கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 22 ஆகஸ்ட், 2012

பண்டிதர் க. அயோத்திதாசர்

தமிழ்த் தேசிய தந்தை பண்டிதர் க. அயோத்திதாசர்

பண்டிதர் க. அயோத்திதாசர் 1845 வருடம் மே-20 ல் சென்னையில் பிறந்தார். தன் இயற்பெயர் காத்தவராயன். அப்பா பெயர் கந்தசாமி, அம்மா பெயர் தெரியவில்லை. பண்டிதருடைய தாத்தா பெயர் கந்தப்பன். கந்தப்பன் ஆங்கிலேயரிடம் வேலை பார்த்தார் . பழைய ஓலை சுவடிகள், தமிழ் நூல்கள் வைத்திருந்தார். பாரம்பரிய சித்த மருத்துவராக இருந்தார்.

இன்று நாம் வைத்திருக்கும் த
ிருக்குறள் நூல் பண்டிதறுடைய தாத்தா பாதுகாத்த நூலாகும். தன் தாத்தா கந்தப்பனைபோலவே மிக சிறந்த தமிழ் பண்டிதராக, சித்த மருத்துவராக விளங்கினர். வல்லகத்தி புலவர் அயோதிதாசரிடம் கல்வி கற்க சென்றார். தன் குருவின்பால் கொண்ட அன்பின்காரணமாக தன் பெயரை அய்யோதிதாசர் என்று மாற்றிக்கொண்டார்.

இளமைப்பருவம்

பண்டிதர் வாழ்ந்த சென்னை பகுதியில் 1869 – “சூர்யோதயம்” இதழ் வெளிவந்தது அதை புதுப்பேட்டை வேங்கிடசாமி பண்டிதர் நடத்தினார். 1871 இல் “பஞ்சமன் ” இதழும் வெளிவந்தது. அதில் தமிழ்,தமிழக வரலாறு போன்றவற்றை படித்த பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி தாழ்த்தப்பட்டார்கள்? குறித்து விரிவாக சிந்தித்தார். அதன் பயனாக சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எவ்வாறு விடுவிப்பது ? அவர்களை எப்படி அரசியல் படுத்துவது என சிந்தித்தார். தன் தந்தை கந்தசாமியோடு ஊட்டி சென்றார் தன் 25 வயதில் “அத்வைதானந்த” சபையை 1870௦ இல் உருவாக்கி நடத்தினார்.நீலகிரியில் தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையின பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்தார் . இதன் மூலம் சாதிபேத உணர்வை ஒழிக்க முற்பட்டார். மருத்துவப் பணிகளையும் செய்தார். மலையின பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இரங்கூன் சென்றார் அங்கே தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்கு தசரதராமன் என் பெயர் சூட்டினார். அந்த குழந்தையும் அவரது மனைவியும் நோயினால் இறந்துபோனார்கள்.

திராவிட மகாஜன சபை

இரங்கூனில் செல்வசெழிப்பாக வாழ்ந்தாலும் தமிழின மக்கள் எப்படி சாதியால் ஒடுக்கப்பட்டார்கள் ? தீண்டப்படாத மக்களாக ஒதுக்கப்பட்டது எப்படி ? என்றும் அவர்கள் விடுதலை குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்தார். மீண்டும் ஊட்டி வந்து, தன் உறவினரான ரெட்டமலை சினிவாசன் தங்கை தனலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பட்டாபிராமன், மாதவராம், ஜானகிராமன்,ராஜாராமன் 4 மகன்கள் பிறந்தனர். இந்நேரத்தில் ஊட்டிக்கு ஓய்வொடுக்க ஆல்காட் அவர்கள் வந்திருந்தார். பண்டிதரும் ரெட்டமலை சினிவசனும் ஆல்காட்டை சந்தித்துப்பேசினார்கள். பல முறை விவாதித்தனர்.

மதம், பவுத்த மதம் குறித்து நிறைய விவாதித்தனர். இச்சந்திப்புகள் பண்டிதரை இனொரு திசைக்கு இட்டுச்சென்றது .

சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கு பள்ளி ஒன்றை துவக்கி நடதிதிக்கொண்டிடுக்கும் அருட் பணியாளர் ஜான் ரத்தினம் அவர்களோடு பண்டிதருக்கு நட்பு ஏற்பட்டது. ஒத்தக்கருத்துகொண்ட இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். ஜான் ரத்தினம் 1882 இல் திராவிடர் கழகம் என்ற ஒரு அமைப்பை நடத்திவந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக 1885 இல் “திராவிட பாண்டியன் ” என்னும் இதழை துவக்கினார். அந்த இதழின் துணை ஆசிரியராக பண்டிதர் பொறுப்பேற்றார்.பின்னால் தமிழன் இதழ் சிறப்பாக நடத்தியதற்கு இந்த பின்புலமே காரணமாக இருந்தது. பண்டிதருக்கு அம்பிகாதேவி , மாயாதேவி என்ற இரு மகள்கள் பிறந்தனர்.

நாராதீய புராண சங்கைத் தெளிவு

ஆல்காட் , ஜான் ரத்தினம் இருவருடைய தோழமையினால் பண்டிதரின் சிந்தனை விசாலமடைந்தது .தமிழின பூர்வக்குடிகள் ஏன் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் ? என்ற தேடுதலால் ஊருஊராயி சுற்றித்திருந்தார். அப்போதுதான் “நாராதீய சங்கைத் தெளிவு ” எனும் ஓலைச்சுவடி கிடைத்தது. அதில் பவுத்தர்கள் எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்பதையும் சாதி பேத விவரங்களையும் விவரித்திருந்தது. அதன் 570 பாக்களையும் படித்துவிட்டு , தன் நெடிய ஆராய்ச்சியின் விளைவாக பவுத்தத்தின் அடிப்படையை தாம் வந்தடைந்ததாக பண்டிதர் குறிப்பிடுகிறார்.

நீலகிரியில் ஏற்கனவே ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்து “திராவிட மகாஜன சபை ” யை 1890 இல் துவக்கி நடத்தினார் . திராவிட மகாஜன சபையின் சார்பாக ஒரு மாநாட்டை ௦01-12-1891 இல் ஊட்டியில் நடத்தினார்

இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றி காங்கிரஸ் செயலாளருக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பட்டது.

அத்தீர்மானங்கள்:

பறையர் எனக் கூறுவது அவதூறு, குற்றம் என சட்டம் இயற்றவேண்டும்


கல்வி வசதி வேண்டும்

கல்வி உதவித் தொகை அளிக்கவேண்டும்

கல்வி கற்றவர்களுக்கு அரசு வேலை

உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்

பொது இடங்களில் நுழைய உரிமை

அரசு அலுவலகங்களில் நுழைய அனுமதி

கிராம முன்சீப் பதவி

கிராம புறம்போக்கு தரிசு நிலங்கள் வழங்கவேண்டும்

சிறைச்சாலை சட்டம் 464 பிரிவை நீக்குதல்

1892 ஏப்ரல் மாதம் சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில், நீலகிரி பிரதிநிதியாக பண்டிதர் கலந்துகொண்டார் .இம்மாநாட்டில்தான் ஒடுக்கப்பட்டோருக்கு இலவச கல்வி ,புறம்போக்கு தரிசு நிலம், வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். இறைவனை வழிபட கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டபோது, அரங்கத்தில் உள்ள அனைவரும் எழந்து நின்று ” அந்த பறையனை வெளியே துரத்துங்கள் ” என சத்தம் போட்டார்கள் . பண்டிதருக்கு ஒரே அதிர்ச்சி. நாங்கள் இந்துக்கள் தானே ஏன் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கிறீர்கள் என திரும்பத்திரும்ப கோபமாக கேட்டார். “உங்களுக்குத்தான் முனியாண்டி, காளியாத்தா , மாரியாத்தா இருக்க்கே அதை கும்பிடுங்கோ ” என்று சொல்லி பண்டிதரை மாநாட்டைவிட்டு விரட்டிவிட்டனர். பண்டிதர் கடும் கோபத்தோடு ஊர் திரும்பினார்

தமிழன் இதழ் 102 ஆண்டு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தொல்தமிழர்கள் சாதியற்ற திராவிடர்கள் உரிமைகளைப் பற்றி பேசி, வேத பிராமணீயத்தை எதிர்த்து, சாதி ஒழிப்பு, சுயமரியாதை , பகுத்தறிவு, பிரதிநிதித்துவம் போன்ற நவீன கருத்தாக்கங்களை உருவாகியண்டிதர் க. அயோத்திதாசரின் தமிழன் இதழ், 102 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

சென்னை இரயப்பெட்டையிலிருந்து புதன் தோறும் 19.06.1907 முதல் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் “ஒரு பைசாத் தமிழன்”என்று தனித்துவமாய் பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது. இந்த இதழ் யாருக்காக வெளிவருகிறது எனவும் விளக்குகிறார். ” உயர் நிலையும், இடைநிலையும் ,கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி , சரியான பாதை , நேர்மை ஆகியவற்றை கற்பிப்பதற்காக, சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும் , கணிதவியலாளரும் இலக்கியவாதிகளும் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தமிழ் மனம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் கையொப்பம் வைத்திதனை யாதரிக்க கோருகிறோம் .” என அறிவிக்கிறார்.

இதழின் முகப்பில் “ஒரு பைசாத் தமிழன்” என்று இதழின் பெயரை புத்த குறியீட்டு வடிவமான ஒன்பது தாமரை இதழ்களின் மீது எழுதி அதன் இடப்புறம் ‘ஜெ ய து ‘ என்றும் வலப்புறம் ‘மங்களம்’ என்றும் எழுதியும் நடுவில் நன்மைக்கடைபிடி என எழுதி இரு புறமும் மலர் கொத்து என அழகுணர்வோடு மிக நேர்த்தியாக தன் இதழின் சின்னத்தை வடிவமைத்திருக்கிறார்.

முதல் இதழில் கடவுள் வாழ்த்து , அரசர் வாழ்த்து ,தமிழ் வாழ்த்து,பூர்வத் தமிழொளி (அரசியல் தொடர்) வர்த்தமானங்கள் (நாட்டு நடப்புச்செய்திகள் ) சித்த மருத்துவ குறிப்புகள் இடம்பெற்றன.

ஓராண்டுக்குப் பிறகு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ” அச்சுக் கூடமும் பத்திரிகைப் பெயரும் மாறுதல் அடைந்தது” 26.08 .1908 என விளக்கமளித்து “ஒரு பைசா” நீக்கப்பெற்றது. பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு , வானிலை அறிக்கைகள், வாசகர் கடிதம் , அயல் நாட்டு செய்திகள் , விளம்பரம், நூல் விமர்சனங்கள் போன்றவை பிரசுரமாயின

தமிழகர்கள் அதிகம் வாழும் கர்நாடக, கோலார் தங்க வயல் , பர்மா தென்னாப்பிரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழன் இதழ் பரவியது.இந்து மதத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகளை மிக கடுமையாக விமர்சித்தது.

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் வேத மத , பிராமணீய எதிர்ப்பு , சாதி ஒழிப்பு , தமிழ் மொழியுணர்வு , பகுத்தறிவு சமுக நீதி பிரதிநித்துவம் ,தலித் விடுதலை ,சுயமரியாதை இந்தி எதிர்ப்பு பெண் விடுதலை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல் கருத்துத் தொகுப்பை வழங்கிய தமிழன் இதழ் குறித்து யாரும் பேச தயக்கப்படுகிரர்கள்.இதழியலும் அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன என்று நாம் உறுதியாக கூறலாம்.

தமிழ்த் தேசிய தந்தை

சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் பிறந்து (20.05.1845 ) சிறுவயதில் நீலமலைக்கு குடிபெயர்ந்து அங்கே ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி 1870 இல் ‘அத்வைதானந்த சபை ‘ ஒன்றை நிறுவி கிருத்துவ மத மாற்றத்திற்கு எதிராக செயல் பட்டார். அவரது குடும்பம் வைணவ மத மரபுகளை பின்பற்றியவர்கள்.

அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதனுடைய இறைக்கொள்கை – சடங்குவாதம் -ஆண்மீகக்கொள்கை – மத பண்பாட்டுத்தளங்கள் என அனைத்து வடிவங்களுக்க்ம் எதிரான ஒரு பகுத்தறிவு ரீதியான விடுதலை மெய்யியலே அவரது தேடலாக இருந்தது. அதன் அடிப்படையில் சுய சிந்தனை, சுய கருத்தியல் தேடலாக்கவுமிருந்தது.

பண்டிதருடைய காலத்தில் இந்துத்துவம் மீட்டுருவாக்கம் செய்த காலம். பிரம்மா சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் அனைத்தையும் இந்துக்குள் வலிய திணித்த காலம். 1861 – 1891 வரை ‘யாரெல்லாம் கிறித்துவர்கள் இசுலாமியர்கள் இல்லையோ அவர்களெல்லாம் “இந்து” என பதிவு செய்த காலம்.

பண்டிதர் வைணவ மரபை ஆதரித்தாலும் “இந்து” என்ற அடையாளத்தை ஏற்க மறுத்தார். அவ்வாறு இந்து அடையாளத்தை ஏற்றுக்கொண்டால், இந்து சமூகத்தின் சாதிய அமைப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். தீண்டாமை,காணாமை, சாதியக் கொடுமையை அதிகமாக அனுபவகிக்கும் தலித்கள் ஒருபோதும் “இந்து” அடையாளத்தை ஏற்கக்கூடாது அதற்கு மாற்றாக ஒரு அடையாளத்தை தேடத்துவங்குகிறார். தமிழகத்தில் அப்போது பக்தி வடிவங்களில் தமிழ்-சைவ மீட்டுருவாக்கம் முயற்சி நடந்தது. இது ஒருவகையில் சாதியத்தை உள் வாங்கலின் ஒரு முயற்சியாகவே இருந்தது. அதாவது தமிழ்-சைவம் பிராமண எதிர்ப்புப் பேசியது ‘சாதி ஒழிப்பு ‘ குறித்து மௌனம் காத்தது என்பதால் தமிழ்-சைவத்தோடு இணைய வில்லை.


இதற்கிடையில் 1881 களில் ஆங்கில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் புகுந்து தலித்துகளுக்கு தனித்துவமான் அடையாளத்தை பதிவு செய்கிறார். “ஆதிதமிழன்” original tamils என்று பதிவு செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறார். அப்போதெல்லாம் சாதியைச் சொல்லித்தான் அழைப்பார்கள். சாதிதான் தமிழனுக்கு அடையாளமாக இருந்தக்காலம். அரிஜன் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை அதற்கு பதிலாக “பஞ்சமர்கள்” என்றும் Depressed Class என்று அழைப்பதை மறுத்து “ஆதி தமிழன்” என அழைத்தார். சாதியின் பெயரால் அழைக்கப்பட்ட தமிழர்களை சாதியற்ற தமிழர்களாக பதிவு செய்தார். இழிவான பெர்யர்களை மறுப்பது என்பது கூட சாதி ஒழிப்புக்கு வழிஎன்றார். 1886 ஆண்டில் “ஆதி தமிழர்கள் (தலித்கள்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல” என அறிக்கைவிட்டார். “நீண்ட காலத்த்ற்கு முன் நிலவிய பிராமணிய எதிர்ப்பு மரபின் வாரிசுகளே அவர்கள்” என்றார். தமிழ், தமிழன் அடையாளத்தை தலித் மக்களை மையமாகக்கொண்டு ஒரு தேசியத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார்.


பிரம்மா ஞான சபை ஆல்காட் ( 1832 – 1907 ) ஏற்பட்ட தொடர்பால், தீண்டதாருக்கு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், சென்னையில் முக்கியமான் 5 இடங்களில் “ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் ” என தலித்துகளுக்கு இலவச பள்ளிகளை நிறுவினார். இருந்தபோதும் பிரம்மா ஞான சபை பண்டிதரின் தேடலுக்கு இசைவானதாக இல்லை. கல்வியால் மட்டுமே தலித் மக்களை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தலித்துகளுக்காக ஒரு பெரிய பள்ளியை சென்னையில் நடத்திய அருட் திரு.டி. ஜான் ரத்தினம் அவர்களோடு நட்புகொண்டார், அவரோடு “திராவிட பாண்டியன்” இதழ் நடத்தினார். இருந்தும் ஜான் ரத்தினம் போல கிறித்துவ மதத்திற்கு மாறவில்லை. இந்தியாவில் அப்போதிருந்த ஒரே கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி. அதை “இந்து” பிராமணக் கட்சி என்று ஒதுக்கிவிட்டார். மேற்கண்ட அனதைது அமைப்புகளிலிரிந்தும் வேறுபட்டும் அவற்றிக்கு எதிராகவும் சுய அரசியலை சுய கருத்தியலை நோக்கி நகர்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதற்காக எழுப்பிய பண்பாட்டு , மதத் தடைகளை நீக்குவது மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் மெய்யான விடுதலையை கொண்டுவரும். அதற்கான மரபுகளைத் தேடிக்கண்டுபிடிதார். அது “பௌத்தம்” என்ற சாதி ,வருண எதிர்ப்பு மதம்தான் பண்டிதருக்கு புகலிடமாகபட்டது. ஆல்காட்டின் உதவியோடு 1898 இல் பௌத்தம் தழுவினார்.

சென்னை இராயப்பேட்டையில் ‘சாக்கிய பௌத்த சங்கம் ‘ நிறுவினார். சாதியற்ற திராவிடர்களுக்கு முன்னோர் வரலாறுகளையும் பௌத்த தன்மத்தையும் விளக்குதல் மற்றும் நற்பண்பிலும் சமய ஒழுக்கத்திலும் தலித்துகளை முன்னேற்றுதல் போன்ற நோக்கங்களாக இருந்தது.

பண்டிதர் நடத்திய ஏழு ஆண்டு தமிழன் இதழ்களை காலவரிசையில் பார்த்தால், பண்டிதரால் உருவாக முடிந்த மாற்றுச் சிந்தனைகள், மாற்றுக் கதையாடல்கள், மாற்று வரலாற்ரைகாணலாம். சுய அரசியல் உருவாக்கத்தைக் காணலாம்.

சாதி இழிவை அகற்றுவது

இழிதொழில்களை, சாதிப் பெயர்களை மறுத்தார்.அவர்களை சாதியர்றோர் என புதிய வரலாற்றை எழுதினர்.

தலித்களுக்கு விடுதலையும் அதிகாரமும் வேண்டுமெண்டார்.

சமுதாய சமத்துவம், சாதி பேதமற்ற சமூகத்தை கட்டமைக்க விரும்பினார். அதற்கு பண்டிதர் வழிகாடியகவும் இருக்கிறார்.

பிராமணீய இந்துமத எதிர்ப்பு யாவும் தன் சொந்த பட்டறிவின் மூலம் பெற்ற ஞானமாகும்.

பண்டிதர் காலத்தில் வெளிவந்த தமிழ் இதழ்களின் பெயர்கள்

ஞான போதினி, பிரம்மா ஞானபோதினி, சுகிர்த வர்த்தமானி, நீலலோசினி, விகடதூதன், சுதேசமித்திரன், பிரபஞ்ச மித்திரன், புதுவை மித்திரன், நாஞ்சில் நேசன் தென்ன்னிந்திய டைம்சு….என வடமொழியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த காலத்தில் , இன உணர்வேடு , இனிய தமிழில் தமிழன் எனபெயர் சூட்டி ஒரு வார ஏட்டை நடத்திய முதல் தமிழ்த்தேச உணர்வின் முன்னோடி பண்டிதர் க அயோத்திதாசர் ஆவார்.

இந்திய பாரம்பரியம் பௌத்தம் மதமாக இருந்தது என்பார். அதனை தன் தமிழ் புலமை மூலம் விளக்குகிறார். இந்தியா என்ற சொல் ‘இந்திரம்’ என்பதின் திரிபு. இந்தியாவை புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு ‘இந்திரதேசம்’ என்ற பெயர் வந்தது. ஆரியர் வருக்கைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது. இந்த தேசியத்தை பவுத்தம் உருவாகியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம் ,சமயம், அறக்கருத்தொற்றுமை,மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அந்நியரான வெளியாரின் ஊடுருவால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர மாயத்தன்மையென திரிக்கப்பட்டது. அதாவது சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்ட்கள் நசித்து திரித்துவிட்டார்கள்.

”மண்ணின் மைதர்களே இமண்ணை ஆளவேண்டும்” என்கிறார். 30-10-1912 தமிழனில் எழுதுகிறார் சுதந்திரம் அளித்தால் இம்மண்ணின் மைந்தரான தமிழருக்கே வழங்கவேண்டும் என்றார். ” தமிழ் மொழியில் பிறந்து, தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வக்குடிகள் சுதேசிகளுக்கு வழங்கவேண்டும் ” மேலும் ” கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னர் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் என கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால், நாடு பாழாகி சீர்கெட்டுவிடும்” என நாடு விடுதலை பெற 35 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கார் 1930 களில் தலித்கள் ஒரு தேசத்தை ஆளுகிற வர்க்கமாக மாற வேண்டுமென்கிறார்.

பிறப்பால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி நடைபோடும் ஓர் அரசியல் கருத்தியலை உருவாக்கும் ஒரு தேசியத்தை கட்டமைக்கவேண்டும். அதற்கு நாம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வெண்டும். அதற்கு பண்டிதரும், புரட்சியாளரும் வழிகாட்டியாக இருக்கிறார்கள்


கருத்துகள் இல்லை: