கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 25 ஜனவரி, 2011

தமிழர்களின் கணக்கு - ஒரு அலசல்

தமக்கென்றோர் ஆண்டுக் கணக்கீட்டினைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறிய போதும், கணக்கியலில் தமிழர் என்றுமே சளைத்தவராக இருந்ததில்லை. நானறிந்தவரை தமிழர்களின் பல்வேறு கணக்கீட்டு முறைகளை

எடுத்துரைக்கும் பழம்பாடல்களை இங்கிட்டிருக்கிறேன். தவறுகள் ஏதேனும் இருப்பின் அது எடுத்துரைத்த என்னுடைய குற்றமே அன்றி, தமிழ்ச் செய்யுள்களின் குற்றமன்று. இவற்றில் வரும் பல கணக்கீட்டு முறைகளின் விளக்கங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். தெரிந்த விளக்கங்களைப் பாடல்களின் கீழேயே இட்டிருக்கிறேன். ஆயினும் இதை என் தளத்தில் இடாததற்குக் காரணம் சரிபார்க்கப்படாத பல விவரங்களே!

மேலும் நானொரு கணித வல்லுனன் அல்ல; எனவே அவ்விதம் தமிழ், கணிதம் இரண்டிலுமே ஆர்வம் இருப்பவர்கள் இவ்வாராய்ச்சியில் அதிகம் உதவக் கூடும்.

எண்ணறிதல்:

(1)

இம்மிதானீ ரைந்தரை யெனவே வைத்திதனைச்

செம்மைதரும் கீழ்முந் திரைசெய்து - பின்னையவை

மூன்றுபடி பத்திரட்டி முந்திரையே யொன்றென்றார்

ஆன்ற வறிவி னவர்.

(அளவீடுகளின் பெயர்கள் இம்மி, கீழ்முந்திரை, மேல்முந்திரை, ஆனால் அவற்றின் தொடர்புகளை அறிய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கிடைத்த, சரிபார்க்கப் படாத விவரங்கள்: 1 முந்திரை= 1 / 320, ஒரு கீழ்முந்திரை= 1 / 102400, ஒரு இம்மி = 1/ 2150400 )

(2)

முந்திரைய ரைக்காணி முன்னிரண்டு பின்னிரண்டாய்

வந்ததோர் காணிநான் மாவாக்கிச் - சிந்தித்து

நாலாக்கிக் காலாக்கி நன்னுதலாய் காலதனை

நாலாக்கி ஒன்றாக நாட்டு.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்: முந்திரை, காணி, அரை, அரைக்காணி, கால், நான்மா, ஒன்று. நான் அறிந்த சரிபார்த்த விவரங்கள்: ஒன்று=1, அரை=1/2, கால்=1/4; சரிபாராத விவரங்கள்: நான்மா=1/5, காணி=1/80, அரைக்காணி=1/160)

நிலவளம் அறிதல்:

(1)

உற்றசீர்பூமி யதனிளொளி பவளங்

கொற்றவேற் கண்ணாய் குவளையெழும் - மற்றை

இடைநிலத்து வேல்துராய் என்றி வைகளாகும்

கடைநிலத்து வெண்மையுவர் காண்.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்: பவளம், வேல், குவளை, துராய், வெண்மையுவர் நிலம்; சரிபாராத விவரங்கள்: (1) உத்தம நிலம்: குவளை, சடை, காந்தை, காவேடு, காவேளை, பவளக்கொடி, புல், செற்றுப்பயிர். (2) மத்யம நிலம்: செருப்படை, துராய், கண்டங்கத்திரி, வேல், அறுகு, சாமை, கேழ்வரகு. (3) அதம நிலம்: ஓடு,

தலை, பொரி, விரை, துடைப்பம், வெண்ணுவர்நிலம், பருத்திக்குமாம்.

நுட்பம் அறிதல்:

(1)

சின்னம்பத் தேமுக்காற் செப்புந் தொகைநுண்மை

நுண்மையில் மூன்று நுவலிம்மி - யிம்மி

இருபத் தரையொன்றாங் கீழாக வேதான்

வருகுமுந் திரையெனவே வாட்டு.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்: சின்னம், நுண்மை, இம்மி, முந்திரை, கீழ், பத்து, முக்கால், மூன்று, இருபத்தரை, முந்திரை)

கழஞ்சு வருமாறு:

(1)

ஒன்று மிரண்டாம் பிளவுமிரண் டாங்குன்றி

குன்றிய மஞ்சாடியைத் தாகும் - என்று

ஒருநா லொன்றா குமென்றோ துவாரெங்கள்

திருமாதே தேனே தெளி.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்:ஒன்று, இரண்டு, பிளவு, குன்றி, மஞ்சாடி. சரிபாராத விவரங்கள்:

ஒருதனி நெல் எடை=வீசம், 4 நெல் எடை= 1 குன்றி, 2 வீசம் = 1 பிளவு, 2பிளவு=1 குன்றி, 2குன்றி=1மஞ்சாடி,

5மஞ்சாடி= 1/4 கழஞ்சு, 4 கால்கழஞ்சு=1 கழஞ்சு)

எடையறிதல்:

(1)

கண்டகழஞ் சீரிரண்டு கைசாக்கை சாநாலு

கொண்ட பலநூறு கூறுநிறை - கண்ட

இரண்டு துலாமுப்ப தோடிரண்டாம் பாரம்

திரண்ட விளமுலையாய் செப்பு.

(இதில் வரும் அளவீடுகளின் பெயர்கள்: கழஞ்சு, கைசா, பலம், நிறை, துலாம், பாரம். சரிபாராத விவரங்கள்: 2கழஞ்சு= 1கைசா, 4கைசா= 1பலம், 100பலம்= 1 நிறை, 2நிறை= 1துலாம், 22துலாம்= 1 பாரம்)

தமிழன்பர்கள் மேலதிக விவரங்கள் இருப்பின் அறியத்தர வேண்டுகிறேன். இன்னும் ஆழ இதனைப் பற்றி ஆராயலாம்.

_பாவலர் இராஜ. தியாகராஜன்.

தொடரும்...............

கருத்துகள் இல்லை: