கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

பெருநன் தாள் பணிவாயாக


திணை இலக்கியம்: புறநானூறு
திணை: கரந்தை
துறை: கையறுநிலை


பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
வண்டுமேம் படூஉம்இவ் வறநிலை யாறே
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
பெரிய ஆண் யானையின் அடிபோல விளங்கும் ஒரு கண்ணையுடைய

இரும்பறை இரவல! சேறி ஆயின்
பெரிய பறையை உடையவனே! இரவலனே நீ அவ்வழி செல்வாயின்

தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
தொழாமல் செல்வதைக் கைவிடுக (தொழுது போவாயாக)

வண்டுமேம் படூஉம் இவ் வறநிலை யாறே
(அவ்வாறு செல்வாயானால் இந்தக் கொடியவழி வண்டுகள் இடைவிடாது மேம்பட்டு வாழும் இயல்புடையது, எமக்காய் வீழ்ந்தவன்

பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
பல ஆவின்கூட்டமான நிரையைத் தன்னுடன் மீட்டுவந்து

கல்லா இளையர் நீங்க நீங்கான்
அஞ்சியோடத் தான் மட்டும் போர்களத்தினின்று நீங்காதவனாய்ப்

வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
பகைவவர் விற்கள் எய்த அம்புகள் எல்லாம் தன் உடலில் பாய்ந்து புகக்

கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.
கரையை அழிக்கும் நீரில் அமைந்த அணையைப் போல எதிர்த்து நின்று விலக்கினான்

இதோ! இருக்கிறது அவன் நடுகல்




பொருளுரை:
பெரிய ஆண் யானையின் அடிபோல விளங்கும் ஒரு கண்ணையுடைய பெரிய பறையை உடையவனே! இரவலனே நீ அவ்வழி செல்வாயின் தொழாமல் செல்வதைக் கைவிடுக (தொழுது போவாயாக);அவ்வாறு செல்வாயானால் இந்தக் கொடியவழி வண்டுகள் இடைவிடாது மேம்பட்டு வாழும் இயல்புடையது, எமக்காய் வீழ்ந்தவன் பல ஆவின்கூட்டமான நிரையைத் தன்னுடன் மீட்டுவந்து அஞ்சியோடத் தான் மட்டும் போர்களத்தினின்று நீங்காதவனாய்ப் பகைவவர் விற்கள் எய்த அம்புகள் எல்லாம் தன் உடலில் பாய்ந்து புகக் கரையை அழிக்கும் நீரில் அமைந்த அணையைப் போல எதிர்த்து நின்று விலக்கினான் இதோ! அவன் நடுகல்

கருத்துகள் இல்லை: