கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 17 ஜனவரி, 2008

தமிழரசர் மரபுகள்

1. பாண்டியர் : சரித்திரத்திற்கு உட்படாதவர்: கபாடபுரம் மூழ்கியபின், மண்வூரிலிருந் தாண்டகுலசேகர பாண்டியன் முதல் திருஞானசம்பந்தர் காலத்துக் கூன்பாண்டியன்வரை, 74 பாண்டியர் பெயர்கள் திருவிளையாடற் புராணத்திற் கூறப்படுகின்றன. கடைக்கழக முடிவின் பின் , களப்பிரார் என்ற வகுப்பார் பாண்டிநாட்டைச் சிறிதுகாலம் ஆண்டுவந்தனர்.

சரித்திரத்திற்கு உட்பட்டவர்.

முதல்மரபு

கடுங்கோன் (கி.பி 590 - 620), மாறவர்மன் (620 - 45) , சேந்தன் ( 645 - 70) , அரிகேசரி மாறவன்மன் ( 670 - 710 ) , கோச்சடையன் ( 710 - 40 ) , மாறவர்மன் ராஜசிம்மன் i ( 740 - 65 ) , ஜடில பராந்தக நெடுஞ்செழியன் ( 765 - 815 ) , ஸ்ரீ மாறன் ( 815 - 62 ) , வரகுணவர்மன் ( 862 - 80 ) , பராந்தக வாரராகவன் ( 880 - 900 ), மாறவர்மன் ராஜசிம்மன் ii ( 900 - 20 ) .கி.பி 925 முதல் 12 ஆம் நூற்றான்டுவரை பான்டிநாடு சோழர் வயப்பட்டிருந்தது.

இரண்டாம் மரபு

ஜடாவர்மன் குலசேகரன் ( 1190 - 1217 ), மறவர்மன் சுந்தரபாண்டியன் ( 1216- 38 ) , மறவர்மன் சுந்தரன் ( 1238 ) , ஜடாவர்மன் வீரபாண்டியன் ( 1253 ) , மறவர்மன் குலசேகரன் ( 1268 ) , ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ( 1276 ) , மாறவன்மன் வைகிரம பாண்டியன் ( 1283 ) , ஜடாவர்மன் வீரபாண்டியன் ( 1296 ) , ஜடவர்மன் சுந்தரபாண்டியன் ( 1330 ).

பின்பு, அலாவுடின், கம்பன்னவுடையார்,நாயக்க மன்னர், ஆர்க்காட்டு நவாபு, ஆங்கிலேயர் என்பவர் முறையே பாண்டி நாட்டைக் கைப்பற்றினர்.

சோழர்: (சரித்திரத்திற் குட்படாதவர் - முற்காலத்தவர்) :
சூரியன் , மனு , இக்குவாகு , ககுத்தன் , புலியும்மானும் ஒரு துறையுண்ண ஆண்டவன், மாந்தாதா, முசுகுந்தன் , தேவர்க் கமுதமளித்தவன், வல்லபன், சிபி , சுராதிராசன் , சோளன், இராசசேகரி, பரகேசரி, காலனிடத்தில் வழக்குரைத்தோன், காந்தன், காகந்தி , அனைத்துலகும் வென்றோன், வேந்தனைக் கொடியாக வைத்தோன், ஒருகடலில் மற்றொரு கடலைப்புக விட்டோன், தன் குருதியை உண்ணவளித்தோன், காற்றைப்பணிகொண்டோன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செப்பியன், வானவூர்தி செலுத்தினோன், அரசர் சூளாமணி , வீரவாதித்தன் , சூரவாதித்தன் முதலியோர்

மனுவுக்கு முன்னிருந்த சோழ மன்னவர் கணக்கற்றவர். அவர் பெயர் திட்டமாய்த் தெரியவில்லை.சோழர், திருவாரூர் சீகாழி உறையூர் புகார் தஞ்சை செயங்கொண்ட சோழபுரம் முதலிய பல நகரங்களைப் பல சமையங்களில் தலைநகராகக் கொண்டிருந்தனர்.

சரித்திரத்திற்கு பிற்கலத்தவர் : உருவப் பஃறேர். இளஞ்சேட் சென்னி , கரிகாலன் , கிள்ளிவளவன் , தித்தன் , பெருங்கிள்ளி , நல்லுத்தரன் , கோப்பெருஞ் சோழன் , கோச்செங்கட் சோழன் முதலியோர்.

இவருள் கரிகால் வளவன் பனிமலையிற் புலியைப் பொறித்து நாவலந்தேசம் முழுதும் தன் ஆணையைச் செலுத்தினான்.

கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை சோழநாட்டின் வடபாகமான தொண்டைநாடும், ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை சோழநாடு முழுவதும் பல்லவராட்சிக்குட்பட்டிருந்தது.

சரித்திரத்திற் குட்பட்டோர்
விஜயாலயனும் முதலாம் ஆதித்தனும் (850 - 907), முதலாம் பராந்தகன் ( 907 ), இராஜாதித்தன் (947 ) , கண்டராதித்தன் மதுராந்தகன் அரிஞ்சயன் 2ஆம் பராந்தகன் 2ஆம் ஆதித்தன் முதலியோர் (970 - 985 ), முதலாம் ராஜராஜன் (985 - 1014 ), ராஜேந்திர சோழதேவன் ( 1012 ), ராஜாதிராஜன் ( 1018 ), விஜயராஜேந்திரதேவன் (1052 ), ராஜ மகேந்திரனும் வீரராஜேந்திரனும் அதிராஜேந்திரனும் (1055- 1070 ), முதலாம் குலோதுங்கன் ( 1070 ), விக்கிரமச்சோழன் ( 1118 ), இரண்டாம் குலோதுங்கனும் இரண்டாம் இராஜராஜனும் இரண்டாம் ராஜாதிராஜனும் (1143 - 78 ), 3ஆம் குலோத்துங்கன் ( 1178), மூன்றாம் இராஜராஜன் ( 1216 ), மூன்றாம் இராஜேந்திரன் ( 1246 ).

இவருள்,
ராஜேந்திர சோழதேவன் குமரியிலிருந்து கங்கைவரை தன்னடிபடுத்தி ஈழம் (இலங்கை ), கடாரம் ( பர்மா ), முதலிய நாடுகளையும் கைப்பற்றினான்.மாறவர்மபாண்டியன் 1222 - லும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 1267-லும் சோணாட்டைக் கொண்டனர். பின்பு முறையே, துலுக்கர், உடையார், நாயக்கர், மராட்டியர்,ஆங்கிலேயர் என்பவர் சோணாட்டைக்கைக்கொண்டனர்.

சேரர் :பாரதப்போரில் இருபடைகட்கும் சோறு வழங்கியவன் பெரிஞ்சோற்றுதியஞ் சேரலாதன்.

சேரர் , கரூர் , வஞ்சிகொடுங்கோலூர், முதலிய நகர்களை முறையே தலைநகராகக் கொண்டிருந்தனர்.கடைக்கழகமரபினர்உதியஞ்சேரல், இமையவருமன் நெடுஞ்சேரலாதன்,பல்யானைச்செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்,செங்குட்டுவன், ஆடுகோட்பட்டுச் சேரலாதன், முதலியோர். செங்குட்டுவன் வடநாட்டின் மேற் படையெடுத்துச் சென்று ஆரியவரசரை வென்று , நாவலந்தேசம் முழுதும் தன்னடிப் படுத்தினான். மாந்தரம் பொறையன், கடுங்கோ , கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேர லிரும்பொறை, அந்துவஞ்சேர லிரும்பொறை, செல்வக் கடுஞ்கோ லிரும்பொறை, யானைக்கட்சேய் , மாந்தரஞ்சேர லிரும்பொறை, கணைக்கா லிரும்பொறை முதலியோர்.

கடைக்கழக காலத்தில் , தகடூரென்னும் தருமபுரியில், அதிகமான் நெடுமா அஞ்சி , அதியமான் பொகுட்டெழினி முதலிய அதிகர் மரபினர் ஆண்டுவந்தனர். 13ஆம் நூற்றாண்டிலும் அம்மரபைச்சேர்ந்த விடுகாதழிய பெருமாள்ளென்னும் சிற்றரசன் இருந்திருக்கின்றான்.

மலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டுப்பகுதியல் 8ஆம் நூற்றாண்டில் குலசேகர ஆள்வாரும், 9ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் நாயநாரும் ஆண்டனர்.
மலைக்குகிழக்கிலுள்ள சேரநாட்டுப்பகுதியில் தென்பாகம் (கோயம்புத்தூர் வட்டம் ) கழககாலத்திலேயே கொங்கு நாடென பிரிந்துவிட்டது. பின்பு சில நூற்றாண்டுகளுக்குப்பின் வடபாகமும் (சேலம் வட்டம் ) கங்கபாடியென பிரிந்துவிட்டது. மலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டுத்தமிழர் 14ஆம் நூற்றாண்டில் மலையாளியராகத் திரிந்துவிட்டனர். மைசூர் நாடு 12ஆம் நூற்றாண்டுபோல் கன்னட நாடாக மாறிவிட்டது. தெலுங்கர் 8ஆம் நூற்றாண்டிலேயே கொங்குநாட்டிற் குடியேறத்தொடங்கிவிட்டனர்.

கருத்துகள் இல்லை: