அவற்றில் துளைகள் தோன்றி உள்ளன. அத்துளைகள், தவறாமல் அம்பு எய்வதற்கு ஏற்ற இலக்குகள் போல் காட்சி அளிக்கின்றன. குதிரைகள், பகைவரைப் போரில் வெல்லும் பொழுது, வாயின் இடப்புறமும் வலப்புறமும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டதால் சிவந்த வாய் உடையனவாய் உள்ளன. அக்குதிரைகளின் வாய்கள், மான் முதலிய விலங்குகளைக் கடித்துக் கவ்வியதால் குருதிக்கறை படிந்த புலியின் வாய் போல் உள்ளன.

களிறே கதவு=====> பொலிவு தோன்றி

யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள் உயிரைக் கொல்லும் இயமனைப் போல் காட்சி அளிக்கின்றன. நீ அசையும் பிடரியுடன் விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய, பொன்னாலான தேர் மீது வருவது,

மாக் கடல்=====> உடற்றியோர் நாடே

பெரிய கடலிலிருந்து செஞ்ஞாயிறு எழுவதைப்போல் தோன்றுகிறது. நீ இத்தகைய வலிமையுடையவனாதலால், உன் பகைவர்கள் நாட்டு மக்கள் தாயில்லாத குழந்தைகள் போல் ஓயாது கூவி வருந்துகின்றனர்.

1 கருத்து:

Dr.V.K.Kanniappan சொன்னது…

அன்புடையீர்,
வணக்கம். நான் அரசுப் பணி ஓய்வு பெற்ற (2002)கண் மருத்துவப் பேராசிரியர். ’எழுத்து’ வலைத் தளத்தில் புதுக் கவிதைகளும், சில இலக்கியக் கட்டுரைகளும் எழுதி, பதிவு செய்கிறேன்.

என் கட்டுரை ஒன்று, மதுரைத் தமிழ்ச் சங்க திங்கள் இதழ் செந்தமிழில் வெளியாகி உள்ளது. தற்சமயம் புறநானூற்றிலிருந்து முதல் நான்கு பாடல்களுக்கு எளிய முறையில் உரை எழுதிப் பதிவு செய்திருக்கிறேன்.

உரைப் பேராசிரியர் ஔவை சு.துரைசாமிப் பிள்ளை அவர்கள் உரை, வலைத்தளத்தில் உள்ள உரை மற்றும் சென்னைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரகராதி துணை கொண்டு புரிந்து கொள்ளவும், எளிமையாகத் தரவும் முயற்சிக்கிறேன்.

உங்கள் கட்டுரை மிக பயனுள்ளது.

வாய்ப்பு கிடைக்கும்பொழுது, ’எழுத்து’ வலைத் தளத்தில் என் பதிவுகளையும் வாசித்து கருத்து இடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
டாக்டர்.வ.க.கன்னியப்பன்