கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 25 அக்டோபர், 2012

தற்கொலைப் போராளி குயிலி..!



வீர முதல் தமிழ் பெண் தற்கொலைப் போராளி குயிலி..! 1776ம் ஆண்டு

வேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுக-நாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டு-கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம். அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார்.

குயிலி. அதுதான் அவள் பெயர். பெயருக்கேற்ற குரலுக்கு சொந்தக்காரி. வயது பதினெட்டு. பிறந்த மண்ணை-யும், வீரத்தாய் வேலு நாச்சியாரையும் உயிரென மதிப்பவள்.

வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல...் குயிலியிடம் வந்தார், ஒருநாள்.

""குயிலி! எனக்கொரு உதவி செய்வாயா?''

""சொல்லுங்கள் ஐயா!''

""நீ உன் ஊரான பாசாங்-கரைக்கு செல்லும்போது இந்தக் கடிதத்தை, சிவகங்கை அரண்-மனைக்கருகில் இருக்கும் வீட்டில் மல்லாரிராயன் என்பவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்த்து விடுவாயா...?''

""சரி.'' என்றபடி கடிதத்தை வாங்க கை நீட்டினாள் குயிலி.
""உனக்கு படிக்கத் தெரியுமா?''

""அய்யா! இதுவரை நான் எழுதப்படிக்கக் கற்றதில்லை''
இப்போது புன்முறுவலுடன் கடிதத்தைக் கொடுத்தார் வெற்றிவேல். குயிலி வாங்கிக் கொண்டாள்.அன்றிரவு.

வெற்றிவேல் வாத்தியாரின் அறையில் அலறல் சத்தம். வேலு நாச்சியார் உட்பட அனைவரும் ஓடிவந்து பார்க்க, குயிலி வெற்றிவேல் வாத்தியாரை கத்தியால் குத்திக் கொண்டிருந்தாள். வேலுநாச்சியாரைக் கண்டதும், குயிலி ஓடிவந்து அவர் காலில் விழுந்து கதறியழுதாள். கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை எழுதியிருந்தார். வேலு நாச்சியார் குயிலியைப் பார்த்துக் கேட்டார்.

""ஏனம்மா! இவன் ஒற்றன் என்று எப்படிக் கண்டுகொண்டாய்?''
""அவர் எழுதியிருந்த கடிதத்தைப் படித்தேன்!''
""உனக்குப் படிக்கத் தெரியுமா...?''
""நன்றாகத் தெரியும்''
""ஒருவர் நம்பி உன்னிடம் ஒப்படைத்த கடிதத்தை படிப்பது தவறல்லவா?''
குயிலி மிகவும் மென்மையான அதேசமயம் திடமான குரலில் சொன்னாள். ""இந்த மண்ணையும் உங்களையும் அந்நியரிடமிருந்து காப்பாற்றச் செய்யும் எந்தச் செய்கையும் தவறில்லை.''

ராணி வேலுநாச்சியார், குயிலியை நன்றிப் பெருக்குடன் அள்ளி அணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து குயிலி வேலு நாச்சியாரின் வலது கரமானாள்.

குயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர்(சக்கிலியர்)வகுப்பைச் சேர்ந்தவள். கொல்லப்பட்ட வெற்றி-வேல் உயர் வகுப்பைச் சேர்ந்தவரன். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், மக்களிடம் குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்.

ஒருநாள். நள்ளிரவு.

வேலு நாச்சியார் தன் மகள் வெள்ளைச்சி நாச்சியாருடன் மஞ்சத்தில் படுத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். குயிலி தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். வெளியே காலடிச் சத்தம் கேட்டு உஷாரானாள். மறைந்து நின்று கொண்டாள். ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போனது. கையை ஓங்கி, கத்தியால் வேலு நாச்சியாரை குத்த முனைய மறைந்திருந்த குயிலி ஓடி வந்து தன் கைகளால் அந்தக் கத்தியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் ரத்தம் ஆறாக ஓடியது. சத்தம் கேட்டு வேலு நாச்சியார் எழுந்து கொண்டார். அந்தக் கயவன் சடாரெனத் துள்ளி, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார்.

1780ம் ஆண்டு

வேலு நாச்சியார், மருது சகோதரர்-கள், ஹைதர் அலி ஆகியோரின் உதவியுடன் திருப்பு-வனம், மானா-மதுரை, காளையார் கோவில், கொல்லங்குடி, திருப்பத்தூர் என்று எல்லா ஊர்களிலும் வெள்ளையர்களையும் அவர்களது கூலிப்படைகளையும் விரட்டி அடித்தார். இன்னும் மீதமிருப்பது சிவகங்கை மட்டும்தான். அதை மீட்டுவிட்டால் இழந்த தேசம் மொத்தத்தையும் மீட்ட பெருமை வந்து சேரும். ஆனால் காவல் பலமாயிருந்தது. கோட்டைக்குள் இருந்த ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலை தரிசிக்கக்கூட பொது ஜனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. விஜயதசமி தினத்தன்று பெண்கள் மட்டும் அம்மனை தரிசிக்க அனுமதிப்பதாகத் தகவல். அடுத்த நாள் விஜயதசமி. வேலுநாச்சியார் ஒரு சிறிய பெண்கள் படையுடன் மாறுவேடத்தில் உள்ளே நுழைய திட்டம் போட்டார். ஆனாலும் வெள்ளையர்களின் ஆயுத பலத்தை நினைத்து சற்றே கலங்கினார்.

அன்று விஜயதசமி. சிவகங்கை கோட்டைக் கதவுகள், ராஜராஜேஸ்வரி அம்மனை தரிசிப்பதற்காகப் பெண்களுக்கு மட்டும் திறக்கப்-பட்டது. மக்கள் வெள்ளத்தில் வேலு நாச்சியாரும் அவர் படையும் மாறுவேடத்தில் கலந்து முன்னேறின.

ராஜராஜேஸ்வரி அம்மனை கண்மூடி தியானித்த வேலுநாச்சியார் சைகை காட்ட, அவரது பெண்கள் படை வெள்ளையரின் படையோடு மோதின. பயங்கர யுத்தம் நடந்தது.

அப்போது "வீல்' என்று யாரோ அலறும் சத்தம். வேலுநாச்சியார் நிமிர்ந்து பார்க்க, கோட்டை மதில் சுவர்மேல் உடம்பெங்கும் நெய்யூற்றி தீயை வைத்துக் கொளுத்திக் கொண்ட ஒரு பெண் திடுதிடுவென ஓடி வெள்ளையரின் ஆயுதக் கிடங்கில் விழுந்தாள். வெள்ளையரின் ஆயுதக் கிடங்கு எரிந்து, பொசுங்கி சாம்பலானது. "அது யாராயிருக்கும்....' என்ற யோசனை-யுடன்.... வேலு நாச்சியார் வெள்ளை-யரோடு சண்டை போட்டார்.

தக்க தருணத்தில் கோட்டைக்கு வெளியே இருந்த சின்ன மருது மற்றும் பெரிய மருதுவின் படைகள் உதவிக்கு வர, எளிதாய் வெற்றி பெற்றார் வேலுநாச்சியார். வெள்ளைத் தளபதி பாஞ்சோர் தோல்வியை ஒப்புக்கொண்டு ஓடிப் போனான். வேலுநாச்சியார் உத்தரவிட, வீரர்கள் எரிந்துபோன ஆயுதச் சாலையைக் கிளறிப் பார்த்தார்கள். அங்கே கரிக்கட்டையாய்க் கிடந்தாள் குயிலி....!





கருத்துகள் இல்லை: