கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 26 ஜூலை, 2009

வீக்கிங்கர் ( Vikinger )














வீக் - ( Vik )
வீக்கிங் என்ற சொல், வீக் என்கின்ற நோர்வேசியச் சொல்லில் இருந்து பிறந்தது. நோர்வேசிய மொழியில் ( வீக் - Vik ) என்றால் கடல் அல்லது ஆற்றின் கரையிலிருந்து தரைப்பகுதிக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் சிறிய கடல் அல்லது ஆற்றுப்படுக்கையைக் குறிக்கும்.

வீக்கிங் காலம் ( Viking Time )

வீக்கிங்காலம் எனப்படுவது, வரலாற்றிலே கி.பி 800 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 1050 ஆம் ஆண்டுவரையான சுமார் 250 ஆண்டு காலப்பகுதியைக் குறிக்கிறது. வீக்கிங் என்ற சொல் அக்காலப்பகுதியில், கண்டிநேவியாவில் ( Scavdinevian ) (நோர்வே, சுவீடன், டென்மார்க்) வாழ்ந்த மக்கள் கூட்டத்தைக் குறிக்கிறது. அக்காலத்தில் எழுந்த நூல்களில், வீக்கிங் ( Viking ) மக்கள் மிகக் கொடூரமானவர்களாகவே சித்தரிக்கப் படுகின்றனர். அக்காலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களே கல்வியறிவு உள்ளவர்களாக, மற்றும் நூலாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். அத்தோடு அவர்கள் அக்காலத்தில் இருந்த கிறித்துவ தேவன் கோயில்களில் மதகுருக்களாக இருந்திருக்கிறார்கள். இந்த மதக்குருக்களால் வீக்கிங்கைப் பற்றி எழுதிய நூல்களில், வீக்கிங் ( Viking )மக்கள் மிகக் கொடூரமானவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் வீக்கிங்கினர் அக்காலத்தில் பல கிறித்துவ தேவன் கோயில்களையும் கிறித்துவக் குருமடங்களையும் தாக்கி அழித்து அவற்றிலிருந்த பெறுமதி மிக்க அரிய பொருட்களைக் கொள்ளையிட்டுக் கொண்டு சென்றனர். இதனால் அக்காலத்தில் எழுந்த நூல்கள் வீக்கிங் மக்களை காட்டுமிராண்டிகளாகவே வர்ணிக்கிறது. எனினும் பிற்காலத்திலும், தற்காலத்திலும் எழுந்த வரலாற்று ஆய்வு நூல்கள் வீக்கிங் காலத்தை கண்டிநேவியாவின் பொற்காலம் என்றும், வீக்கிங் ( Viking )மக்களை பல்வேறு தனித் திறமை கொண்ட மக்களாகவும், ஸ்கண்டிநேவியாவில் பல்வேறு மாற்றங்களும் வளர்சியும் அவர்கள் காலத்திலேயே ஏற்பட்டதாக எடுத்துக் கூறுகின்றன. கொள்ளையிட்டதால் வீக்கிங் ( Viking )மக்கள் கொடூரமானவர்களாக சித்தரிக்கப்பட்டாலும், அவர்களிடம் பல்வேறு திறமைகள் காணப்பட்டன.

அவர்கள் கப்பல் கட்டுவதிலே மிகவும் திறமைசாலிகளாகக் காணப்பட்டுள்ளார்கள். அவர்களது கப்பல்கள் ஆழம் குறைந்த நீர்நிலைகளிலும் பயணம் செய்யலாம். அத்தோடு அவை மிகவும் உறுதியாவை அவற்றால் கொந்தளிக்கும் பெருங்கடலிலும் பயணம் செய்ய முடியும். மேலும் வீக்கிங் மக்கள் மிகச்சிறந்த கடலோடிகள், கப்பலோட்டிகள் மிகப்பரந்து விரிந்து கிடக்கின்ற. 'அற்லான்ரிக்" வாரினூடாகக் கப்பலைச் செலுத்தி பல்வேறு நாடுகளுக்கும் அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். தொலில்நுட்பம் விருத்தியடையாத அக்காலப்பகுதியில், கொந்தளிக்கும் மிகப்பெருங் கடலினூடாக பல்வேறு நாடுகளுக்கும் கப்பல்பயணம் மேற்கொள்ளக்கூடிய அறிவுடையவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். வீக்கிங் ( Viking ) மக்கள் மிகப் பெரும் வணிகர்களாகவும் விளங்கியிருக்கிறார்கள். பல்வேறு நாடுகளுக்கிடையே பொருட்களை கப்பலிலே ஏற்றிச் சென்று விற்பதிலும் வாங்குவதிலும் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அக்காலப்பகுதிலேயே கண்டிநேவியா ( Scavdinevian ) , ஏனைய ஐரோப்பிய நாடுகளோடு மேலதிக நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி, ஐரோப்பியாவின் ஒரு பகுதியாக மாறியது.

வீக்கிங்கினரில்( Viking ) கடல்பயணமும் கடல்கடந்த வணிகமும் கிழக்கிலே ருசியா ( Rasia ) வரையும், மேற்கிலே அமெரிக்கரையும் ( Amerika ) தெற்கிலே நடுவன் (மத்திய) கிழக்குவரையும் என்று மிகப்பரந்து கிடந்தது.
இந்த வீக்கிங்கினர் கப்பலிலே வெளிநாடுகள் சென்று மீண்டும் தாய்நாடு திரும்பும்போது பொருட்களையும் செல்வங்களையும் மட்டுமன்றி புதிய சிந்தனைகளையும் கலாச்சார கலை வடிவங்களையும் கொண்டுவந்து சேர்த்தனர்.
இவ்வாறு இவர்கள் வெளிநாட்டில் இருந்து உள்நாட்டிற்கு கொண்டுவந்து சேர்த்ததில் முக்கியமானதாக கிறித்தவ மதத்தைக் குறிப்பிடலாம். வீக்கிங் காலத்திலேயே கிறித்தவ மதம் கண்டிநேவியாவில்( Scavdinevian ) அறிமுகப்படுத்தப்பட்டது. கிறித்தவ தேவாலயங்களையும் கிறித்தவ குருமடங்களையும் கொள்ளையிட்டதால், ஏற்பட்ட கிறித்தவ மதத்துடனான தொடர்பு, பின்னர் கிறித்தவ மதக்குருமார்கள் இங்கு வந்து இங்குள்ள மக்களை அம்மதத்தைத் தழுவச் செய்தனர். அதனூடாக இங்கே (நோர்வேயிலே) கிறித்தவ மதம் பரவியது.

வீக்கிங் ( Viking ) காலத்திலே கலைகள் நன்கு பேணி வளர்க்கப்பட்டன. வீக்கிங் ( Viking )மக்கள் கலைகளிலே மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர். மரங்களிலே கலைவடிவங்களை செதுக்குவதில் வீக்கிங்கினர் திறமைசாலிகள். அவர்கள் வடிவமைத்த கப்பல்களின் முகப்புப் பகுதியில் விலங்குகள் மற்றும் மனிதர்களின் முகங்களை ஒத்த மரத்திலே செதுக்கப்பட்ட உருவங்கள் அழகு தருவதும் அத்தோடு கப்பல் முழுவதும் மரத்தினால் செதுக்கப்பட்ட கலைவடிவங்கள் காணப்படுவது அவர்களின் கலை வெளிபாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
வீக்கிங் ( Viking ) காலத்திலே பெண்களுக்கு கூடுதலான உரிமைகள் வளங்கப்பட்டிருந்தன. ஆண்கள் பொதுவாக கப்பலிலே வெளியிடங்களுக்கு பயணம் மேற்கொள்வதால், உள்நாட்டிலே பெண்களுக்கு கூடுதலான உரிமைகள் வளங்கப்பட்டிருந்தன. ஒரு வீட்டிலே அந்தவீடு அதுவுள்ள காணி மற்றும் சொத்துகள் பெண்களின் பெயரிலேயே பதியப்பட்டிருந்தன. சொத்துகள் சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்படும் போது பெண்களே முடிவுகளை எடுத்தனர். வீட்டில் இருந்த சொத்துகள் யாவிலும் பெண்களே உரித்துடையவர்களாக இருந்தனர். வீட்டு மற்றும் உள்ஊர் அலுவலகங்கள்( நிர்வாகங்கள் ) பெண்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.

வீக்கிங் ( Viking ) காலத்தில் வீரத்திற்கு மிகவும் முன்னுரிமை கொடுக்ப்பட்டது. ஆண்கள் யாவரும் மிகவும் வீரம் மிக்கவர்களாக வளர்க்கப்பட்டார்கள். ஆண்பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே போர்ப்பயிற்சி கொடுக்கப்பட்டு, எந்நேரமும் சண்டையிடுவதற்கும் போருக்குச் செல்வதற்கும் அணியமான ( தயார் ) நிலையில் வைக்கப்பட்டார்கள். எதிரியுடன் சண்டையிட்டு காயப்படுவதும் சண்டையிலே களப்பலியாவதும் பெரும் புனித செயலாகப் போற்றப்பட்டது. வீட்டிலே நோய்வாய்ப்பட்டு, அல்லது அகவை முதிர்ந்து இயற்கை மரணம் எய்வதிலும் பார்க்க, எதிரியுடன் சண்டையிட்டு களத்தில் இறப்பதை பெருமையாக மதித்தார்கள். அவ்வாறு இறப்பதன் மூலம் வீரர்கள் துறக்கம்( சொர்க்கம் ) அடைவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. பெரும் வீரர்களைப் போற்றுவதும் பின்னர் அவர்களின் கதைகளை பிறங்கடைகளுக்குச் ( தலைமுறையினர் ) சொல்வதும் அவர்களின் வழக்கமாக இருந்தது. ஒருவன் இயற்கை மரணம் அடைந்துவிட்டால், அவன் மார்பிலே வாளினால் கீறி அதிலே காயம் ஏற்படுத்தி பின்னர் அவனைப் புதைப்பார்கள். அதன் மூலம் அந்தவீரன் போரிலே விழுப்புண் அடைந்து இறந்தான் என பொருள்கொள்வார்கள் புதைத்த இடத்திலே வீரனுக்கு நடுகல்லும் நாட்டுவார்கள். அதன்பின் அந்த நடுகல்லைப் போற்றுவார்கள். இவ்வாறு அவர்களின் வீரவரலாறு தொடர்கிறது.

இவ்வாறான வீரவரலாறுகள் பழந்தமிழர் வாழ்விலும் காணப்படுவதை தொல்காப்பியத்திலும் புறப்பாடலிலும் காணலாம். அத்தோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் அம்மரபை கண்டுள்ளோம்.
வீக்கிங் மக்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்திருக்கிறது. அதாவது கணவன் இறந்துவிட்டால் அவனின் மனைவியும் தனது உயிரை மாய்த்துக்கொள்ளுவது. நம் தமிழரும் உடன் கட்டை ஏறுவது பற்றி கதைகள் மூலம் அறிந்திருக்கின்றோம்.

வீக்கிங் ( Viking ) காலப்பகுதியில் கண்டிநேவியாவில் ( Scavdinevian )
தோட்டநிலங்களுக்கு பெரும் தட்டுப்பாடு இருந்தது. வீக்கிங்கினர் மிகச்சிறந்த உழவர்கள் எனினும் பயிற்செய்கை நிலங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அவர்கள் வேறு நாடுகளை நோக்கி தொழில் நோக்கமாக கடல்கடந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. இவ்வாறு தொழில் தேடி, வாழ்வாதாரம் தேடி வெளிநாடு சென்றவர்கள், பின்னர் கடற்கொள்ளை, கொள்ளை வணிகம் பேரம்பேசுதல் என்று பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு, ஈற்றில் கண்டிநேவியாவின் ( Scavdinevian ) வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்ப்படவேண்டிய வீக்கிங் ( Viking ) காலம் என்ற பொற்காலத்தை ஏற்படுத்தினர். வீக்கிங் ( Viking ) காலத்தில் கட்டப்பட்ட கிறித்தவ தேவன் கோயில்கள் மிகப்பெரும் கலைப்பெட்டகங்களாக இன்றும் பேணப்படுகின்றன. வீக்கிங் காலத்தில் கட்டப்பட்ட கலைவடிவம் பொருந்திய கப்பல்கள் இன்றும் அருங்காட்சியகத்தில் வைத்துப் பேணப்படுகின்றன. அத்தோடு அக்காலத்து வீக்கிங் ( Viking ) மக்களின் வாழ்கை முறைகள் தொடர்பான அனைத்து காட்சிமங்களும்; அருங்காட்சியகத்தில் வைத்து பேணப்படுகின்றது. அத்தோடு இன்றும் கட்டப்படுகின்ற புதிய கட்டடங்களிலும் வீக்கிங் ( Viking ) மக்களின் கட்டடக்கலை வடிவங்களை புகுத்துவதிலிருந்து வீக்கிங் ( Viking ) மக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இன்று இயங்கும் பல நிறுவனங்கள் மற்றும் முக்கியமான இடங்களின் பெயர்கள் வீக்கிங் ( Viking ) பெயர்களையே தாங்கி நிற்கின்றன. பல்வேறு குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு, சிறுசிறு நிலப்பரப்புகளாக பிரிந்து கிடந்த நோர்வே ( Norge ) , ஒரே மன்னரின் கீழ் ஒரு மிகப்பெரிய தனி அரசாக உருவெடுத்ததும் வீக்கிங் காலப்பகுதியிலேயே ஆகும்.

இதுவரை கூறியவற்றால் வீக்கிங் காலம் கண்டிநேவியாவின் ( Scavdinevian )பொற்காலம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


தொகுப்பும் கட்டுரையும் : தயா. சொக்கநாதன்
பதிவேட்டுப் பதிவு : அரசன். தமிழரசன்.

கருத்துகள் இல்லை: