கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 1 மே, 2011

புறம்பு நூறு


புறநானூறு, பொங்கிவரும் வீரத்தின் புனலாறு; செங்கழல் அணிந்த வேந்தர்களின் செந்தழல் சீற்றம் குருதியாக அப்புனலாற்றில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெகுளியின் வெப்ப ஊற்றுப் பெருக்கில் விளைந்த பாடல்கள் அவை. இரும்பின் சுவை கண்ட வஞ்சினமிக்க வீரர்கள் புகுந்து விளையாடிய போர்களப் பாடல்கள் புறநானூற்றில் பதிவாகியுள்ளன; ஆழ்ந்தகன்ற அறிவுடன் கூடிய செறிவுமிக்க அறப்பாடல்களும் வாழ்க்கைக்கு விதியாகியுள்ளன. மொத்தத்தில் பண்டைத் தமிழர் வரலாற்று ஆவணம் இந்நூல்._(முனைவர் இராம குருநாதன்)

ஆம், முனைவர் இராம. குருநாதன் அவர்களின் புறநானூறு ஒரு புதிய பார்வை அருமையான கையேடு. புறப்பாடல்களை பாட விரும்புவோர் ஐயாவின் இந்தக் கையேட்டை வைத்திருப்பது சிறந்தது. அக்குவேறு ஆணிவேறாய் ஒவ்வொரு பாடலையும் ஆய்ந்து எழுதியிருக்கும் குறிப்பு ஒவ்வொன்றையும் தமிழர் அறிந்திருக்க வேண்டும். இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகால மக்களின் வரலாற்றில் நிகழ்ந்துள்ள நன்மை தீமைகளை அறிய இந்நூல் உதவுகிறது. ஒவ்வொரு தமிழரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய அரிய நூல். நன்றியன் ச.உதயன்.

இயல் - புறநானூறு

பாடியவர்: கணியன் பூங்குன்றன்

திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி


யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.(192)

**
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

சாதலும் புதுவது அன்றே ;

வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.(192)


உற்றுணந்தது:

உலகத்து ஊர்களிலே உலகத்தார் அனைவரும் உறவுகளே அவ்வுறவுகளோடு கூடி வாழ்கையில்,
தீமையும் நன்மையும் பிறர்தருவதில்லை; நோவதும் அந்நோயிலிருந்து நீங்குவதும் முன்பு கூறியது போன்றதே;சாதலும் புதியதன்று; வாழ்தல் இனிது என்று மகிழ்தலும் இல்லையே;சினந்து இவ்வுலகம் நிலையில்லாதது என்பதும் இல்லைவேயில்லை;

மின்னல் வானம் இடைவிடாது நீரை வார்க்கத் தலைப்பட்டது; அந்நீர் கற்களிலே அடிபட்டு அடிபட்டு ஒலித்துக்கொண்டு வலிமையான பெரிய ஆறாய் ஓட; அந்நீரில் பயணிக்கும் ஒற்றை துடுப்புடைய புணை(தெப்பம்,பரிசில்)அவ்வழியே செல்லும்; அதுபோல் அருமையான இந்த உயிரைக் கொண்ட வாழ்வும் தலைப்பட்டது என்று திறனுடையோர் கண்டு தெளிந்தனர். ஆதலின், பெருமையாய் பெரியோரென்று புகழ்தலும் இல்லை அதனினும் சிறியோரென்று இகழ்தலும் இல்லையே.

"பட்டது தான் வாழ்க்கை;படுவது தான் யாக்கை"_கிருஸ்ணன் பாலா
"கையில் நூலைப் பிடித்துக்கொண்டு நூல்கட்டையை ஓடவிடும் போழ்து நூலிருக்கும் வரைதான் கட்டை ஓடும் என்பது சித்தாந்தம்"
பதிவர்: _ச.உதயன்.

கருத்துகள் இல்லை: