கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

திண்டுக்கல் கோட்டை. . .


திண்டுக்கல் கோட்டை. . .
நன்றி
C.R.Selvakumar


திண்டுக்கல் பூட்டுக்கு மட்டும் பெயர் பெற்றது கிடையாது திண்டுக்கல் கோட்டைக்கும் தான் புகழ் பெற்றது இப்போது இந்த கோட்டை திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய இடமாக விளங்குகிறது. இந்த கோட்டை மதுரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ண நாயக்கரால் கி.பி. 1605 ஆம் கட்டத் தொடங்கி பின்னர் திருமலை நாயக்கரால் கி.பி 1659ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

1755 இல் ஹைதர் அலி தன் காதல் மனைவி பகருன்னிசாவையும் ஐந்து வயது மகன் திப்புவையும் ஆங்கிலேயர்களுக்குத் தெரியாமல் இங்குதான் மறைத்து வைத்தார். பின்னர் திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் கோட்டை சீரமைக்கப்பட்டு , பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கூறுவர். மைசூர் போரில் திப்பு சுல்தானை தோற்கடித்து ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர்.
இந்தக் கோட்டை தலையனைத் திண்டு போல் இருப்பதாலேயே இந்த ஊருக்கு திண்டுக்கல் என பெயர் வந்தது. இந்தக் கோட்டை கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் மலை உச்சியில் அபிராமி அம்மன் கோவில் கட்டப்பட்டு ராணி மங்கம்மாள் ஆட்சியில் இந்தக் கோவிலுக்கு செல்ல படிகள் உருவாக்கப்பட்டது. பின்னர் நடந்த மன்னர்களின் படையெடுப்பால் கோவில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில் தான் தற்போது அபிராமி அம்மன் கோவில் உள்ளது.
இந்த மலைக்கோட்டை 900 அடி உயரத்துடனும் 2.75 கி.மீ சுற்றளவும் கொண்டது. பீரங்கிகள் இந்தக் கோட்டைக்கு பதினேழாம் நூற்றாண்டில் காலடி வைத்தன. இந்தக் கோட்டையின் மதில் சுவர் பீரங்கிகளை தாங்குவதற்காக இரண்டு சுற்றுகளைக் கொண்டு கட்டப்பட்டது. இன்று வரை இந்த பீரங்கிகள் கோட்டையில் அழகாய் காட்சிதருகின்றன. இந்தக் கோட்டையில் இருந்த வெடிபொருட்கள் வைக்கும் இடம் மிகவும் பாதுகாப்பானதாக கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தின் மூலம் போரின்போது வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் இவர்கள் அவசர காலங்களில் தப்பிக்கவும் வழிவகை செய்கிறது. இந்த இடத்தில் மொத்தம் 48 அறைகள் உள்ளன, இதில் சிறைச்சாலையும் அடக்கம். எல்லாத்திற்கும் மேல் இந்தக் கோட்டையில் மழை நீர் அந்தக் காலம் முதல் சேமிக்கப்பட்டு வருகிறது.

திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் சையத் இப்ராகிம் என்ற அதிகாரியிடம் கட்டளையிட்டு இந்தக் கோட்டையில் பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கோட்டையின் மதில்களை சீரமைத்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. மைசூர் போரில் 1790 இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட பின் இக்கோட்டை ஆங்கிலேயப் படைகளின் கைகளில் வந்தது.

திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது.குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல் கோட்டைதான். இது 1799 ஆம் ஆண்டு முதல் 1947 வரை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்தது. இன்று தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மாவீரன் பூலித்தேவன் ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பிக்க இந்தக் கோட்டைக்குள் சென்றார். அதன்பிறகு பூலித்தேவனை யாரும் பார்க்கவில்லை என்றும் ஒரு வரலாறு உள்ளது. வரலாறைப் போலவே கோட்டையும் மிகவும் வசீகரமானது. யாவரும் காணலாம்.
இந்தக் கோட்டையைப் பார்க்க நீங்கள் சில அடி உயரம் படிகளில் ஏற வேண்டும். ஏறி விட்டால் உங்களை பிரமிப்படையச்செய்ய கோட்டையின் கம்பீரமும், அழகும் காத்துக்கொண்டிருக்கும். ஏறக் கடினமாக இருப்பதால் பல பேர் இங்கு வருவதில்லை. நீங்களாவது ஏறத் தயராகுங்கள்.

கருத்துகள் இல்லை: