கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

தமிழ் பூக்கள்


தமிழகம்-
அறிவும் அறிவுசார்ந்த இடமும்..


பழந்தமிழ் மக்கள்
இயற்கையோடு
இயைந்த வாழ்வு
மேற்கொண்டிருந்தனர்..

எனவே, இயற்கையைப்பற்றி
நன்கு அறிந்திருந்தனர்..

இயற்கையைப் பாடிய உலகக் கவிஞர்களை இவர்களுடன் ஒப்பிட
இயலாவண்ணம்,
மிக உயர்ந்த நிலையில் இயற்கையைக் கையாளும் இணையற்ற புலவர்களாகத் திகழ்ந்தனர்..

வாழும் முறைமைக்கு அடிப்படையான ஐவகைநிலப் பாகுபாட்டை
குறிஞ்சி,
முல்லை,
மருதம்,
நெய்தல்,
பாலை
எனப் பூக்களின் பெயரால் அமைத்துள்ளனர்..

இவையே பின்னர்,
திணை ஒழுக்கத்திற்கும் அடிப்படையாயிற்று...

பூக்களை
உவமையாகவும்,
உருவகமாகவும் கையாளும் வண்ணம்
மக்களும் மலர் வகைகள் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்..

மலர்களின் மருத்துவத் தன்மையை நன்கு உணர்ந்து
நோய் நீக்கவும்,
தளர்ச்சி போக்கவும்,
ஊட்டம் பெறவும்
பயன்படுத்தியுள்ளனர்..

ஈராயிரம் ஆண்டுகளுக்கு 
முன்பு வாழ்ந்த கபிலர்,
தம்முடைய குறிஞ்சிப்பாட்டு என்னும் இலக்கியத்தில் வரிசையாக 99 வகைப் பூக்களைக் குறிப்பிடுகின்றார்..

இந்நூல் ஆரிய அரசர்
பிரகத்தனுக்குத்
தமிழ் கற்பிப்பதற்காக இயற்றப் பெற்றது...

எனவே,
இந்நூலில் பூக்கள் சிறப்பாகக் குறிக்கப் பெற்றுள்ளதால்
தமிழர் வாழ்வில் பூக்கள் பெற்றுள்ள முதன்மை இடத்தை எளிதில் அறியலாம்..


கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:


வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மல
ர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்

கபிலர் பெருமானால் குறிக்கப்பெறும் பூக்கள் வருமாறு :

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

பூக்களின் நிலைகளை அரும்பு,போது,மலர்,வீ,செம்மல் என ஐந்து வகையாகப் பகுத்தனர்..
மலருக்கு அடுத்து அலர் என்னும் நிலையையும் பகுத்தனர்..பூ தோன்றும் நிலை அரும்பு எனப்படுகிறது..மேலும் முல்லை அரும்பு அல்லது மல்லிகை அரும்பு போல் சிறியதாயும் கூர்மையாயும் இருப்பது அரும்பு..அடுக்கு மல்லிகை அரும்பு போல் சற்றுப் பெரியதாகவும் மொட்டையாகவும் இருப்பது மொட்டு..தாமரை அரும்பு போல் பெரிதாக இருப்பது முகை..
இதுவும் பசு முகை,எதிர்முகை, கொழுமுகை என மூவகையாகும்..

பூக்கள் விரியாத நிலையில் இதழ் பொதிந்து இருக்கும்..
அஃதாவது மகரந்தப் பைகள் அவிழாமல் பொதிந்து இருக்கும்.. அஃதாவது கருவை ஏற்றுக் கொள்ளும் கருப்பை பொதிந்து கிடக்கும்.. இந்நிலை போது எனப் பெறும்...
பொதிந்து கிடப்பது போது என்றாயிற்று எனக் கூறலாம்..

(பொதிந்து வைத்தல் என்றால் பொட்டலம் கட்டுவது போல் ஒன்றை உள்ளே வைத்திருத்தல்..)

மல் என்பதற்கு வளம் என்றும் பொருள் உண்டு..
எனவே தாவரங்களின் இனப் பெருக்கத்திற்கு அடிப்படையான வளம் உடையதான பூவின் நிலை மலர் எனப்பெறும்..

(இவ்வாறு வளத்தை உருவாக்காதவை - மல் அற்றவை - மலடு எனப்பெறும்..)

மலர்ந்த பின்பு,
தேன் நீங்கி மகரந்தம் கெட்டு வாடிப்போன - அலர்ந்து போன - பூ அலர் எனப் பெறும்..
பூ வாடிய நிலை செம்மல் ஆகும்..மரத்தில் இருந்து உதிர்ந்து கீழே வீழும் பூ வீ எனக்
குறிக்கப் பெறும்..

மகரந்தப்பை, கருப்பை முதலியன பூக்களின் அடிப்படை உறுப்புகளாகும்..
இவை உரிய பக்குவ நிலைக்கு வரும்வரை, இவற்றைத் தழுவி இருப்பது,
புல்லி எனக் கூறப்பெறுகிறது..

அவ்வாறு புல்லுதல் அல்லாதது (அல்+இ) அல்லி ஆகும்..

சுருக்கமாகக் கூறுவதாயின் அகஇதழ் அல்லி என்றும், புற இதழ் புல்லி என்றும் சொல்லப்படும்...

பூக்காம்பு - தண்டு சிறியதாக இருப்பது காம்பு எனப்பெறும்..

பருமனாகவும் மென்மையாகவும் இருக்கும் காம்பு தாள் அல்லது தண்டு எனப்பெறும்..

உள்துளையுள்ள காம்பு நாளம் எனப்பெறும். அக்காலத்தில் தமிழ்நாட்டவரிடமே
இருந்த இந்நுட்பமான அறிவியல் அறிவு, இக்காலத்திலும்கூடப் பிறமொழிகளில் அமையவில்லை.

பூவின் பாகங்கள்:

புல்லி வட்டம்
அல்லி வட்டம்
மகரந்த வட்டம்
சூலகம் 
என நான்கு வகைப்படும்..

இவற்றுள் புல்லி வட்டம் பூவின் புற அடுக்காகும்.. இது பச்சை நிறத்தில் இருக்கும்..
அல்லி வட்டம் என்பது பூவிதழின் தொகுப்பாகும்..

மகரந்தவட்டமானது
அல்லி,
மகரந்தப்பை,
மகரந்த இழை,
சூல்,
புல்லி,
பூத்தளம்
எனப் பகுக்கப்படும்..

சூலகத்தில் 
சூல்முனை,
சூல்தண்டு,
சூல்பை,
ஆகியவை உள்ளன..

இப்பாகுபாட்டை எல்லாம் பண்டைக்காலத்திலேயே பாங்குடன் நம் முன்னைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதுதான் தமிழில் உள்ள அறிவியல் வளத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்..



கருத்துகள் இல்லை: